

இன்று இந்தியாவிற்கு எது தேவை என்றால் புதிய கொள்கையோ புதிய 'இனமோ' அல்ல; ஒரு புதிய சமூகமோ அல்லது புதிய லட்சியமோ அல்ல; ஆயின் நல்ல உணர்வுகளையும் நோக்கங்களையும் கொண்ட கோபம், காமம், பேராசை ஆகியவை இல்லாத ஆண்களும் பெண்களுமே தேவை.
ராமரின் சரிதம் இந்த பெருண்மையை வலியுறுத்துகிறது. அதுவே பரிசுத்த பாற்கடலான வேதத்தின் சாரம்.
வால்மீகி தனது இதிஹாஸத்தின் ஒவ்வொரு பிரிவையும் காண்டம் என்று பெயரிட்டார். அதாவது கரும்பின் ஒரு பகுதி அது. எவ்வளவு வளைந்து நெளிந்திருந்தாலும் கரும்பின் ஒவ்வொரு துண்டும் இனிமை தான். அது போலவே எந்த நிலை சித்தரிக்கப்பட்டிருந்தாலும், விளக்கப்பட்டிருந்தாலும் அது மகுடம் சூட்டுதலோ அல்லது வனவாசமோ, வெற்றியோ அல்லது தோல்வியோ, வீரச்செயல்பாடோ அல்லது தைரியமோ, அன்போ அல்லது வெறுப்போ, சந்தோஷமோ அல்லது துக்கமோ எதுவாக இருந்தாலும் சரி, இந்த இதிஹாஸமானது இனிமையும் கவர்வதாகவும் உள்ளது.
ராமரின் கதையில் இரண்டு பிரதானமான ரஸங்கள் உள்ளன. ஒன்று ராமர் என்னும் கருணையும் இன்னொன்று லக்ஷ்மணர் என்னும் ப்ரேமையும் தான்.
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 'பகவான் பாபா' புத்தகத்தை வாங்க கீழே உள்ள Link-கை கிளிக் செய்யவும்!
இந்த இரு ரஸங்களும் கலந்து ஆனந்தத்தைத் தருகிறது. ராமரின் ஸ்வபாவமே ஆனந்தம் தான். வால்மீகி வெளிப்படையாக எங்குமே தெரிவிக்கா விட்டாலும் அவர் பகவானே தான். விஷ்ணுவுக்குச் சமமான வலிமை கொண்டவர் அவர் என்று வால்மீகி குறிப்பிடுகிறார்; விஷ்ணுவே அவர் என்று சொல்லவில்லை. ராமரின் சொந்த புதல்வர்களாலேயே இந்த மர்மம் விடுபடுகிறது.
பகவான் என்றால் என்ன அர்த்தம்? ‘ப’ என்றால் சுடரொளி என்று அர்த்தம். ‘க’ என்றால் வெளிப்படுதல் என்று அர்த்தம். ‘வான்’ என்றால் சக்தியுடையவர் என்று பொருள். எவர் ஒருவருக்கு ஜோதியை உருவாக்கும் வலிமை உள்ளதோ அவரே – தெய்வீக ஜோதி - ஆத்ம ஜோதியே ராமர். எவரிடமிருந்து இந்த பிரபஞ்சம் உருவானதோ அதை எவர் காப்பவரோ அவரே ராமர். ராமரை பிரபஞ்சத்தைப் படைப்பவராகவும் காப்பவராகவும் பிரபஞ்சத்தின் ஒளிச்சுடரையும் அறிவையும் முன்னிறுத்துபவராகவும் எவர்கள் கொண்டாடுகின்றார்களோ அவர்களே பக்தர்கள் என்று அறியப்படுகிறார்கள்.
ஆனால் இன்று ஏராளமான பக்தர்கள் ‘பார்ட் டைம் டிவோடி’ எனப்படும் பகுதி நேர பக்தர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் ‘சததம் யோகினஹ’ – எப்போதும் இறைவனுடன் ஒன்று கலந்திருப்பவர்கள் – அல்ல. அவர்கள் காலையில் யோகிகள். பகலில் போகிகள். இரவில் ரோகிகள்!
ராமர் ஆன்மீகத்தில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரின் ஐயத்தையும் தெளிவிக்கிறார். எதெல்லாம் சரியோ அதையெல்லாம் அவர் தினமும் வாழ்ந்து காட்டுகிறார். ஆகவே அவர் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் மற்றும் சமூகத்திற்கும் தேசத்திற்கும் மனித குலத்திற்குமே தரநிலைகளை நிர்ணயம் செய்கிறார்.
