
ஒருவர் செய்த பாவ, புண்ணியங்களே அவரது சந்ததியை சேரும். வாழ்நாள் முழுவதும் நன்மைகள் செய்தால் வாழையடி வாழையாக நம் சந்ததியும் நலமாக வாழும். ‘சேர்த்து வைத்த புண்ணியம்தான் சந்ததியை காக்கும்’ என்று சொல்வார்கள்.
பாரதப் போரில் பாண்டவர்கள் ஸ்ரீ கிருஷ்ணனின் உதவியால் வெற்றி பெற்றனர். இதனால் கௌரவர்களின் தந்தை திருதராஷ்டிரன் வருத்தமுடன், ‘கிருஷ்ணா… நான் பார்வையற்றவனாக இருந்தாலும் தர்ம வழியில்தான் ஆட்சி புரிந்தேன். அப்படி இருந்தும் இப்போது புத்திர சோகத்தால் வாடுகிறேன். என் நூறு பிள்ளைகளில் ஒருவர் கூட போரில் உயிர் திரும்பவில்லையே. எனக்கு மட்டும் ஏன் இந்தக் கொடுமை’ எனக் கேட்டார்.
ஸ்ரீ கிருஷ்ணர் சிரித்தபடி, ‘நான் சொல்லும் கதையைக் கேட்டால் உங்களுக்கு உண்மை புரியும். நீதி தவறாத மன்னர் ஒருவர் இருந்தார். அவரிடம் சமையல்காரர் ஒருவர் புதிதாக வேலைக்கு சேர்ந்தார். அவரது கை பக்குவம் மன்னருக்கு மிகவும் பிடித்துப் போனது. தனது திறமையைக் காட்டி மன்னரின் மனதில் இடம் பிடிக்க சமையல்காரரும் விரும்பினார். அதற்காக அரண்மனை குளத்தில் வசித்த அன்னத்தின் குஞ்சு ஒன்றை யாருக்கும் தெரியாமல் பிடித்து வந்து இரவோடு இரவாக மன்னருக்கு சமைத்துக் கொடுத்தார். அது என்ன உணவு என்று தெரியாமல் மன்னரும் அதை சுவைத்து மகிழ்ந்தார். அதோடு, அடிக்கடி அந்த உணவை சமைத்து தரும்படியும் கட்டளையிட்டார்.
இப்போது சொல்லுங்கள், மன்னர் மற்றும் சமையல்காரர் இருவரின் தண்டனைக்குரியவர் யார்’ என திருதராஷ்டிரரிடம் கேட்டார் ஸ்ரீ கிருஷ்ணர். உடனே திருதராஷ்டிரன் ‘தான் சாப்பிடுவது என்ன உணவு என்பது கூட தெரியாமல் ருசித்துச் சாப்பிட்ட மன்னவனே குற்றவாளி’ என்றார்.
‘நீதி தவறாத மன்னர் தாங்கள் என்பதை நிரூபித்து விட்டீர். அதன் காரணமாகத்தான் உங்களுக்கு நூறு மகன்களும் சிறந்த மனைவியும் இப்பிறவியில் கிடைத்தனர். நான் சொன்ன கதை உமது முற்பிறவியைப் பற்றியதுதான். அந்த அன்னக்குஞ்சு சமையலை தெரியாமல் உண்ட மன்னன் நீர்தான். செய்த பாவம் என்னவென்று இப்போது உங்களுக்குப் புரிந்திருக்குமே.
தினமும் அன்னத்தின் மாமிசத்தை என்னவென்று தெரியாமல் ரசித்து சாப்பிட்டீர் அல்லவா? இப்படிக் கண்ணிருந்தும் குருடனாக இருந்ததால் இந்தப் பிறவியில் இந்த நிலைக்கு ஆளாக நேர்ந்தது. குஞ்சுகளை இழந்த தாய் அன்னம் போல பிள்ளைகளை இழந்து நீங்கள் துன்பம் அனுபவிக்க வேண்டி வந்தது’ என்றார்.
‘கிருஷ்ணா, முற்பிறவியில் செய்த பாவம் என்னையும் என் பிள்ளைகளையும் தண்டித்து விட்டதே’ என அழுதார் திருதராஷ்டிரன்.
இனியாவது நாமும் நற்செயல்களில் ஈடுபட்டு பிள்ளைகளுக்கு சொத்தாக புண்ணியத்தை விட்டுச் செல்வோம்.