வேலவனின் வெவ்வேறு பெயர்களும் அவற்றின் பொருளும்!

Sri Muruga peruman
Sri Muruga peruman
Published on

ந்தவேள் கடவுளாம் முருகப்பெருமான் பல்வேறு திருப்பெயர்கள் கொண்டு பக்தர்களால் அழைக்கப்படுகிறான். காரணப் பெயர் கொண்ட பூரணனாக விளங்கும் ஆறுமுகக் கடவுளின் பல்வேறு பெயர்களின் பொருள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

ஆறுமுகன்: ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்துடன் அதோமுகமும் சேர்ந்து ஆறுமுகமானது.

குகன்: குறிஞ்சி நில தெய்வமான இவன், மலைக் குகைகளில் கோயில் கொண்டதால் குகன் என இப்பெயர் கொண்டான்.

குமரன்: மிக உயர்ந்தவன், இளமையை எப்போதும் உடையவன், பிரம்மச்சாரியானவன் என்பதால் இந்த திருநாமம் பூண்டான்.

முருகன்: ‘முருகு’ என்றால் அழகு என்று பொருள். எனவே, முருகன் ஒப்புவமையற்ற பேரழகன்.

குருபரன்: கு - அஞ்ஞான இருள், ரு – நீக்குபவர். ஆன்மாக்களின் அறியாமை இருளை அகற்றுபவர் குரு. சிவனுக்கும் அகஸ்தியருக்கும் அருணகிரிக்கும் குருவாய் நின்று பிரணவத்தை உபதேசித்த குருநாதன் என்பதால் இந்தத் திருநாமம்.

காங்கேயன்: சிவனின் நெற்றிக்கண் தீப்பொறியில் உதித்து கங்கையில் விடப்பட்டு கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் முருகனுக்கு கங்கையின் மைந்தன் என்று பெயர். இதுவே காங்கேயன் என்றானது.

இதையும் படியுங்கள்:
பச்சிளம் குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்ட உகந்த கோயில்!
Sri Muruga peruman

கார்த்திகேயன்: ஆறுருவாய் தோன்றிய முருகப்பெருமான் கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டு ஓருருவாய் திகழ்ந்ததால் கந்தப் பெருமானுக்கு கார்த்திகேயன் என்று பெயர்.

கந்தன்: கந்து – யானை. கட்டும் தறி கந்தன் ஆன்மாக்களுக்கு பற்றுக்கோடாய் இருப்பவன். பகைவர் வலிமையை அழிப்பவன் ஸ்கந்தன். தோள் வலிமை மிக்கவன் ஆறு திருமேனியும் ஒன்றானவன்.

கடம்பன்: வெற்றியின் அடையாளமாய்த் திகழும் கடம்ப மலர் மாலை அணிந்தவன் என்பதால் முருகனுக்கு இப்பெயர்.

சரவணபவன்: சரம் - நாணல், வனம் - காடு, பவன் – தோன்றியவன். நாணல் மிக்க தண்ணீர் உடைய காட்டில் தோன்றியவன் என்பதால் இந்தத் திருநாமம்.

ஸ்வாமி: ஸ்வாமி – சொத்து. எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும் சொத்தாக உடையவன் ஸ்வாமி என்ற பெயர் முருகனுக்கு.மட்டுமே உரியது. சுவாமி உள்ள மலை சுவாமிமலை.

சுரேஷன்: தேவர்களின் தலைவன் என்பதால் முருகப்பெருமானுக்கு சுரேஷன் என்று பெயர்.

செவ்வேள்: செந்நிறமுடையவன் ஞானச்செம்மை உடையவன் என்பதால் முருகனுக்கு இந்தத் திருநாமம்.

சேந்தன்: செந்தமிழ் பிழம்பாய் விளங்குவதால் கந்தவேளுக்கு இந்தத் திருநாமம்.

இதையும் படியுங்கள்:
குரு தோஷ நிவர்த்தி தரும் பிரம்ம தேவன் திருத்தலம்!
Sri Muruga peruman

சேயோன்: வேலவன் குழந்தை வடிவானவன் என்பதால் முருகனுக்கு இந்தத் திருநாமம்.

விசாகன்: விசாக நட்சத்திரத்தில் நெருப்பாய் உதித்தவன் என்பதால் முருகனுக்கு இந்தப் பெயர்.

வேலன்: வெல்லும் வேலை உடையவன். அறிவாக, ஞான வடிவாக விளங்கும் வேல், கூர்மை, அகலம், ஆழம் என்னும் மூன்றும் உடையது. வேலை தாங்கியவன் என்பதால் முருகனுக்கு இந்தத் திருநாமம்.

முத்தையன்: பிறப்பிலேயே முத்து ஒளியுடையது. மற்ற மணிகள் பட்டை தீட்டினால்தான் ஒளிரும். ஆனால், இயல்பாகவே ஒளிர்பவன் முருகன் என்பதால் முத்தையன் என திருநாமம் பூண்டான்.

சுப்பிரமணியன்: மேலான பெரிய பிரம்மத்திலிருந்து தோன்றி ஒளிர்பவன் என்பதால் முருகனுக்கு இந்தத் திருநாமம்.

இதையும் படியுங்கள்:
நடுவிரலில் ஏன் மோதிரம் அணியக்கூடாது?
Sri Muruga peruman

வள்ளல் பெருமான்: முருகன் மண்ணுலகில் அவதரித்த வள்ளி இச்சா சக்தி மூலம் இக நலன்களையும் விண்ணுலக மங்கை தெய்வானை கிரியா சக்தி மூலம் பரலோக நலன்களையும் வேலின் மூலம் ஞான சக்தியையும் ஆகிய மும்மை நலன்களையும் முக்தி நலன்களையும் வழங்குகிறார்கள்.

ஆறுபடை வீடுடையோன்: மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம் , விசுத்தி, ஆக்ஞை என்ற ஆதாரங்களை ஆறுபடை வீடுகளாய் உடையவன் என்பதால் இப்பெயர்.

மயில்வாகனன்: மயில் - ஆணவம், யானை – கன்மம், ஆடு - மாயை இந்த மூன்றையும் அடக்கி வாகனமாய் கொண்டவன்.

தமிழ் தெய்வம்: தமிழே முருகன், 12 உயிர் எழுத்து - பன்னிரு தோள்கள், 18 மெய்யெழுத்து- பதினெட்டு கண்கள், ஆறு இன எழுத்து – ஆறு முகங்கள், ஃ ஆயுத எழுத்தே வேல்.

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் கொடுத்த வேலவனின் திருப்பெயர் விளக்கம் இது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com