

விநாயக பெருமானை எளிமையாக அவருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடலாம். அதேபோல் வன்னி இலையும் விநாயகருக்கு உகந்ததுதான். வன்னி இலையால் விநாயகரை அர்ச்சனை செய்து வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஒரு காலத்தில் வீமன் என்ற கொடிய வேடன் ஒருவன் இருந்தான். அவன் வழிப்பறி கொள்ளையிலே ஈடுபட்டான். அவன் கொள்ளையடித்து சேர்த்து வைத்திருந்த பொருளை ராட்சதன் ஒருவன் அபகரிக்க எண்ணி விரட்டினான். ராட்சதனை கண்டு பயந்து ஓடிய வீமன் ஒரு வன்னிமரம் மீது ஏறினான். அவன் ஏறும்போது அவன் கை பிடித்த இடத்தில் இருந்த வன்னி இலை கீழே இருந்த வரதகணபதியின் மேல் விழுந்தது.
அதன்பின் அந்த மரத்தின் மீது ராட்சதனும் ஏற அப்போது வன்னி மரத்து இலை விநாயகர் மீது விழுந்தது. மரத்தில் இருவரும் கட்டி புரண்டு சண்டை போட்டனர். இதில் அவர்கள் மாண்டு கீழே விழுந்தனர். ஆனால் அவர்களை அறியாமல் வன்னி மர இலையை விநாயகருக்கு போட்டதால் அவர்களுக்கு விநாயகரின் அருள் கிடைத்தது. அவர்கள் மோட்சம் அடைந்தனர்.
எனவே அருகம்புல்லுக்கு இணையாக வன்னி இலையை கொண்டும் விநாயகரை அர்ச்சனை செய்து பலன் பெறலாம். அதனால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். வன்னி மரம் சனீஸ்வர பகவானின் ஆன்மீக மூலிகையாகும்.
சிவனை மட்டுமே வழிபடும் வழக்கம் உள்ளவர் பிருகு முனிவர். இவரை பிருங்கி முனிவர் என்றும் அழைப்பர். இவர் ஒருநாள் சிவபெருமான் அருகில் பார்வதி தேவி இருந்த போதிலும், வண்டாக உருவம் கொண்டு, சிவனை மட்டுமே வலம் வந்த வணங்கினார். இதனால் கோபமுற்ற அம்பிகை சிவனை விட்டு விலகி முத்தாம்பிகை எனும் பெயரில் திருவாமாத்தூர் எனும் இடத்தில் தனிக்கோவில் கொண்டார். இதனை அறிந்த பிருகு முனிவர் மனம் வருந்தி அங்கு சென்று அம்பிகையிடம் மன்னிப்பு கேட்க, அம்பிகை அவரை மன்னித்து, தன் கோவில் தலமரமாக வன்னி மரமாகி பக்தர்களுக்கு அருள்பாலிக்க பணித்தார்.
அந்த தலம்தான் விழுப்புரத்தில் இருந்து 3 கிமீ தொலைவில் உள்ள திருவாமாத்தூர் முத்தாம்பிகை கோவில். இந்த தலத்தில்தான் பசுக்கள் தவமிருந்து கொம்புகளை பெற்றதாக தலவரலாறு கூறுகிறது.
வன்னி மர இலைகள் பார்ப்பதற்கு புளியமர இலைகளைப் போலவே இருக்கும். ஆனால், அவற்றைவிட உருவத்தில் சிறியது. வன்னி மரத்தின் மருத்துவ பயன்கள் .
வன்னி இலையை அம்மியில் வைத்து அரைத்து புண்கள் மீது வைத்துக் கட்டுப்போட்டால் அவை விரைவில் ஆறும். நரம்புத் தளர்ச்சியைக் குணமாக்கும் ஆற்றல் வன்னி இலைக்கு உண்டு.
வன்னி மர இலையை பசும்பால் விட்டு அரைத்து உண்ண உடலில் ஏற்படும் அரிப்பு நீங்கும்.
வன்னி இலைச்சாறும், பசு நெய்யும் வகைக்கு 350 கிராம் எடுத்து, அதில் வெண் குங்கிலியம் 50 கிராம் சேர்த்து எரிக்க ஒரு நெய் உண்டாகும் , அதனை,10-15 கிராம் வீதம் இரண்டு வேளை சாப்பிட்டு வர மேகவெட்டை,சொறி, சிரங்கு ஆகியவை நீங்கும்.
வன்னி மர பட்டையை சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு சாப்பிட மலச்சிக்கல் தீரும். வன்னி மரப்பட்டையை உலர்த்தி சூரணமாக்கி 2-4 கிராம் அளவு காலை, மாலை சாப்பிட்டு வர சளி ,இருமல் குணமாகும், வயிற்றில் ஏற்படும் மந்தம், அஜீரணம், வாத நோயும் தீரும்.
வன்னி மர இலை, காய்,பட்டை மூன்றையும் காயவைத்து பொடி செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட தேள், பூரான் கடி விஷம் முறியும்.
வன்னி மர பட்டையை பொடி செய்து 3 முதல் 10 கிராம் வரை சாப்பிட பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிகப்படியான ரத்த போக்கு கட்டுப்படும். மேலும் அஜீரணம், குடல் புண் போன்ற நோய்களுக்கும் பயன்படுத்தி வரலாம். விஷக்கடிகளுக்கு வன்னி மரப்பட்டையை அரைத்து பூசுவதன் மூலம் வலி உடனே குறையும்.வன்னி மர கோந்தை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவம் ஏற்படும்.