சபரிமலை ஐயப்பன் சிலையை யார் செய்ய வேண்டும்? சீட்டுப் போட்டுப் பார்க்கப்பட்டது தெரியுமா?

Sabarimala Ayyappan Temple
Sabarimala Ayyappan Temple
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல விரும்புபவர்கள், கார்த்திகை மாதத்தில் மாலையணிந்து, நாற்பத்தெட்டு நாட்கள் வரை விரதமிருந்து சபரிமலை சென்று ஐயப்பனை வழிபட்டுத் திரும்பும் வழக்கம் இருக்கிறது. இவ்வேளையில், நாமும் சபரிமலை ஐயப்பன் கோயில் குறித்த நான்கு தகவல்களைத் தெரிந்து கொள்ளலாமா?

ஐயப்பன் சிலை

சபரிமலையில் பரசுராமரால் நிறுவப்பட்டதாகக் கருதப்படும் ஐயப்பன் சிலை 1950 ஆம் ஆண்டில் நடைபெற்ற தீவிபத்தில் சேதம் அடைந்தது. அதனைத் தொடர்ந்து சிலையை யார் செய்ய வேண்டும்? என்று தேவப்பிரசன்ன குடவோலை முறைப்படி, ஐயப்பன் சந்நிதி முன்பாகச் சீட்டுப் போட்டுப் பார்க்கப்பட்டது. அதில், மதுரை நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை மற்றும் பி. டி. ராஜன் ஆகியோர் பெயர்கள் வந்தன. அவர்களிருவரும் அதனை ஏற்று, கும்பகோணம் அருகிலுள்ள சுவாமிமலையில் இருந்த தேசிய விருது பெற்ற சிற்பக்கலைஞர் ராமசாமி ஸ்தபதியைக் கொண்டு புதிய ஐயப்பன் சிலையை உருவாக்கச் செய்து சபரிமலைக்கு வழங்கினர். தற்போது அந்தச் சிலையே வழிபாட்டுக்குரியதாக இருந்து வருகிறது.

ஹரிவராசனம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இரவு வேளையில், நடையடைப்புக்கு முன்பு ‎ஹரிவராசனம் என்ற பாடல் இசைக்கப்படுகிறது. சபரிமலையில் இறைவன் ஐயப்பன் உறங்கச் செல்வதற்கு முன் ‎இசைக்கப்படும் இந்தத் தாலாட்டுப் பாடல் ஸ்ரீ கம்பக்குடி குளத்தூர் ஸ்ரீனிவாச ‎அய்யர் என்பவர் இயற்றி இசை அமைத்துப் பாடியதாகும். ஐயப்பன் சந்நிதியில் சுவாமி அத்தாழ பூசைக்குப் பிறகு, இந்தத் தாலாட்டுப் பாடலை இசைக்கக் கோயில் தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் ஏற்றுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து, கோயில் நடையில் பாடகர் கே.ஜே. யேசுதாஸ் ‎பாடிய பாடல் ஒலிபரப்பப் படுகின்றது. அவ்வேளையில், பக்தர்கள் மட்டுமல்லாமல், அரசுப் பணியில் ஈடுபட்டிருப்பவர்களும், வணிகத்தில் ஈடுபட்டிருப்பவர்களும் எழுந்து நின்று மரியாதை செய்கின்றனர். 

இருமுடி வண்ணங்கள்

சபரிமலைக் கோவிலுக்குப் புனிதப் பயணம் செல்லும் பக்தர்கள், இறைவனுக்குப் படைப்பதற்கான ‎பொருட்களை வைப்பதற்கு பயன்படுத்தும் , பருத்தித் துணியில், ‎கைகளால் தைக்கப் பெற்ற இரு அறைகள் கொண்ட பையினை பள்ளிக்கட்டு அல்லது இருமுடி என்று சொல்கின்றனர். இந்த இருமுடியில் பக்தர்கள் கொண்டு வரும் நெய்யைக் கொண்டு சுவாமி ஐயப்பனுக்கு நெய்யபிசேகம் செய்யப்படுகிறது. சபரிமலைக்கு முதல் முறையாகப் புனிதப் பயணம் செல்லும் பக்தர்கள் ‎குங்குமப்பூ நிறம் கொண்ட இருமுடியையும், மற்றவர்கள் கருப்பு அல்லது நீல ‎வண்ணத்திலான இருமுடிகளையும்  பயன்படுத்துகின்றனர்.

இதையும் படியுங்கள்:
சைவ திருமுறைகளை தொகுத்து வழங்கிய ராஜ ராஜசோழன்!
Sabarimala Ayyappan Temple

மண்டல விரதம்

சபரிமலையில் இருக்கும் ஐயப்பனை 41 நாட்கள் விரதம் இருந்து வழிபட வேண்டும் என்பது ஒரு நடைமுறையாக இருக்கிறது. மணிகண்டனைத் தீய எண்ணத்துடன் புலிப்பால் கொண்டு வரும்படி, காட்டுக்கு அனுப்பிய ராணியும், அவருக்குத் துணை போன மந்திரியும் 41 நாட்கள் பெரும் துன்பமடைந்தனர். அந்த நாட்களில், அவர்கள் விரும்பிய எதையும் சாப்பிட முடியாமல், உடலையும் வருத்திக் கொள்ள நேரிட்டது. அவர்களது தீய எண்ணத்துக்குத் தண்டனையாகவே அந்த நாட்கள் முழுவதும் அமைந்தன. கடைசியில், காட்டிற்குள் சென்று திரும்பி வந்த ஐயப்பனிடம் அவர்கள் மன்னிப்பு வேண்டிச் சரணடைந்தனர். அவர்கள் இருவரும் 41 நாட்கள் துன்புற்றிருந்ததை நினைவுபடுத்தும் வகையிலேயே, ஐயப்ப பக்தர்கள் 41 நாட்களுக்கான விரதம் இருக்கும் நடைமுறை ஏற்பட்டது. பின்னர் அதுவே ஒரு மண்டலமாக, 48 நாட்களாக மாற்றம் பெற்றது.

logo
Kalki Online
kalkionline.com