

நாம் சர்வசாதாரணமாக சொல்லும் தொடர்களுக்குள் ஆன்மீக தத்துவங்கள் பொதிந்து கிடக்கின்றன. ஒரு சிலவற்றை இப்பதிவில் பார்ப்போம்...
1. தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்!
இந்த தொடரானது சாதாரணமாக வரும் உளறலோ பிதற்றலோ அல்ல! இது ஒரு தெய்வீக சமாச்சார விடுகதை; புராணத்தை வைத்து விளக்கிவிடலாம்.
தானம் கேட்கும் வறியவர்களுக்கு தட்டாமல் வழங்குபவர்தான் தட்டான். (இங்கு தட்டான் - மஹாபலிச் சக்கரவர்த்தியைக் குறிக்கிறது)
தட்டானுக்கு சட்டை போடுவது என்றால் தானம் கொடுக்க நினைப்பவரின் எண்ணத்தை தடுப்பது... அதாவது அவரின் ஈகை உள்ளத்தை மறைப்பது என்று பொருள்.
நம் மஹாபலிச் சக்கரவர்த்தி 99 அசுவமேத யாகம் செய்துவிட்டு நூறாவது அசுவமேத யாகம் செய்யும்போது பெருமாள் வாமன அவதாரத்தில் வந்து அவரிடம் தானம் கேட்கிறார். (குட்டை பையன் - வாமன அவதாரத்தை குறிக்கிறது) ஆனால் சுக்ராச்சாரியார் மஹாபலி தாரைவார்ப்பதைத் தடுக்க வண்டாக உருமாறி கமண்டலத்தின் வாயை நீர் வராதவாறு அடைத்துக்கொள்கிறார். அப்பொழுது நம் குட்டைப் பையன் வாமனர் என்ன செய்யறார்?
ஒரு குச்சியை (கட்டை) எடுத்து கமண்டலத்தின் குழாயை குத்தி சுக்ராச்சாரியருக்கு ஒரு கண் ஊனமாகி விடுமாறு செய்கிறார். பின் சுக்ராச்சாரியார் தன் தவறை உணர்ந்தார். அவரை மன்னித்து, கொடுப்பதில் வள்ளலான மஹாபலிச் சக்கரவர்த்தியின் புகழை உலகறிய செய்தவர் பெருமாள்.
இது தான் "தட்டானுக்குச் சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்…" என்பதற்கான விளக்கம்…
2. பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை..
குலசேகரன் என்றால் குலத்தை ரட்சிப்பவன் என்று பொருள்.
ஸ்ரீ என்றால் செல்வம், அந்த செல்வத்தின் அதிபதி லட்சுமியை மணக்க பெருமாளுக்கு பைனான்ஸ் செய்தவர் நம் குபேரன்.
ஆக பெருமாளின் குலம் பெருக ரட்சித்த குபேரன்தான் பெருமாளின் குலசேகரன். குபேரனுக்கு EMI கட்ட பெருமாளுக்கு பொருளீட்ட ஒரு ஸ்தலம் தேவைப்பட்டது. அப்பொழுது பெருமாளுக்கு ஏழுமலையை அளித்தவர் ஸ்ரீ வராகப்பெருமாள்.
அதனால் (வராகம் - பன்றி முகம் உடையவர் ) ஸ்ரீ வராகப்பெருமாளுக்கு நன்றி சொல்லி, குன்றின்மீது நின்றகோலத்தில் மக்களுக்கு அருள்புரிந்து அவருடைய குலசேகரனுக்கு (குபேரன்) சேரவேண்டிய பணத்தை கொடுத்து கடனை வென்றாராம் பெருமாள்.
இது தான் "பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை…" என்ற தொடருக்கான விளக்கம்.