

இந்துக்கள் வழிபாடு பஞ்சபுதங்களின் அடிப்படை யிலானது. அதனால் அவர்களது வழிபாட்டில் உலகிலுள்ள அனைத்துப் பொருட்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தபட்டிருக்கும். அதிலும் கற்களுக்கு அதிக சம்பந்தமுள்ளது. அவர்கள் கோயில் கட்டுவதற்கு மட்டும் கற்களை பயன்படுத்தவில்லை. கோயிலில் இடம்பெற்றுள்ள தெயவங்களின் திருமேனியையும் கற்களிலேயே வடித்தனர்.
எங்கோவது மூன்று ஐந்து அல்லது ஏழு கற்கள் நடப்பட்டிருந்தால் அது தெய்வத்தின் வடிவம் என்பதை அணுமானித்துவிடலாம். இதைத்தாண்டி சில கற்களை தெய்வாம்சம் மிக்கதாக கருதி பாவித்தனர். சாளக்கிராமும், பாணலிங்கமும் இந்தவகையை சேர்ந்ததாகும்.
வைணவ சம்பிரதாயத்தைப் பின்பற்றுவோர் கண்டகி நதியில் கிடைக்கும் சாளக்கிராம கற்களை எடுத்துவந்து பூஜையறையில் வைத்து பூஜித்து வழிபடுவார்கள். சிலகோயில்களில் மூலவர் சிலை வடிக்கவும் இதை பயன்படுத்துவர். அதேபோல சைவ சம்பிரதாயத்தைப் பின்பற்றுவோர் நர்மதை நதியில் கிடைக்கும் லிங்கவடிவலான கற்களை எடுத்துவந்து பூஜிப்பது வழக்கம். இதன் பெயர்தான் பாணலிங்கம். பார்ப்பதற்கு லிங்க வடிவாக இருப்பதால் இதையே லிங்கமாக நினைத்து வழிபடுகின்றனர்.
இவைகள் இயற்கையான அதிர்வுகளையும் சக்தியையும் கொண்டிருப்பதால் இயற்கையான சிவலிங்கங்களாக கருதப்படுவதுடன் ஸ்படிக லிங்கங்களைவிட ஆயிரம் மடங்கு புனிதமானவை என்றும் லட்சக்கணக்கான ஸ்படிக லிங்கங்ளுக்கு சமமானது என்றும் சொல்லப்படுகிறது. சுருக்கமாக சொன்னால் கோடி லிங்கங்களை தரிசித்த பலனைத்தருவது என்றும் கூறலாம்.
இந்த பாணலிங்கங்கள் நதியின் நீரோட்டத்தின் காரணமாக இயற்கையாகவே நடுவில் பருத்தும் இருபுறங்களிலும் சிறுத்தும் வடிவம் பெறுகிறது என்று அறிவியல் ரீதியாக கூறப்பட்டாலும் புராண ரீதியாக ஒரு வரலாறம் உள்ளது. பாணாசுரன் என்பவன் ஒரு அசுரன். சிறந்த சிவபக்தன், நர்மதை நதிக்கரையிலுள்ள சோணபுரத்தை ஆட்சி செய்தவன். இவன் கோட்டையைச் சிவபெருமானே காவல் காத்தார் என்றால், இவனது சிவபக்தி எத்தகையதாக இருந்திருக்க முடியும் என்று யோசித்துப்பாருங்கள்.
திருஅஞ்சைக்களத்திலிருந்து சுந்தரரை கயிலைக்கு அழைத்துவர சிவபெருமான் அனுப்பி வைத்தது இவனைத்தான். இதை “வரமலிவாணன் மத்த ஆனையோடு வந்தெதிர் கொள்ள” என்னும் மலைபதிகத்தின் வரிகள் மூலம் அறியலாம்.
இரண்டாயிரம் கைகளைப் பெற்றிருந்த பாணாசுரன் ஒவ்வொரு நாளும் 2000 சிவலிங்கங்களைச் செய்து பூஜித்து அவற்றை நர்மதையில் விட்டுவந்தான். இப்படிப் பல்லாண்டு காலம் அவன் செய்த பூஜையில அவனால் விடப்பட்ட லிங்கங்கள் அனந்த கோடி என்பார்கள். அவையே இப்போது பாண லிங்கங்களாக வெளிப்படுகின்றன என்பது நம்பிக்கை. இன்றும் நர்மதை நதியில் பாணலிங்கங்கள் கிடக்கின்றன.
இவை சிவவழிபாட்டுக்கு உகந்தவை என்பதால் நர்மதை நதியில் மூழ்கி தேடி எடுத்து வழிபட்டு வருகின்றனர். நர்மதை நதிக்கரையில்தான் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான ஓம்காரேஸ்வரம் தலம் அமைந்துள்ளது.
பஞ்சாயதன பூஜை செய்யும் அன்பர்கள், சிவனார் அம்சமாக பாண லிங்கத்தை வைத்து வழிபடுவார்கள். நர்மதை ஆற்றில் தோன்றும் பாண லிங்கங்கள் உளுந்தளவு முதல் பெரும்பாறை அளவுக்கும் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. நர்மதையில் கிடைக்கும் பாண லிங்கங்களைக் காசிக்குக் கொண்டுசென்று கங்கையில் நீராட்டிப் பூசித்து எடுத்துவருவது விசேஷம். பாண லிங்கங்களை வீட்டில் வைத்து பூஜிப்பது, பலகோடி நன்மைகளைப் பெற்றுத்தரும். அந்த வீட்டைத் துயரங்களும் தீயசக்திகளும் அண்டவே அண்டாது.
பிரதோஷம், திங்கட்கிழமை, திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம் போன்ற தினங்களில் பாண லிங்கத்துக்கு அபிஷேகங்கள் செய்து, வில்வம் சமர்ப்பித்து, சிவபுராணம் போன்ற துதிப்பாடல்களைப் பாடி வழிபடுவதால், நமது மனக்கிலேசங்கள் நீங்கும். நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும்.