
இப்பூவுலகைக் காக்கும் பரந்தாமனை நாம் நினைத்தவுடன் நம் கண் முன்னே உதிப்பது சங்கும் சக்கரமும்தான். உலகை ஆளும் உலகளந்த பெருமாளின் சங்கு, சக்கரத்தின் மகிமை குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
சங்கு: ஸ்ரீமன் நாராயணனின் கையில் இருக்கும் சங்கின் பெயர் பாஞ்சஜன்யம். பஞ்சஜனன் என்ற பெயருடன், சங்கு உருவத்தில் இருந்த ஒரு தைத்யனை அழித்த ஸ்ரீஹரி, அவனைச் சங்கு உருவிலேயே ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு ஸ்ரீமன் நாராயணன் அதை தரித்துக்கொள்ள, அன்றிலிருந்து அச்சங்கு பாஞ்சஜன்யம் எனப் பெயர் பெற்றது.
பாஞ்சஜன்யம், திருச்சங்கம் எனப் போற்றப்படும் சங்கு, போரில் இறைவனால் முழங்கப்பட்டதாகவும், நித்ய பூஜையின்போது முழங்கப்படுவதாகவும், அமைந்துள்ளது. பெருமாள் தம் இடக்கரத்தில் ஏந்தியிருக்கும் சங்கு ஒலிக்கும் மாத்திரத்திலேயே எதிரிகளை நடுநடுங்கச் செய்யும், முதல் பேராயுதம் ஆகும்.
'பண்பல செய்யும் பாஞ்சஜன்யம்’ என்னும் திருச்சங்கத்தை, தமது இடது புயத்தில், திரு இலட்சினையாய் தரித்த மகாவிஷ்ணுவை தரிசிக்க பாப விமோசனம் கிடைப்பதாக பஞ்ச சம்ஸ்காரத்தை விளக்கும் புராணங்கள் கூறுகின்றன.
ஸ்ரீ சக்கரம்: ஸ்ரீமன் நாராயணன், ‘சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்’ என்று போற்றப்படுகிறார். மகாவிஷ்ணுவின் ஒரு அவதாரமே, ஸ்ரீ சக்கரமாகும். தம் சக்தியெல்லாம் திரட்டி, ஸ்ரீ சக்கரமாகச் செய்து, தனது கையில் ஏந்தினார் ஸ்ரீ ஹரி. ஸ்ரீ சுதர்சனர் என்றால், நல்வழி காட்டுபவர் என்று பொருள். சுதர்சனம், விஷ்ணுவின் மகா அம்சம் என்று, சில்ப ரத்தினம் எனும் சாஸ்திரம் உரைக்கிறது.
ஸ்ரீ சுதர்சனரைப் பெருமாளாகக் கருதி வழிபடுவது வைணவர்கள் வழக்கம். சுதர்சனரின் 16 கைகள், 16 கலைகளைப் பிரதிபலிப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. ராமாவதாரத்தில் பரதனாக சுதர்சன ஆழ்வார் அவதரித்ததாகப் புராணம் மூலம் அறிகிறோம்.
இவர் தம்மைத் தீவிர பக்தியுடன் வணங்குபவருக்கு, அருளை வாரி வழங்கும் பேரருளாளர்! நோய், எதிரிகள், இடர்ப்பாடு, இன்னல்கள் நீக்க, ஸ்ரீ சுதர்சனரை வணங்க வேண்டும்.
நம் வாழ்க்கைச் சக்கரத்தை நன்முறையில் இயக்க, சக்கரத்தாழ்வாருக்கு சுதர்சன ஹோமம் செய்ய, வேலை, நோய்கள், திருமணம், சந்தான பாக்கியம், கடன், வழக்கு, வியாபாரம் போன்ற பல காரியங்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வும் அளிக்கிறார்.
‘அமரர்களுக்குக் காப்பானதும், பரிபூரணனான மகாவிஷ்ணுவின் திவ்ய ஆயுதமான, சக்கரத்தினை, எவனொருவன் தம் உடலில் தரிக்கின்றானோ, அவன் பாபங்கள் நீக்கப் பெற்று. பற்றற்ற மகரிஷிகள் சேரும், பரமபதத்தை அடைகின்றான்’ என்று ரிக் வேதம் கூறுகிறது.