பரிசுத்த பக்தியின் மூலம் பகவானையே கட்டுப்பட வைத்த சகாதேவன்!

Sri Krishna with Sagadevan
Sri Krishna with Sagadevan
Updated on

‘இறைவன் மீது வைக்கப்படும் தூய்மையான பக்திக்கு அவரைக் கட்டிப் போடக்கூடிய வல்லமை உண்டா? இறைவனை பக்தியால் வெல்ல முடியுமா?’ என்றெல்லாம் பலருக்கும் தோன்றும். ‘முடியும்’ என்று நிரூபித்துள்ளது பஞ்சபாண்டவர்களில் சகாதேவனின் உண்மையான இறை பக்தி. அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

மகாபாரதப் போருக்கு முன்னர் ஒரு சமயம் ஸ்ரீ கிருஷ்ணர் பாண்டவர்களில் ஒருவரான சகாதேவனிடம், “நான் அமைதியை நிலைநாட்ட விரும்புவதால், நாளை ஹஸ்தினாபுரம் சென்று இது குறித்து பேசப்போகிறேன். நீதான் சாஸ்திரங்களிலும், ஜாதகம் கணிப்பதிலும் வல்லவனாயிற்றே! போரை நிறுத்த ஏதேனும் வழி இருந்தால் கணித்துச் சொல். அதையும் முயற்சிக்கிறேன்” என்றார்.

இதையும் படியுங்கள்:
இராவணனின் தாய்க்காக மகாவிஷ்ணு உருவாக்கிய 'கன்னியா வெந்நீரூற்று'!
Sri Krishna with Sagadevan

சகாதேவன் தன்னுடைய ஆருட சாஸ்திர அறிவால் ஸ்ரீ கிருஷ்ணர் போரை மூட்டவே ஹஸ்தினாபுரம் செல்கிறார் என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தான். இருப்பினும், போரை நிறுத்துவதற்கான உபாயத்தை ஸ்ரீ கிருஷ்ணரிடம் கூறத் தொடங்கினான்.

“அர்ஜுனனின் சக்தி வாய்ந்த வில்லான காண்டீபத்தை முறித்தெறிந்து, பீமனின் சக்தி வாய்ந்த கதாயுதத்தை உடைத்தெறிந்து, நல்லவனான கர்ணனுக்கு முடி சூட்டலாம். இவற்றிற்கு மேலாக ஹஸ்தினாபுரத்திற்கு தூது செல்லவிருக்கும் உன்னை நான் கட்டிப்போட்டால், நிச்சயமாக போர் நடக்காது. இவை அனைத்தையும் செய்ய முடியுமா?” என்று கேட்டான் சகாதேவன்.

சகாதேவனின் பேச்சைக் கேட்டு, ஸ்ரீ கிருஷ்ணர் சிரிக்க ஆரம்பித்தார். “என்னை எவ்வாறு உன்னால் கட்டிப்போட முடியும்?” என்று கூறிவிட்டு ஸ்ரீ கிருஷ்ணர் பல்லாயிரக்கணக்கான கிருஷ்ணராக வடிவெடுத்தார். உடனே சகாதேவன் தியான நிலையில் அமர்ந்து கிருஷ்ணரை நினைத்து மனதிற்குள் மந்திரத்தை ஜபிக்க ஆரம்பித்தான்.

இதையும் படியுங்கள்:
பாவங்கள், நோய்களைப் போக்கும் பாலி தீர்த்த எம்புல் கோயிலின் அமானுஷ்ய ரகசியம்!
Sri Krishna with Sagadevan

சகாதேவன் ஒவ்வொரு முறை மந்திரத்தை ஜபிக்கும்போதும் ஸ்ரீ கிருஷ்ணரின் ஒவ்வொரு ரூபம் மறைந்து மற்றதோடு இணைந்தது. இறுதியாக, அனைத்து ரூபங்களும் மறைந்து ஒரே கண்ணனாக மாறினார். இப்போது ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார், “போதும் சகாதேவா, நீ வென்றுவிட்டாய்! பக்தியால் இறைவனைக் கட்ட முடியும் என்று நிரூபித்துக் காட்டிவிட்டாய்” என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

இந்த இதிகாச நிகழ்வு கூறுவது போலதான் நாம் இறைவனின் மீது வைக்கும் தூய பக்தியால் அவனை மனமுறுக வைக்க முடியும், ஆனந்தத்தில் ஆழ்த்த முடியும், பக்தி எனும் கயிறால் கட்டிப்போடவும் முடியும். நாம் வைக்கும் பக்திக்கு இறைவனையே வெல்லக்கூடிய வல்லமையுண்டு என்பதையே இந்நிகழ்வு உணர்த்துகிறது.

logo
Kalki Online
kalkionline.com