ஆனந்தத்தின் அடிநாதமாக விளங்கும் ஆன்மிகம்!

Spirituality
Spirituality
Published on

வாழ்க்கையில் நமது அறிவு வளர்ந்துகொண்டே போய்க்கொண்டிருந்தாலும், நம்முள் பலர், ‘மிக விரைவாக ஓடுகிறேன், ஆனால் எங்கே சென்றுகொண்டிருக்கிறேன் என்பதே தெரியவில்லை’ என்ற எண்ணத்தில் இருக்கிறோம். பணம், பதவி, சொத்து, செல்வம் அனைத்தும் இருந்தும் மனம் ஓர் வகை வெறுமையால் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் பயணமே ஆன்மிகப் பயணம். இது நம் உடல் அல்லது உலகை அல்ல, நம் உள்ளத்தையும் உயிரின் அடிப்படையையும் புரிந்துகொள்வதற்கான ஒரு பயணமாகும். ஆன்மிகம் என்பது மதக் கட்டுப்பாடுகளும், சடங்குகளும் அல்ல. மனிதன் தன்னைத் தேடிக்கொள்வது, உணர்வுகளை நிர்வகிப்பது, பிறருக்காக எதையோ செய்ய விழைவது ஆகியவற்றின் தொகுப்பாகும்.

ஆன்மிகம் என்பது ஆன்மா சார்ந்தது. ‘ஆன்மா’ என்பது நம்முள் வாழும் உண்மையான சுயம். நம்முடைய உணர்ச்சி, சிந்தனை, செயல் ஆகியவற்றை ஒருமித்தமாக தூய்மையாக வைத்துக்கொள்ளும் சிந்தனையால் ஆனது ஆன்மிகம். இது நம்மை, ‘நான் யார்?, என் வாழ்க்கையின் அர்த்தம் என்ன?, நான் பிறர் வாழ்க்கையில் எதைக் கொண்டு வர விரும்புகிறேன்?’ எனும் கேள்விகளுக்குப் பதில்கள் தேட வைக்கிறது.

இதையும் படியுங்கள்:
பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பனையக்கோட்டை பந்த காட்சி திருவிழா
Spirituality

ஆன்மிகத்தின் அவசியம்: இன்றைய உலகம் வேகமானது, போட்டியினால் நிரம்பியது. ஆனால், அந்த வேகத்தில் மன நிம்மதி, பரிவு, பொறுமை, மகிழ்ச்சி ஆகியவை குறைந்து வருகின்றன. அதனால்தான், மன அழுத்தம், விரக்தி, தனிமை, தற்கொலை எண்ணங்கள் கூட உருவாகின்றன. இவற்றுக்கு நிலையான தீர்வு தத்துவங்களோடு நேரடியாக சம்பந்தப்பட்ட ஆன்மிக நெறிகளில்தான் இருக்கிறது. ஆன்மிகம், மனதை அமைதியாக வைத்துக்கொள்ளும் ஒரு தளத்தை உருவாக்குகிறது.

ஆன்மிகம் வாழ்க்கையை மாற்றும் விதம்:

உள்ளார்ந்த அமைதி: பிரச்னைகள் எத்தனை இருந்தாலும், ஆன்மிகத்தைப் பின்பற்றுபவர் உள்ளத்தில் அமைதியை நிலைத்துவைக்கக் கற்றுக் கொள்கிறார்.

அழுத்த நிலையை சமாளிக்கிறது: விபத்துகள், தோல்விகள் போன்றவற்றை சமாளிக்க மனத் தூண்டுதலை அளிக்கிறது.

சுய ஒழுக்கம் மற்றும் நேர்மை: உண்மை பேசுதல், தவறுகளுக்கு மன்னிப்பு கோருதல், பொறுப்புடன் நடத்தல் போன்ற நற்பண்புகள் வளர்க்கப்படுகின்றன.

பிறரிடம் கருணை: ஆன்மிகம் ஒருவர் தனக்கு மட்டும் வாழாமல், பிறரையும் புரிந்து கொள்ளச் செய்கிறது.

இதையும் படியுங்கள்:
பால் குடிக்காமல் அழும் குழந்தைகளின் ‘பாலாரிஷ்டம்’ தோஷம் தீர்க்கும் அபூர்வ கோயில்!
Spirituality

சுய உணர்வு மற்றும் வாழ்வியல் தெளிவு: வெற்றி, தோல்வி இரண்டையும் சமமாக எதிர்கொள்வதற்கான மனநிலையை உருவாகிறது. பெரும்பாலோர், ‘ஆன்மிகம் என்பது மத சடங்குகளோடு தொடர்புடையது’ என்று எண்ணுகிறார்கள். ஆனால், உண்மையில் ஆன்மிகம் என்பது எல்லா மதங்களுக்கும் அடிப்படைக் கருத்தாக இருக்கிறது. ஆன்மிகம் என்றால் கோயிலுக்கு மட்டும் போவதல்ல, ஒருவரை வருத்தாமல் வாழ்வதே உண்மையான ஆன்மிகம்.

இளைஞர்கள் மற்றும் ஆன்மிகம்: இன்றைய இளம் தலைமுறைக்கு அதிக அறிவு, திறன், தொழில்நுட்ப அறிவு ஆகியவை இருப்பினும், மனநிறைவு குறைவாகவே உள்ளது. இதன் காரணம் உள்ளார்ந்த தொடர்பு இல்லை. பள்ளியிலிருந்தே ஆன்மிகப் பயணத்தின் சிறு தூண்கள் விதைக்கப்பட வேண்டும். தியானம், யோகா, நேர்மையான உறவுகள், நற்கதைகள், பெரியோர்களின் அனுபவங்கள் போன்றவை அவர்களை நேர்மையான வழியில் வளர்க்கும். வெற்றிக்காக மட்டுமல்ல, அர்த்தமிக்க வாழ்வுக்காகவும் இளைஞர்கள் ஆன்மிகத்தைப் பின்பற்ற வேண்டும்.

ஆன்மிகம் என்பது மனித வாழ்வின் தேவை. அறிவு வளர்ச்சி நமக்கு வசதியை அளிக்கிறது. ஆனால், ஆன்மிகம் நமக்கு அமைதியையும் அர்த்தத்தையும் அளிக்கிறது. இது ஒரு இலட்சிய வாழ்க்கையின் தாய்மொழி எனலாம். தெய்வத்தையே காணவில்லை என்றாலும், தெய்வீக எண்ணங்களை வளர்த்துக்கொள்வதே ஆன்மிகம். ஆன்மிகம் வாழ்வின் வழிகாட்டுதலாக இருக்கட்டும்; அதனால் நம் வாழ்க்கை வெளிச்சமாகட்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com