

குருவாயூரப்பன் எல்லோருக்கும் கண்கண்ட தெய்வமாக விளங்குபவர். இந்த ஆலயம் தினமும் விடியற்காலை மூன்று மணிக்குத் திறக்கப்படும். அப்போது காணும் தரிசனத்தை நிர்மால்ய தரிசனம் என்பர். ஆலயக் கதவை திறந்தவுடன் மிகவும் பயபக்தியுடன் பக்தர்கள் கிருஷ்ணா, குருவாயூரப்பா, நாராயணா என்று பக்தி கோஷத்தோடு சன்னிதிக்கு முண்டியடித்துக் கொண்டு ஓடுவார்கள். அங்கு குருவாயூரப்பனுக்கு முதல் நாள் இரவு சாத்தப்பட்ட சந்தனக்காப்பு, ஆடை ஆபரணங்களுடன் அவன் சிறு குழந்தை கண்ணனாகக் காட்சி தருவான்.
ஓரிரு நிமிடங்களில் அவனது அலங்காரம் களையப்பட்டு உடனடியாக தைலாபிஷேகம் நடைபெறும். தைலாபிஷேகத்திற்குப் பிறகு வாகை மரத்தின் பட்டையை இடித்துத் தயாரிக்கப்படும் பொடியை குருவாயூரப்பன் திருமேனியில் சாத்தி எண்ணெய் போகத் தேய்க்கிறார்கள். இதைத்தான் வாகை சாத்து என்கிறார்கள். அதன் பிறகு தங்கக் குடத்திலிருக்கும் நீரில் திருமுழுக்காட்டுகின்றனர். இதற்குப் பிறகு குருவாயூரப்பனுக்கு அலங்காரம் செய்யப்படுகிறது. திருமுடியில் மயிற்பபீலி அணிந்து, கையில் வெண்ணை ஏந்தி சிறிய சிவப்புநிற கௌபீனம் அணிந்து புல்லாங்குழலுடன் பாலகோபாலனாக குருவாயூரப்பன் தரிசனம் தருகிறார்.
இந்த அபிஷேகத் தீர்த்தமும் தைலமும் பல நோய்களை குணப்படுத்தும் சக்தி பெற்றது என்று நம்பப்படுகிறது. இந்த வாகை சாத்து பற்றி ஒரு கதை கூறப்படுகிறது. ஒரு காலத்தில் தாய், தந்தையர் யாருமில்லாத நிராதரவான காஷு என்ற பத்து வயது சிறுவன் தொடர்ந்து 3 நாட்கள் உணவு இல்லாது அதனால் மிகவும் வருந்தி அருகிலிருந்த நதியில் மூழ்கி உயிரை விடத் துணிந்தான். அப்போது நாரத முனிவர் அவன் முன் தோன்றி ஒரு பாத்திரத்தைக் கொடுத்து அவன் விரும்பும்போதெல்லாம் அந்தப் பாத்திரத்திலிருந்து உணவு கிட்டும் எனக் கூறினாராம்.
அவனும் அதிலிருந்து உணவை வரவழைத்து சாப்பிட்டான். இந்நிலையில், அவனுக்கு ஒரு பேராசை ஏற்பட்டது. தண்ணீரில் மூழ்கி உயிர் விடுவது போன்று மீண்டும் நடித்து வீடு, செல்வம் முதலியவற்றைப் பெறலாம் என நினைத்து அதன்படி நதியில் சென்று மூழ்க, நாரத முனிவரும் வரவில்லை, முன்பு அவர் கொடுத்த பாத்திரத்தையும் காணவில்லை பேராசையால் தனக்கு நேர்ந்த துன்பத்தால் வருந்தி அவன் இறைவன் நாமத்தை தியானித்தபடியே இருந்தான். அவனது இந்த நிலையைக் கண்டு வருந்திய மகாலட்சுமி தாயார் அவனுக்கு பகவானிடம் உதவி செய்யுமாறு வேண்ட, பகவானும் இணங்கினார்.
ஒரு நாள் தியானத்தால் சுயநினைவிழந்த காஷுக்கு பகவான் காட்சி தர, அவன் அவரிடம் தன்னை ஆட்கொள்ளுமாறு வேண்டினான். திருமாலும் அதை ஏற்றுக் கொண்டு, ‘கலியுகத்தில் நீ வாகை மரமாகப் பிறப்பாய். அப்போது நான் குருவாயூரில் குருவாயூரப்பனாகக் காட்சி தருவேன்.
ஒவ்வொரு நாளும் எனக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் முடிந்ததும் வாகை பொடியால் தேய்த்து சுத்தம் செய்வார்கள். அந்த வகையில் நீ எனக்கு சேவை செய்வாய். இந்த வாகை சாத்து, நல்லெண்ணெய், வாகைப் பொடி, அபிஷேகத் தீர்த்தம் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்களின் சரும நோய் தீரும்’ என்று கூறி அச்சிறுவனை ஆசீர்வதித்து மறைந்தார் பகவான். இவ்வாறுதான் குருவாயூரப்பனுக்கு வாகை சாத்தும் வழக்கம் ஏற்பட்டதாம். இதன் மூலம் பலர் சரும நோய்களிலிருந்து மீண்டு நிவாரணம் பெறுகிறார்கள்.