

ராமாயணத்தில் தமிழகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று முக்கியமான கோயில்களில் ஒன்று நவபாஷாண கோயில். இது ராமேஸ்வரத்திலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவிலும், தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ள தேவிபட்டினத்தில் அமைந்துள்ள ஒரு பழைமையான இந்து கோயிலாகும்.
ராவணன் சீதையை இலங்கைக்கு கடத்திச் சென்றான். மனைவியைப் பிரிந்த ராமர், தெற்கு திசை நோக்கி வந்தார். இலங்கை செல்லும் முன்னர் ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில், விநாயகரை வழிபட்டுவிட்டு, தேவிப்பட்டினம் கடற்கரையை அடைந்தார். அப்போது அசரீரியாக ஒரு குரல், ‘சீதை கடத்தப்பட்தற்குக் காரணம் நவகிரக தோஷம்தான்’ என்றது. தனது தோஷம் தீர அங்கு நவகிரகங்களை வழிபடலாம் என கருதினார் ராமர். அதற்காக நவகிரகங்களை பிரதிஷ்டை செய்ய முயன்றார். அப்போது சீற்றமுடன் கடல் இருந்ததால், அங்கிருந்த ஆதி ஜெகநாதப்பெருமாளை மனதிற்குள் வழிபட்டார். அவர் அருளால் கடல் அடங்கியது.
ஸ்ரீராமர் கிரக தேவதைகளை திருப்திப்படுத்த பூஜை செய்து, கடலில் சில மீட்டர் தொலைவில் கற்களை நிறுவினார். கொந்தளிப்பான கடலின் உயர் அலைகளை அவர் தனது கையை உயர்த்தியதன் மூலம் அமைதிப்படுத்தினார். தேவிபட்டினத்தில் நவபாஷாண கற்கள் என்று அழைக்கப்படும் நவகிரகங்களை நிறுவினார். ஒன்பது கற்கள் ஒன்பது கிரகங்களைக் குறிக்கின்றன. தேவிபட்டினத்தில் நவகிரக பூஜையையும் செய்தார்.
ஸ்ரீராமர் இந்த தெய்வங்களை கற்களின் வடிவத்தில் நவபாஷாணம் என்ற கலவையுடன் பிரதிஷ்டை செய்ததாக நம்பப்படுகிறது, எனவே, இந்த தெய்வங்கள் நோய்களைக் குணப்படுத்தும் சக்தி கொண்டதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் ஸ்ரீராமர் சனி பகவானின் பாதிப்புகளிலிருந்து விடுபட்டார். இங்குதான் அவர் சிவன் மற்றும் பார்வதி தேவியால் ஆசீர்வதிக்கப்பட்டார்.
நவகிரகங்கள் கிராமத்தின் கரைக்கு அருகில் கடலுக்குள் சில மீட்டர் தொலைவில் அமைந்துள்ளன, நவகிரகங்கள் ஓரளவு கடலில் மூழ்கியிருப்பதைக் காணலாம். முன்னதாக, நவகிரக கோயிலுக்கு பக்தர்கள் கடலுக்குள் நடந்து சென்று தரிசனம் செய்ய வேண்டியிருந்தது. பின்னர் நீரில் மூழ்கிய நவகிரக கோயிலை இணைக்க ஒரு சிமெண்ட் பாலம் கட்டப்பட்டது.
ஸ்ரீராமர் தனது கைகளாலேயே கடலுக்கு நடுவில் பிரதிஷ்டை செய்த நவகிரகங்கள் இக்கோயிலின் சிறப்பம்சம் ஆகும். இந்த நவகிரகங்களுக்கும் பக்தர்கள் தங்கள் கைகளாலேயே அபிஷேகம், ஆராதனை போன்றவற்றை செய்யலாம் என்பது விசேஷம் ஆகும். இக்கோயிலின் கடல் தீர்த்தத்தில் நீராடி இங்கிருக்கும் நவகிரகங்களுக்கு நவதானியங்கள் சமர்ப்பித்து, ஒன்பது முறை வலம் வந்து வழிபட்டு, அன்னதானம் போன்ற தானங்களை செய்வதால், பிரம்மஹத்தி தோஷம், பித்ரு தோஷம் போன்றவை நீங்குகிறது. திருமணத் தடை, புத்திர தோஷம் போக்கவும் இங்கு வருகின்றனர்.
கால சர்ப்ப தோஷம் எனும் பாம்பு தொடர்பான சாபங்களில் இருந்து நிவாரணம் பெற, முன்னோர்களின் சாபங்களைப் போக்க உதவும். பித்ரு தோஷ பரிகாரம், கடந்த கால வாழ்க்கையின் கெட்ட கர்மாவால் ஏற்பட்ட சாப நிவர்த்தி அனைத்தும் இங்கு வந்தால் சரியாகும் என்பது ஐதீகம். மறைந்த நமது பரம்பரையின் முன்னோர்களான பித்ருகளுக்கு உரிய காலத்தில் ஸ்ராத்தம், தர்ப்பணம் போன்றவற்றை செய்யாத காரணத்தால் பித்ரு சாபங்கள், தோஷங்கள் உண்டாகின்றன. பித்ரு தோஷம் உட்பட பல தோஷங்களை நிவர்த்தி செய்யவே தேவிபட்டினம் நவபாஷாண நவகிரக திருக்கோயிலுக்கு வருகின்றனர்.
முற்பிறவி பாவங்கள், பித்ரு சாபம் நீங்க பக்தர்கள் அதிகளவில் இங்கு வருகை தருகின்றனர். அமாவாசை நாட்களில் இங்கு அதிகளவில் பக்தர்கள் கூட்டம் இருந்தாலும், ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரம் சென்று விட்டு இங்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். நவபாஷாண நவகிரகங்கள் கோயிலின் நேரம், காலை காலை 4 மணி முதல் மதியம் 1 மணி, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி. அதிகாலை 6 முதல் 8 மணிக்கு இங்கு நவகிரகங்கள் நன்றாகத் தெரியும் என்பதால் அப்போது பூஜை செய்வது மிகவும் விசேஷம் என்று கூறுகின்றனர்.
இங்கு கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகள் ஆடி அமாவாச (ஜூலை - ஆகஸ்ட்) மற்றும் தை அமாவாசை (ஜனவரி - பிப்ரவரி) ஆகும். 10 நாட்கள் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவின்போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகிறார்கள்.
தேவிபட்டினம் ராமநாதபுரத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ளது. ராமநாதபுரத்திலிருந்து காரைக்குடி செல்லும் பேருந்துகள் தேவிபட்டினத்தில் நிற்கும். அங்கிருந்து ஆட்டோ மூலம் கோயிலை அடையலாம்.