வெற்றி தரும் அரிய மான் வாகன துர்க்கை: 5000 ஆண்டுகள் பழமையான தான்தோன்றீஸ்வரர் கோவில் அதிசயங்கள்!

வாழ்க்கையில் வெற்றி பெறவும், தேர்வுகளில் வெல்லவும் வழிபட வேண்டிய அரிய சிவ ஸ்தல வரலாறு.
தான்தோன்றீஸ்வரர் கோவில் - Achirupakkam Temples
தான்தோன்றீஸ்வரர் கோவில் - Achirupakkam Temples
Updated on

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகில் உள்ள பெரும்பேர் கண்டிகை கிராமத்தில் அமைந்துள்ளது வரலாற்று சிறப்புமிக்க மிகவும் பழமையான சிவ ஸ்தலம் தான்தோன்றீஸ்வரர் கோவில். 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட அற்புதமான கற்கோவில் இது. இங்கு மூலவர் சிவபெருமான் மணல் லிங்கமாக சுயம்புவாக உருவானதால் தான்தோன்றீஸ்வரர் என பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

இக்கோவிலில் சண்டன், முண்டன் என்ற அசுரர்களை வதம் செய்த சாமுண்டீஸ்வரி அம்மன் ரணபத்ரகாளியுடன் காணப்படுகிறாள். இந்த சாமுண்டீஸ்வரியை விக்ரமாதித்தன் வழிபட்டான் என்பது வரலாறு. சோழர் காலத்தில் இக்கோவில் மிக உன்னதமான நிலையில் இருந்துள்ளது. இறைவன் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார்.

மூலவர் தான்தோன்றீஸ்வரர்

அம்பிகை தடுத்தாட்கொண்ட நாயகி

தல விருட்சம் திருவதி மரம்

அகத்திய முனிவர், சனகாதி முனிவர்கள் வழிபட்ட தலம் இது.

பழங்காலத்தில் இந்த பெரும்பேர் கண்டிகை கிராமத்தில் ஏறத்தாழ 33 கோயில்கள் இருந்ததாக கூறப்படுகிறது. சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் பெரும்பாலான கோவில்கள் சேதமடைந்துள்ளன.

கோவிலின் அற்புதம்:

இக்கோவிலில் உள்ள சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோமடி என்னும் அதிசய சங்கு உள்ளது. இந்த சங்கினைக் கொண்டு சுயம்புவாக உள்ள மணல் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப் படுகிறது. சுவாமிக்கு கோமடி சங்கினால் அபிஷேகம் செய்து வழிபட தேர்தல், தேர்வு, வாழ்க்கை போன்றவற்றில் வெற்றி கிடைக்கும் என்பது பக்தர்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

கிழக்கு நோக்கிய ஆலயம். கருவறை வாசலில் விநாயகரும் முருகப்பெருமானும் உள்ளனர். மூலவர் மணல் லிங்கமாக உள்ளதால் செப்புக்கவசம் சாத்தப்படுகிறது.

தான்தோன்றீஸ்வரர் கோவில் - Achirupakkam Temples
தான்தோன்றீஸ்வரர் கோவில் - Achirupakkam Temples

அகத்திய முனிவர் இத்தலத்திற்கு வந்து அருகில் உள்ள ஆத்தி மரத்தின் அடியில் அமர்ந்து சிவ பார்வதியின் திருமணக் காட்சியைக் காண தவம் இருந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

பொதுவாக துர்க்கை அம்மன் சிம்ம வாகனத்துடன் தான் காட்சி தருவார். ஆனால் இக்கோவில் வளாகத்தில் உள்ள ஒரு பாறையில் மான் வாகனத்துடன் கூடிய துர்க்கை அம்மன் புடைப்பு சிற்பமாக அரிய வடிவில் காட்சி தருகிறார்.

இக்கோவிலில் உள்ள கனக துர்கா தேவி எட்டு கைகளுடன் மான் மீது அமர்ந்திருப்பதைக் காணலாம் (மான் வாகனம்).

இக்கோவிலுக்கு திருப்பணி செய்த பல்லவர்கள், சோழர்கள் போன்ற ஆட்சியாளர்கள் இத்தல தான்தோன்றீஸ்வரரையும், கனகதுர்க்கை அம்மனையும் வழிபட்ட பிறகே போருக்கு சென்றதாகவும், அதனால் போரில் வெற்றியைக் குவித்ததாகவும் கல்வெட்டு குறிப்புகள் கூறுகின்றன.

இங்கு 5 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கல்வெட்டின் படி இந்த இடம் திரிபுவன நல்லூர் மற்றும் பெரும்பேரூர் என்று அழைக்கப்பட்டது. சிவன் திருத்தந்தொன்றி மகா ஸ்ரீ கரணீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார். பண்டைய காலத்தில் கூலியாகப் பணத்திற்கு பதிலாக நிலம் வழங்கப்பட்டது. அவை 'பெரு' என்று அழைக்கப் படுகின்றன. அது பெரிய அளவில் வழங்கப்பட்டால், அது 'பெரும் பேரூ' என்று அழைக்கப்படுகிறது. பெரும்பேரூ என்ற இந்த இடம் மதுராந்தக சதுர்வேதிமங்கலத்தின் கீழ் இருந்தது.

இதையும் படியுங்கள்:
மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவில்: ஒற்றை இரவில் உருவான சோழர் கால சிற்ப அதிசயம்!
தான்தோன்றீஸ்வரர் கோவில் - Achirupakkam Temples

சித்ரா பௌர்ணமி நிகழ்வு:

அருகில் உள்ள புகழ் பெற்ற பெரும் பேர் கண்டிகை மலை முருகன் கோவிலில் இருந்து சித்ரா பௌர்ணமி அன்று முருகப்பெருமான் கீழே இறங்கி வந்து தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் உள்ள தனது பெற்றோரைக் கண்டு ஆசை பெறும் நிகழ்வு மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

திருவிழாக்கள்:

சித்ரா பௌர்ணமி உள்ளிட்ட முக்கிய பண்டிகைகள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

எப்படிச் செல்வது?

அச்சரப்பாக்கத்தில் இருந்து 9 கிலோமீட்டர் தூரத்திலும், மேல்மருவத்தில் இருந்து 13 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. மிக அருகில் உள்ள ரயில் நிலையம் தொழுப்பேடு (Tozhuppedu) ஆகும். தொழுப்பேடு பேருந்து மற்றும் ரயில் நிலையத்திலிருந்து ஆட்டோ வசதிகள் உள்ளன.

இதையும் படியுங்கள்:
ஒரே நாளில் 9 நவகிரக ஆலய தரிசனம்: பலன்களும் வழிபாட்டு முறைகளும்!
தான்தோன்றீஸ்வரர் கோவில் - Achirupakkam Temples
logo
Kalki Online
kalkionline.com