

நாம் வழிபடும் கோயில் விக்கிரகங்கள் பெரும்பாலும் கருங்கல்லால் வடிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். கருங்கல்லால் சிலை வடிப்பதற்கு பல காரணங்கள் உண்டு. உலோகத்தால் செய்யப்படும் விக்கிரகங்களை விட கருங்கல்லால் செய்யப்படும் விக்கிரகங்களுக்கு ஆற்றல் பல மடங்கு அதிகம். கருங்கல் எந்த சக்தியையும் தன்வசம் இழுத்துக்கொள்ளும் தன்மையுடையது. கருங்கல்லில் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் எனும் பஞ்சபூதங்கள் சக்தி அடங்கியுள்ளது. இது வேறு எந்த உலோகத்திலும் வெளிப்படுவதில்லை.
நிலம்: பஞ்சபூதங்களில் ஒன்றான நிலம் கல்லில் உள்ளது. எனவேதான், கல்லில் கூட செடி, கொடி, மரம் போன்ற தாவரங்கள் முளைக்கின்றன.
நீர்: கல்லில் நீர் உள்ளது. எனவேதான் தனது இயல்பான கூறின் நிலையிலிருந்து மாறாமல் இருக்கிறது. கல்லில் நீரூற்று இருப்பதைக் காணலாம். எவ்வளவு வெயில் அடித்தாலும் கருங்கல்லால் கட்டப்பட்ட கோயில் மண்டபங்களில் குளிர்ச்சியே நிலவும். எனவேதான் கல்லில் தேரை போன்ற உயிரினங்கள் வாழ்கின்றன.
நெருப்பு: கல்லில் நெருப்பு அம்சமும் உண்டு. கற்களை உரசினால் தீப்பொறி பறக்கிறதே, அதுவே அதற்கு சான்று. ஆதிமனிதன் கற்களை உரசியே நெருப்பை உண்டாக்கினான்.
ஆகாயம்: ஆகாயத்தைப் போலவே வெளியிலிருக்கும் சத்தத்தை தனக்குள் ஒடுக்கி பின் வெளியிடும் சக்தி கல்லுக்கு உண்டு. எனவேதான், கருங்கல்லில் கட்டப்பட்ட கோயில்களில் நாம் கூறுவதை எதிரொலியாக எதிரொலிக்கும் அதிசயம் நடைபெறுகிறது.
இது போன்ற காரணங்களால்தான் இறை வடிவங்களை கல்லில் வடிவமைத்து வழிபாடு செய்கிறோம். ஆகம விதிகளின்படி கருங்கல்லால் கட்டப்பட்ட பழங்காலக் கோயில்களில் வேத ஆகம சிற்ப சாஸ்திரப்படி யந்திர ஸ்தாபனம் சேர்த்து தெய்வ உருவங்களை கருங்கல் சிலையாக வடித்து முறையாக பூஜை செய்து வரும் கோயில்களுக்குச் சென்று நாம் இறைவனை தரிசனம் செய்யும் வேளையில் நம் உடலில் சக்தி ஊடுருவிச் செல்வதை அனுபவபூர்வமாக உணரலாம்.
அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனைகளை முறைப்படி செய்யும்போது ஒரு கோயிலின் பஞ்ச பூதங்களின் நல்ல அதிர்வுகள் நம்மை வந்தடைகின்றன. அக்கோயில் தெய்வத்தை நாம் வணங்கும்போது நம் உடலில் நல்ல அதிர்வுகள் உண்டாகி, நம் வாழ்வில் நல்ல பலன்கள் உண்டாகின்றன. இதனால்தான் நம் முன்னோர்கள் இறை மூர்த்தங்களை கருங்கல்லில் உருவாக்கி வழிபட்டனர்.