
கர்ணன் பாண்டவ புத்திரன் என்பதை, அவன் இறந்த பிறகே இந்த உலகம் அறிந்தது. நல்லவனான கர்ணனுக்கு ஏன் இந்த அவல நிலை நிகழ்ந்தது. இதுவும் ஒரு கிருஷ்ண லீலை என்றுதான் கூறப்படுகிறது. பூர்வ ஜன்மத்தில் கர்ணன், ‘சஹஸ்ர கவசன்’ என்ற ஒரு அசுரனாக இருந்தான். அவர் தேவர்களை நிர்தாட்சிண்யமின்றி தாக்கினான். பிரம்ம தேவனிடம் அவன் பெற்ற வரத்தின்படி அவனது சரீரம் ஆயிரம் சட்டைகளால் போர்த்தப்பட்டிருந்தது. அவற்றை நீக்காமல் யாராலும் அவனைக் கொல்ல முடியாது என்பது விதி.
சஹஸ்ர கவசனை தாக்க விரும்பும் வீரன் 12 வருடங்கள் தவமிருந்து, அதன் பின்னர் 12 வருடங்கள் அவனுடன் தொடர்ந்து போர் புரிந்தால் ஆயிரம் கவசங்களில் ஒன்றை அறுக்க முடியும். இப்படி 24 வருடங்கள் வீதம் தவமும் போரும் யாகமும் செய்து ஆயிரம் கவசங்களை ஒன்றன்பின் ஒன்றாக அறுத்தெடுக்கலாம். இதை யாரால் சாதிக்க முடியும்?
இதனால் துயரமடைந்த தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவரும் நர நாராயணன்களாக அவதரித்தார். சஹஸ்ர கவசனை அழிக்க இருவரும் கூட்டு சேர்ந்தனர். நரன் 12 வருடங்கள் தவம் செய்ய நாராயணன் போர் புரிந்து கவசங்கள் அனைத்தையும் அறுத்து வந்தார். இப்படிப் பல வருடங்கள் விடாமுயற்சி செய்து 999 கவசங்கள் அறுத்து எறிந்தார்.
இதற்குள் பிரம்ம பிரளயமே வந்தது. எஞ்சியிருந்த ஒரு கவசத்துடன் சஹஸ்ர கவசன் சூர்ய லோகம் போய்ச் சேர்ந்தான். இந்த சஹஸ்ர கவசனே சூரிய புத்திரனாக கர்ணன் என்ற பெயரில் மீதமுள்ள ஒரு கவசத்தோடு பிறப்பெடுத்தான். இந்தக் கவசமும் அறுக்கப்பட வேண்டியதே.
இந்தக் காரியத்திற்காகவே மகாவிஷ்ணு நரன் ரூபத்தில் அர்ஜுனன் ஆகவும், நாராயண அம்சத்தில் ஸ்ரீ கிருஷ்ணராகவும் அவதரித்தனர். பன்னிரண்டு வருடங்கள் பாண்டவர்கள் வனவாசம் செய்தது, அந்த நரனுடைய 12 வருட தவமேயாகும். ஒரு கவசத்தை இந்திரன் மூலம் நீக்கிய விஷயம் நாம் எல்லோரும் அறிந்ததே. கவசம் நீங்கியதால்தான் அர்ஜுனனால் கர்ணனைக் கொல்ல முடிந்தது.
நம்முடைய இந்த ஜன்ம வாழ்க்கை நிகழ்வுகளுக்கும் காரணம் தெரியாமல் திகைக்கிறோம். இவற்றுக்கும் காரணம் பூர்வ ஜன்ம கர்மாக்களேயாகும். கர்ணனின் வாழ்க்கை அமைந்த விதம் இந்த உண்மையை நமக்கு நிரூபிக்கிறது.