
சென்னை, ஆதம்பாக்கம் விஸ்வரூப ஸ்ரீ சர்வ மங்கள சனீஸ்வர பகவான் கோயிலில் சனீஸ்வரர் ஆறடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறார். இது, ‘வட திருநள்ளாறு’ என்று போற்றப்படுகிறது.
வேலூர் மாவட்டம், வாலாஜா அருகே உள்ள வன்னிவேடு எனும் ஊரில் உள்ள அகத்தீஸ்வரர் கோயிலில், சனீஸ்வரர் ஒற்றைக்காலில் நின்று காட்சி தருகிறார். இதுபோல, சனீஸ்வரரை தரிசிப்பது மிகவும் அபூர்வம்.
சனி பகவான் பொதுவாக காகத்தின் மீது அமர்ந்து காட்சி தருவது வழக்கம். ஆனால், ஆலங்குடி தலத்தில் அவர் கருட வாகனத்தில் காட்சி தருகிறார். சனி பகவான் கருட வாகனத்தில் அமர்ந்து காட்சி தருவது மிகவும் அரிதான காட்சியாகும். இது ஆலங்குடி தலத்தில் மட்டுமே காணப்படுகிறது.
மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள கூறைநாடு எனும் இடத்தில் அருள்மிகு புனுகீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் சனி பகவான் கிழக்கு நோக்கி தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். எல்லா ஆலயங்களிலும் கருப்பு நிறக் கல்லில் காட்சி தரும் சனி பகவான், இங்கு மட்டும் சிவப்பு நிறக் கல்லில் காட்சி தருவது விநோதம்.
திருக்கொள்ளிக்காடு என்ற திருத்தலத்தில் சனீஸ்வரர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். அவரது வலது கரங்களில் கலப்பையும், அபய ஹஸ்தமும் தாங்கியுள்ளார். அதேபோல் இடது கரங்களில் காக்கையும், ஊரு ஹஸ்தமும் தாங்கி பக்தர்களுக்கு அருள்புரிகிறார். கலப்பையுடன் வீற்றிருக்கும் வித்தியாசமான சனி பகவானின் தோற்றத்தை இந்த ஆலயத்தில் மட்டுமே தரிசிக்க முடியும்.
கும்பகோணத்திற்கு அருகே உள்ள திருநாரையூர் தலத்தில், நவகிரக நாயகரான சனி பகவான், தனது குடும்ப சகிதமாக அருள்பாலிக்கும் அற்புதக் காட்சியைக் காணலாம். இங்குள்ள அருள்மிகு ராமநாத சுவாமி கோயிலில், கருவறைக்கு எதிரில், தனிச் சன்னிதியில் ஸ்ரீ சனீஸ்வரர் தனது இரு மனைவியரான, மந்தா தேவி, ஜேஷ்டா தேவி ஆகியோருடனும், குளிகன், மாந்தி என்ற இரு மகன்களுடனும் குடும்ப சமேதரராக அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.
ஜெய்ப்பூர் செல்லும் வழியில் வேன்வீட்டா எனும் ஊரில் சனி பகவான் கோயில் உள்ளது. எட்டு கிரகங்கள் வரிசையாக இரண்டு பாகங்களாகக் காட்சி தருகின்றன. சனீஸ்வரர் மிகப்பெரிய உருவில் எருமை வாகனத்தில், கிரகங்களுக்கு முன்னால் அமர்ந்து காட்சி தருகிறார்.