அசத்தும் சாம்பிராணி: தசாங்க தூபம் போடுவதால் கிடைக்கும் அற்புதப் பலன்கள்!

Dasanga Thuba Palangal
Dasangam sambrani
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

சாம்பிராணி தூபம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், சித்த மூலிகை தூபமான தசாங்கம் பற்றியும் அதன் வியக்க வைக்கும் பலன்கள் குறித்தும் பலருக்கும் தெரியாது. அசாத்திய பலன்களைக் கொடுக்கக்கூடிய தசாங்க தூபம் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

தசாங்கம் என்பதும் தூபம் போடப் பயன்படும் ஒருவகை சாம்பிராணிதான். ஆதிகாலத்தில் இருந்து தெய்வங்களுக்கு தூபம் போடவும் அபிஷேகத்திலும் சேர்க்கப்படும் மகத்துவம் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்த அற்புதமான ஒரு மூலிகைப் பொருள்தான் தசாங்கம். இது வெளிப்படுத்தும் புகையில் இருக்கும் பலன்கள் எண்ணற்றவை என்றே கூறலாம்.

இதையும் படியுங்கள்:
பாம்பு யாகம் தந்த சாபம்: கொடிய நோயில் இருந்து ஜனமேஜயனை காத்த குருவாயூரப்பன்!
Dasanga Thuba Palangal

‘தசம்’ என்றால் பத்து என்று பொருள். பத்து தெய்வீகப் பொருட்கள் அடங்கிய மூலிகையையே தசாங்கம் என்று கூறுகிறோம். தசாங்கத்தில் இருக்கும் பத்து வகையான மூலிகைப் பொருட்களின் குணங்களும் மகத்துவம் வாய்ந்தவை. இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்தால்தான் தசாங்கம் என்கிற அற்புதப் பொருள் உருவாகிறது. இவை அனைத்தும் சித்தர் பெருமக்கள் அருளிய குறிப்புகளில் இருந்து பெறப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

தசாங்க தூபத்தில் அடங்கி இருக்கும் பத்து வகையான மூலிகைப் பொருட்களைக் காண்போம். 1. வெட்டி வேர், 2. லவங்கம், 3. வெள்ளை குங்குலியம், 4. ஜாதிக்காய், 5. மட்டிப்பால், 6. சந்தனத் தூள், 7. நாட்டு சர்க்கரை, 8. திருவட்ட பச்சை, 9. சாம்பிராணி, 10. கீச்சிலி கிழங்கு ஆகியவையே தசாங்கத்தில் உள்ள மூலிகைப் பொருட்கள் ஆகும். இனி, தெய்வீகப் பொருளான தசாங்கம் எத்தகைய பலனைத் தருகிறது என்பதைப் பார்ப்போம்.

தசாங்கத்தின் புகை உடலின் பல்வேறு உள் உறுப்புகளின் பாதிப்புகளை குணப்படுத்தும் ஆற்றல் பெற்றது. இதன் நறுமணமே தெய்வீக உணர்வை உண்டாக்குபவையாக இருக்கும். மேலும், வீட்டுக்குள் நுழையும் துஷ்ட சக்திகளை இதன் புகை விரட்டி விடும். இதனை திருஷ்டி கழிக்கவும் உபயோகிக்கலாம். இதன் புகையை நுகர்வதால் உடலும், மனமும் புத்துணர்ச்சி பெற்று சுறுசுறுப்பாகி விடும்.

இதையும் படியுங்கள்:
சக்தி வழிபாட்டின் உச்சம்: தீமையை வென்று நன்மையைப் போற்றும் நவராத்திரி பண்டிகை!
Dasanga Thuba Palangal

வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருந்தால் அவை அனைத்தும் மாயமாய் மறைந்தே போகும். கோயில்களில் வீசும் நறுமணம் போல் நமது வீட்டிலும் அதன் மணம் நீண்ட நேரம் நிறைந்து இருக்கும். வீடு மட்டுமின்றி, அருகில் உள்ள இடங்களும் மணக்கும். தெய்வத்திடம் நமக்குள்ள நெருக்கத்தை அதிகமாக்க சிறந்த வழி தசாங்க தூபம் போடுவது என்றால், அது மிகையல்ல.

தசாங்கம் கூம்பு வடிவ சாம்பிராணி போல, நாட்டு மருந்து கடைகளில் மட்டுமல்ல, தற்போது இணையதளங்களில் ஆர்டர் செய்தாலும் கிடைக்கிறது. தூளாகவும் கெட்டியாகவும் இரு வேறு வடிவங்களில் இது கிடைக்கிறது. கூம்பு வடிவத்தில் உள்ள முனையில் நெருப்பு வைத்து அதற்கென்று தந்துள்ள சிறு தட்டில் வைத்துவிட்டால், அது கீழே விழாமல் இருக்கும்.

இதன் சாம்பலை செடி, கொடிகளுக்கு போடலாம். தசாங்கத்தை ஏற்றி இறைவனுக்குக் காண்பித்த பிறகு, வீடுகளில் உள்ள மூலை, முடுக்குகள் ஒன்று விடாமல் காண்பிக்க வேண்டும். சிறு குழந்தைகளுக்கு உடல் முழுவதும் படும்படி காண்பித்தால் நல்லது. தசாங்கம் கொண்டு தூபம் போடுவது சகலவிதமான ஐஸ்‌வர்யங்களையும் வீட்டில் சேர்க்கும்.

logo
Kalki Online
kalkionline.com