இராவணனின் தாய்க்காக மகாவிஷ்ணு உருவாக்கிய 'கன்னியா வெந்நீரூற்று'!

Kanniya Hot Springs
Kanniya Hot Springs
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

இலங்கையில், திருகோணமலை மாவட்டத்தில், திருகோணமலை நகரத்திலிருந்து 3.9 கிலோ மீட்டர் தொலைவில் இயற்கையாக அமைந்த ‘கன்னியா வெந்நீரூற்று’ அமைந்திருக்கிறது. இந்த இடத்தில் 90 முதல் 120 செ.மீ ஆழமுடைய ஏழு சிறிய சதுர வடிவான கிணறுகள் அமைந்துள்ளன. இயற்கையாகவே ஏற்பட்டிருந்த இந்த வெந்நீரூற்றில், நாளடைவில் செயற்கைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிணற்றிலுமிருந்து வெவ்வேறு வெப்பநிலையில் நீர் ஊறி வந்து கொண்டிருக்கும். இலங்கை செல்லும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இந்த கன்னியா வெந்நீரூற்றுகள் அமைந்ததற்கும் ஒரு கதை சொல்லப்படுகிறது.

இலங்கையை ஆட்சி செய்து கொண்டிருந்த சிவபெருமானின் தீவிர பக்தனான இராவணன், திருகோணமலையில் குடிகொண்டிருக்கும் கோணேஸ்வரர் கோயிலுக்குச் சென்றான். அக்கோயிலில் இருந்த சிவலிங்கத்தைக் கண்டு வியந்த இராவணன், அந்தச் சிவலிங்கத்தை அவன் தாய் வழிபடுவதற்காக அங்கிருந்து எடுத்துக் கொண்டு செல்ல விரும்பினான். அதனால் பாறையின் மீது இருந்த சிவலிங்கத்தை தனது வாளால் வெட்டி பெயர்த்து எடுக்க முற்பட்டான்.

அதனால் கடும் கோபம் கொண்ட சிவன், அந்த பாறையைத் தனது காலால் அழுத்தினார். அதனால், அந்தப் பாறைக்குள் சிக்குண்டான் இராவணன். அதிலிருந்து வெளியேற முடியாமல் இராவணன் தவித்தான். ஆனால், பாறைக்குள் சிக்கிக் கொண்ட இராவணன் இறந்துவிட்டதாகப் பலரும் நினைத்தனர். அவனின் தாய்க்கும் அந்த செய்தி சென்றடைந்தது. அதனை நினைத்து வருந்திய அவனின் தாய், அதிர்ச்சியில் உயிரிழந்தாள். ஆனால், இராவணனோ இறக்கவில்லை. சிவனை பிரார்த்தனை செய்து, தாம் செய்த செயலை மன்னிக்கும்படி வேண்டினான். சிவபெருமானும், தனது பக்தனை மன்னித்தார்.

அதன் பின்னர் சிவபெருமானிடமே, அங்கிருந்த லிங்கத்தைக் கேட்டுப் பெற்ற இராவணன், அந்த லிங்கத்தைக் கையிலெடுத்துக் கொண்டு கிளம்பினான். அவன் செல்லும் வழியில், விஷ்ணு அந்தணர் வடிவம் எடுத்து இராவணனைச் சந்தித்து, அவனது தாயார் உயிரிழந்த செய்தியைத் தெரிவித்தார்.

அதைக் கேட்டதும் இராவணன் வருத்தத்தில் ஆழ்ந்தான். அந்த அந்தணர், இராவணனைத் தேற்றி, அந்த இடத்திலேயே, இறந்த தாயாருக்குச் செய்ய வேண்டிய இறுதிக்கடமைகளைச் செய்யும்படி அறிவுறுத்தினார். இப்பகுதியிலேயே, அவனுடைய தாயாருக்கான இறுதிக் கடமைகளைச் செய்தால், அவனது தாயாரின் ஆன்மா சொர்க்கம் செல்வது உறுதி என்று சொன்னார். இராவணனும் அதனை ஏற்றுக் கொண்டதுடன், அந்தணர் உருவிலிருந்த விஷ்ணுவிடமே, இறுதிக்கடமைகளைச் செய்ய ஒத்துழைப்பு நல்கும்படி வேண்டினான்.

இதையும் படியுங்கள்:
ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் இருக்க சந்திராஷ்டமத்தை கண்டு பயம் ஏன்?
Kanniya Hot Springs

அதற்குச் சம்மதித்த அந்தணர், இராவணனை அழைத்துக் கொண்டு திருகோணமலைக்கு மேற்கிலுள்ள கன்னியா என்னும் இடத்திற்குச் சென்று, அவ்விடத்தில் தமது கையில் இருந்த தடியினால் ஏழு இடங்களில் ஊன்றினார். அந்தணர் உருவத்திலிருந்த மகாவிஷ்ணு தடி ஊன்றிய ஏழு இடங்களிலும் வெந்நீரூற்றுக்கள் தோன்றின. அதன் பிறகு, அந்தணர் உருவத்திலிருந்த மகாவிஷ்ணு, இராவணனைக் கொண்டு, அவனின் தாய்க்கான இறுதிக் கடமைகளைச் செய்தார் என்று இந்த கன்னியா வெந்நீரூற்று குறித்துப் புராணக்கதைகள் சொல்கின்றன.

இதையும் படியுங்கள்:
நோய்களை குணமாக்கும் அதிசய தீர்த்தம் உள்ள இடம்... அர்ஜுனனே வந்து வழிபட்ட தலம்... எங்கே தெரியுமா?
Kanniya Hot Springs

எனவே இந்தக் கன்னியா நீரூற்றுப் பகுதி இறந்தோருக்கான இறுதிக் கடமைகள் செய்யும் புனிதத்தலமாகவும் ஆகிவிட்டது. இப்பகுதியில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் பலரும் தங்கள் குடும்பத்தினரின் இறப்புகளுக்குப் பின்பான இறுதிக்கடமைகளைச் செய்து கொண்டிருக்கின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com