

தென்காசி மாவட்ட சங்கரலிங்க சுவாமி, கோமதி அம்மன், சங்கரநாராயணர் திருக்கோவில் சைவ-வைணவ ஒற்றுமையின் சின்னமாக விளங்குகிறது. 1022ஆம் ஆண்டு உக்கிரப் பாண்டியன் கட்டிய இந்த பிருத்வி ஷேத்திரத்தில், அரிதான சங்கரநாராயணர் திருமேனி, புன்னை தலமரம், ஆடித்தபசு, சித்திரை, நவராத்திரி போன்ற திருவிழாக்கள், மகா சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி சிறப்பாக நடைபெறுகின்றன.
தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு சங்கரலிங்க சுவாமி, கோமதி அம்மன், சங்கரநாராயணர் திருக்கோவில் ஆன்மீக வரலாற்றிலும், சைவ-வைணவ ஒற்றுமையிலும், சக்தி வழிபாட்டிலும் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள ஆலயமாகும்.
கி.பி. 1022 ஆம் ஆண்டில் ஸ்ரீ சங்கரநாராயணர் கோவில் உக்கிரப் பாண்டியன் என்னும் மன்னனால் கட்டப்பட்டது. பாண்டிய நாட்டு பஞ்சபூதத் தலங்களில் பிருத்வி ஷேத்திரம் இது. ஒன்பது நிலைகளைக்கொண்ட 125 அடி உயரம் உள்ளது ராஜகோபுரம். இக்கோவிலின் தல மரம் புன்னை மரமாகும். ஆடித்தபசு திருவிழா இந்த ஊரின் தனிச்சிறப்பாகும்.
சங்கரநாராயணர் திருமேனி:
இங்குள்ள சங்கரநாராயணரின் திருமேனி மிகவும் அரிதானது. வலது புறம் சிவபெருமான். இடதுபுறம் மகாவிஷ்ணு. ஜடாமுடி, கங்கை பிறைச் சந்திரன், மழு, ருத்ராட்சம் போன்ற சிவபெருமானின் அடையாளங்கள் ஒருபுறமும், கிரீடம், சங்கு, துளசி மாலை, பட்டாடை போன்ற மகாவிஷ்ணுவின் அடையாளங்களும் ஒரே திருமேனியில் இணைந்து காட்சி தருகின்றன. இவை சைவமும் வைணவமும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் விதத்தில் அமைந்துள்ளது.
சங்கரன்கோவில் கோமதி அம்மன் கோயில் புற்றுமண் பிரசாதம் தோல் நோய்களைப் போக்குவதாகவும், விஷக்கடி மற்றும் தீராத பிணிகளை நீக்குவதாகவும் நம்பப்படுகிறது. இது பிரகாரத்தின் வாயு மூலையில் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
புற்று மண்ணின் சிறப்புகள்:
ஐம்பூதங்களில் இக்கோவில் நிலம் சம்பந்தமான மண் தலமாகத் திகழ்வதால், இக்கோயிலில் உள்ள புற்றுமண் வேறு எங்கும் கிடைக்காத ஒன்றாகக் கருதப்படுகிறது. மருத்துவ குணமுடைய புற்றுமண்ணை உடலில் பூசியும், தங்கள் வயல்கள், வீடுகளில் தெளித்தும் மக்கள் வேண்டுதல்களை செய்கிறார்கள். இதன் மூலம் வயல், வீடுகளில் செல்வம் செழிக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
தீராத வயிற்று வலி, சரும பிரச்சனைகள் மற்றும் அரிப்புகள் உள்ள இடங்களில் இந்த மண்ணைப் பூசிக்கொள்கிறார்கள்.
பாம்பு மற்றும் பூச்சிக்கடி விஷம் தாக்காமல் இருப்பதற்கு இது மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
ஒரு துளி புற்றுமண்ணை எடுத்து வாயில் போட்டுக்கொள்வதும் நடைமுறையில் உள்ளன.
இந்த மண்ணை நீரில் குழைத்து நெற்றியில் இட்டுக்கொள்வது வழக்கம்.
நாகதோஷம் உள்ளவர்கள் புற்றுக்கு பால் ஊற்றி, புற்றுமண்ணை நெற்றியில் எஇட்டுக்கொள்ள தோஷங்கள் நீங்கி நல்வாழ்வு பெறுவார்கள்.
நாகதோஷம், செவ்வாய் தோஷம் போன்ற பல்வேறு கிரக தோஷங்கள் மற்றும் குடும்பப் பிரச்னைகளை நீக்குவதாக இந்த புற்றுமண் பிரசாதம் நம்பப்படுகிறது. மக்கள் இதை பக்தியுடன் வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். அது வெறும் மண்ணல்ல.. அம்மன் அருளின் அடையாளம் என்று நம்புகின்றனர்.
சக்கரக்குழி பிரார்த்தனை:
தீவினைகளைப் போக்கும் சக்கரக் குழி அம்மன் சன்னதிக்கு நேர் எதிரே அமைந்துள்ளது. இந்த சக்கரக் குழியில் அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்ய நினைத்தது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருவாவடுதுறை ஆதீனம் சார்ந்த வேலப்ப தேசிக சுவாமிகள் அருளிய சக்தி மிக்க ஸ்ரீ சக்கரம் அந்த குழியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த குழியில் அமர்ந்து கண்களை மூடி பிரார்த்தனை செய்ய நினைத்தது ஈடேறும் என்று சொல்லப்படுகிறது. கோமதி அம்மன் சன்னதிக்கு முன்புள்ள மாவிளக்கு ஏற்றும் சக்கரக்குழியில் அமர்ந்து பிரார்த்தனை செய்து, புற்று மண் பிரசாதத்தை அணிந்தால் தீராத பிணிகளும், மனக்கவலைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை.
திருவிழாக்கள்:
ஆடி மாதத்தில் 12 நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஆடித் தபசு திருவிழா மற்றும் தேரோட்டம், சித்திரை மாதத்தில் சுமார் 10 நாட்களுக்கு மேல் நடைபெறும் சித்திரைத் திருவிழா, ஐப்பசி மாதம் திருக்கல்யாண உற்சவங்கள் மற்றும் சிறப்பு வழிபாடுகள், கோமதி அம்மனுக்கு 9 நாட்களும் வெவ்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு நவராத்திரி திருவிழா, மகா சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
கோவில் திறந்திருக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் 12:30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 9.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
எப்படி செல்வது?
அருகில் உளள விமான நிலையம் மதுரைம. துரையிலிருந்து சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ரயில் நிலையம் திருநெல்வேலி. திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய நகரங்களில் இருந்து பேருந்து வசதிகள் அதிகம் உள்ளன.
இந்தத் தொகுப்பின் வழியே சங்கரன்கோவில் திருத்தலத்தின் வரலாற்றுச் சிறப்புகள், புற்றுமண் பிரசாதத்தின் ஆன்மீக மற்றும் மருத்துவ குணங்கள், மற்றும் தோஷ நிவர்த்திக்கான சரியான வழிபாட்டு முறைகளைத் துல்லியமாகத் தெரிந்துகொண்டு, உங்கள் குடும்பத்தில் உள்ள பிணிகளையும் மனக் கவலைகளையும் நீக்கி சுபிட்சத்தைப் பெற முடியும்.