
பிரம்ம முகூர்த்தத்திற்கு இணையான பலன்களைத் தரும் அற்புதக் காலமாக சந்தியா நேரம் விளங்குகிறது. அது குறித்து இந்தப் பதிவில் காண்போம். பிரம்ம முகூர்த்தம் என்பது அதிகாலை நேரம். அந்த அதிகாலை நேரத்தில் எழுந்து ஸ்நானம் செய்து விட்டு வீட்டில் விளக்கேற்றுவது மிகவும் அதிர்ஷ்டமான பலன்களைக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.
பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கு ஏற்றுபவர்களுக்கு தேவர்களின் ஆசீர்வாதமும், தெய்வங்களின் அருளும் கிடைப்பதாக ஐதீகம். ஆனால், பலருக்கு பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்திருக்க இயலாது. அவர்கள் என்ன செய்யலாம்?
பிரம்ம முகூர்த்தத்திற்கு இணையானது, சூரியன் மறையும் நேரமாகிய சந்தியா காலமெனக் கூறப்படுகிறது. அதாவது, மாலை மூன்று மணியில் இருந்து ஆறு மணி வரை சந்தியா காலமாதலால், இதுவும் பிரம்ம முகூர்த்தத்திற்கு இணையான அதிர்ஷ்ட பலன்களைத் தரும் நேரமாகும். சந்தியா காலத்தில், இறுதியாக இருக்கும் ஒரு மணி நேரம் மிகவும் விசேஷமானது.
அதனால் சந்தியா காலத்தில் தினமும் மாலை ஐந்து மணியிலிருந்து ஆறு மணிக்குள்ளாக வீட்டில் விளக்கேற்றுவது சாஸ்திர நியதி. குறிப்பாக, வெள்ளிக்கிழமைகளில் ஆறு மணிக்கு மேல்தான் சிலர் விளக்கு ஏற்றுவார்கள். இப்படிச் செய்வதை விட, ஆறு மணிக்குள்ளாகவே விளக்கு ஏற்றி விடுவது மிகவும் நல்லது. மாலை ஐந்து மணியிலிருந்து ஆறு மணிக்குள் தினமும் பூஜை அறையில் மூன்று விளக்குகளை வைத்து வழிபடுவது ராஜ யோகத்தைக் கொடுக்கும்.
சந்தியா கால நேரத்தில் வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருந்தால், அத்தனை தெய்வங்களின் ஆசீர்வாதங்களும் கிடைக்கும். மேலும், தினமும் மாலை வேளையில் ஐந்து மணியிலிருந்து இறை வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தால், நமக்கேற்படும் அத்தனை கஷ்டங்களும் நீங்கி நல்ல விஷயங்கள் நடக்கத் துவங்கும்.
விளக்கேற்றி வழிபடுதலை சந்தியா கால நேரத்தில் தொடர்ந்து செய்யச் செய்ய, அவற்றின் மகத்துவத்தை உணரக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். ஒவ்வொரு பிரார்த்தனைக்கும் ஒவ்வொரு நிறத்தில் தீபத் திரியை ஏற்றி வழிபடுவது வழக்கம். அந்த வகையில் மஞ்சள் நிற திரியானது துன்பங்களைப் போக்கக்கூடிய ஆற்றல் கொண்டுள்ளது.
சாதாரண வெள்ளை திரியில் மஞ்சளைத் தோய்த்து காய வைத்து பின்னர் பயன்படுத்தினால் கஷ்டங்கள் நீங்கும். சந்தியா கால வேளையில் மஞ்சள் திரியை கொண்டு தீபம் ஏற்றுவது மிகவும் நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்க வல்லது. பிரம்ம முகூர்த்தத்தில் எழுபவர்கள், ஐந்து விளக்கில் இதுபோல் மஞ்சள் திரியை கொண்டு தீபம் ஏற்றினால் மிக நல்ல பலன்கள் கிடைக்கும்.
பிரம்ம முகூர்த்தம், சந்தியா காலம் இவ்விரண்டு வேளைகளும் இணையெனக் கூறப்படும் காரணம் என்னவென்றால், இரண்டுமே இறை வழிபாட்டிற்குரிய மிக மிக விசேஷமான காலங்களாகும்.