
சிவபெருமானுக்குரிய விரதங்களுள் மிகவும் விசேஷமானது பிரதோஷ விரதம். ‘தோஷம்’ என்றால் குற்றம் என்றும், ‘பிரதோஷம்’ என்றால் குற்றமற்றது என்றும் பொருளாகும். தினமும் மாலை 4.30 மணி முதல் ஆறு மணி வரை உள்ள நேரம் பிரதோஷ காலமாகும். இதை சந்தியா காலம் என்றும் அழைப்பர். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை என்னும் இரண்டு காலங்களிலும் திரயோதசி திதியில் வருவது பிரதோஷ தினமாகும். இந்த வேளையில் சிவபெருமானை வழிபாடு செய்வதே இந்த விரதத்தின் நோக்கம்.
பிரதோஷ வேளையில் இறைவனை வழிபடுவதால் நமது முற்பிறவி குற்றங்கள், சகல தோஷங்கள் நீங்கி நலம் கிடைக்கும். பாவங்கள் விலகி, புண்ணியம் சேரும். வறுமைகள் அகலும். பயம், மரண வேதனை நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மகப்பேறு பெறுவர். பிறவி ஒழித்து முக்தி பேற்றினை அடைவர். கல்வியில் மேன்மை பெறுவார்கள். நந்தியம்பெருமானை வணங்குவோருக்கு புத்தியில் ஞானம் சேரும். பொலிவுறு செல்வம் கூடும். குலமுறை தழைத்தோங்கும். குணம்நிறை மக்கள் சேர்வர். சிந்தையில் அமைதி தோன்றும்.
பிரதோஷ வேளையில் அனைத்து தேவர்கள், முனிவர்கள் சிவாலயத்தில் ஒன்று சேர்வதால் பிரதோஷ வழிபாடு அனைத்துக் கடவுள்களையும் ஒன்றாக வழிபட்ட புண்ணியப் பலனை வழங்கும். பிரதோஷ விரதம் இருக்க விரும்புபவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வரும் சனிக்கிழமை பிரதோஷ நாளாக பார்த்து இந்த விரதத்தைக் கடைபிடிக்க வேண்டும். பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் நீராடி, சிவன் கோயிலில் சுவாமிக்கு முன் உள்ள நந்திக்கு அருகம்புல் மாலை சாத்தி சிவப்பு அரிசி நைவேத்தியம் செய்ய வேண்டும். நெய் விளக்கு ஏற்றி வழிபடுவது நல்லது. முதலில் சிவபெருமானையும் பிறகு நந்தி தேவரையும் வணங்க வேண்டும். பின்னர், இடமாகச் சென்று சண்டிகேஸ்வரரை வணங்கி விட்டு, சென்ற வழியே திரும்பி வந்து மீண்டும் சிவன், நந்தியை தரிசிக்க வேண்டும்.
பிறகு வழக்கம்போல் ஆலயத்தை வலமாக சுற்றி வரும்போது நந்தி தேவரிடம் வந்து நின்றபடி அவருடைய கொம்புகளுக்கு நடுவே சிவலிங்கத்திற்கு தீபாராதனை காட்டுவதைக் கண்டு வழிபட வேண்டும். இதுபோல் ஒன்பது முறை பிரதட்சணம் செய்ய வேண்டும். பின்னர் ரிஷப வாகனத்தில் சிவன், பார்வதி வலம் வரும்போது உடன் சேர்ந்து பிரதட்சணம் செய்ய வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருக்க வேண்டும். விபூதியை நெற்றியில் அணிந்துகொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யப் பயன்படுத்தப்பட்ட புனித நீரை அருந்த வேண்டும். வீட்டிற்குச் சென்று யாராவது ஏழைக்கு அன்னதானம் வழங்குவதும் நன்மை அளிக்கும்.
சோம வார பிரதோஷத்தில் சிவபெருமானை வழிபடுவதன் மூலம் சந்திர தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நீங்கும். சனி பிரதோஷம் போல சோம வார பிரதோஷமும் சனி பகவானின் தோஷத்தை நீக்கும் வல்லமை கொண்டது. இந்த நாளில் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும். சந்திரனால் ஏற்படும் மனக்குழப்பங்கள் நீங்கி, மன அமைதி கிடைக்கும். சோம வார பிரதோஷ வேளையில் நந்திக்கு செய்யப்படும் அபிஷேகத்தை தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு.
தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள் உள்ளிட அனைத்து தெய்வங்களும் சிவபெருமானை பூஜை செய்து வழிபட்டு வேண்டிய வரங்களை பெரும் வேளை பிரதோஷ வேளையாகும். எப்படிப்பட்ட தோஷங்களையும் துன்பங்களையும் பாவங்களையும் போக்கி வாழ்வில் சந்தோஷங்களை வழங்கக்கூடிய சக்தி பிரதோஷ விரதத்திற்கு உண்டு. தொடர்ந்து 12 ஆண்டுகள் பிரதோஷ விரதம் இருந்து சிவனை வழிபட்டால் அவர்களுக்கு சிவலோக பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
திங்கட்கிழமை வருகிற பிரதோஷத்தை சோம வார பிரதோஷம் என்பர். திங்கட்கிழமையைத்தான் சோமவாரம் என்றும் அழைப்பார்கள். சாபத்தால் தனது கலைகள் ஒவ்வொன்றாக இழந்து வாடிய சந்திரன், சிவபெருமானின் அருளால் சாபம் நீங்கப் பெற்றதுடன், சிவபெருமானின் தலையிலும் இடம்பிடித்தார். சந்திரனின் தவம் மற்றும் வழிபாட்டிற்கு மனமிரங்கிய சிவபெருமான், நவகிரகங்களில் ஒருவராகத் திகழும் வாய்ப்பையும் சந்திரனுக்கு வழங்கினார். அப்போது சந்திரன், ‘தனக்குரிய நாளில் மக்கள் விரதம் இருந்து வழிபட்டால், தாங்கள் நல்ல பலனை வழங்க வேண்டும்’ என்று பரமேஸ்வரனை வேண்டிக்கொண்டார்.
சோம வார பிரதோஷத்தன்று சிவபெருமானுக்கு வில்வத்தினால் அர்ச்சனை செய்தும், ஒரு கைப்பிடி காப்பரிசி, ஒரு பிடி வன்னியிலை, ஒரு பிடி அருகம்புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கு இடையில் வைத்து அர்ப்பணித்து விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப்போகும். பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு காப்பரிசி நெய்வேத்தியம் செய்வது மிகவும் சிறப்பானது. பச்சரிசி பயித்தம் பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைத்து பிறகு அதை வடிகட்டி வெல்லம், தேங்காய் பூ சேர்த்து காப்பரிசி தயாரிக்க வேண்டும்.
நந்தியம்பெருமானுக்கு அருகம்புல் அல்லது வில்வமாலை சாத்தி, நெய் விளக்கு ஏற்றி பூஜை செய்வது மிகவும் சிறப்பு. இதனால் நினைத்தது அனைத்தும் நிறைவேறும். எலுமிச்சை சாதமோ, தயிர் சாதமோ, சர்க்கரை பொங்கலோ, வெண்பொங்கலோ இறைவனுக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்கினால் வாழ்க்கையில் சகல நன்மைகளும் உண்டாகும். பிரதோஷ நாட்களில் வில்வ இலை கொண்டு சிவனை வழிபடுவது மிகவும் சிறப்பு. பிரதோஷ நாட்களில் அன்னதானமாக தயிர் சாதம் வழங்கினால் மிகுந்த பலன் கிடைக்கும்.
பசுவின் கரந்த பாலை கொடுத்து சிவனை அபிஷேகம் செய்து சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும். பாலாபிஷேகம் செய்தால் நோய்கள் தீர்த்து நீண்ட ஆயுள் கிடைக்கும். தயிர் அபிஷேகம் செய்தால் வளங்கள் பல உண்டாகும். தேன் அபிஷேகம் செய்தால் இனிய குரலும் பழங்களால் அபிஷேகம் செய்தால் நிலத்தில் விளைச்சல் பெருகும். பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால் செல்வம் பெருகும். நந்திக்கு நெய் அபிஷேகம் செய்தால் முக்திப் பேறு கிடைக்கும். இளநீர் அபிஷேகம் செய்தால் நல்ல மக்கட்பேறு கிடைக்கும். சர்க்கரை அபிஷேகம் செய்தால் எதிர்ப்புகள் மறையும். எண்ணெய் அபிஷேகம் செய்தால் சுக வாழ்வு கிடைக்கும். சந்தன அபிஷேகம் செய்தால் சிறப்பான சக்திகள் பெறலாம். மலர்கள் அபிஷேகம் செய்தால் தெய்வ தரிசனம் கிடைக்கும்.
பிரதோஷ நேரத்தில், ‘ஓம் நமசிவாய’ என்ற ஐந்து எழுத்து மந்திரத்தையும் மஹா மிருத்யுஞ்ஜய மந்திரத்தையும் எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை தொடர்ந்து உச்சரித்துக்கொண்டே கோயில் பிராகாரத்தில் ரிஷபாரூடராய் அம்மையப்பன் வலம் வரும்போது நாமும் வலம் வர வேண்டும்.
சோம வார பிரதோஷ நாளில் இருக்கும் விரதம், ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷ பலனைத் தரும் என்பது ஆன்மிக நம்பிக்கை. பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால் சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும். சகல சௌபாக்கியங்களும் உண்டாகும். இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிட்டும். இத்தினத்தில் செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும்.
நாளை திங்கட்கிழமை (23.06.2025) தேய்பிறை சோம வார பிரதோஷம். இத்தினத்தில் நாமும் சிவாலயம் சென்று பிரதோஷ பூஜைகளில் கலந்து கொண்டு சிவபெருமானின் பரிபூரண அருளைப் பெறுவோம்.