அரசரின் உயர் லட்சியத்திற்கு ஏற்பவும் பிரஜைகளின் எதிர்விளைவுக்கு ஏற்பவும் அவர் வனவாசம் செல்கிறார். பிதிர்வாக்ய பரிபாலனம் என்பதை முதல் தகுதி காட்டுகிறது. ஜனவாக்ய பரிபாலனா என்பதை அடுத்தது சுட்டிக் காட்டுகிறது.
வேராக விளங்குவது சொல் தான் – தாய், தந்தையர் மற்றும் ஜனங்கள் - இதன் பலன் மோக்ஷம். மோக்ஷமே இறுதி லட்சியம், தவிர்க்கமுடியாத விதி!
இனிமையான பழமாக (மலரென) மிளிர ஆரம்பித்து முதிர்ந்த பழமாக வெளிவருவதற்கான மொட்டாக விளங்குவதே தவிர்க்க முடியாத லட்சியம் ஆகும். இந்த மூன்று நிலைகளும் ஒன்றையடுத்து இன்னொன்று பின்பற்றி வருகிறது. ஆகவே தான் வேதங்கள் கர்மாவை (மொட்டு) முதலாகவும் உபாசனாவை (மலர்) அடுத்ததாகவும் ஞானத்தை (பழம்) அடுத்தும் கொண்ட பிரிவுகளைக் கொண்டுள்ளன. ஆன்மாவானது தனது எழுச்சியைக் கொள்ளூம் பரிமாணத்தை தனது வாழ்வில் ராமர் சித்தரிக்கிறார்.
ராமர் சத்யத்தையும் தர்மத்தையும் கடைப்பிடிக்கும் பண்புருவமாகும். ராம பக்தியில் திளைத்திருப்பவர்களே அதன் பெருமையில் ஆழ மூழ்க முடியும்.
நீங்கள் ஆழ்ந்து சிந்திப்பதற்கான ஒரு பெரும் லட்சியம் அவரே. அப்படிச் செய்வதன் மூலம் நீங்கள் அவரது நற்குணங்களில் மூழ்கி மெதுவாகவும் ஓசைப்படாமலும் அவற்றை அபிவிருத்தி செய்து கொள்ள முடியும். ஒரு மரமானது பழங்களைத் தர மெதுவாக சப்தமின்றி பல வருடங்கள் வளர்கிறது. அது ஒரு கணத்தில் அதே இடத்தில் பழத்தைத் தருவதில்லை.
தென்னை மரம், மாமரம், பலா மரம் ஆகியவை இந்த வகையைச் சார்ந்தவை. அவை அளிக்கும் கொடை மிக அதிகம். அதிக சுவையையும் சத்தையும் கொண்டவற்றை அவை தருகின்றன.
மிக விரைவில் பழங்களைத் தரும் மரங்கள் சீக்கிரமே பட்டுப் போய் மரித்து விடுகின்றன.
தெய்விக உருவங்களின் புகழ் நாளுக்கு நாள் அவர்களது ஒவ்வொரு சொல்லாலும் ஒவ்வொரு செய்கையாலும் வளர்கிறது. ராமரின் புகழ் பல நூற்றாண்டுகள் கழிந்தாலும் கூட சுடர் விட்டுப் பிரகாசிக்கிறது. இன்னும் பல காலம் அது ஜொலிக்கும். ராமர் என்றால் ஆனந்தம் அளிப்பவர் என்று பொருள். சந்தோஷத்திற்கு ஆதாரமான ஆத்மாவைத் தவிர வேறெதுவும் மனிதனுக்கு ஆனந்தம் அளிக்க முடியாது.
ஒவ்வொருவரும் ஆத்ம ஞானத்தை அடைய முன்னுரிமை அளிக்க வேண்டும். அது தரும் ஆனந்தத்தை அனுபவிக்க வேண்டும். மற்றவையெல்லாம் கண நேரம் நீடிக்கும் சந்தோஷமே.
உபநிடதங்கள், “தியாகேனைகே அம்ருதத்வம் ஆனுஷ – தியாகத்தால் மட்டுமே அம்ருதத்வம் அடையப்பட முடியும்” என்று கூறுகின்றன.
***
பங்களூரில் லால்பாக்கில் கோல்டன் ஜூபிலி ஹாலில் 1981ம் ஆண்டு பகவான் ஶ்ரீ சத்ய சாயிபாபா ஆற்றிய அருளுரை