நாம் எத்தனையோ சித்தர்களை பற்றியும் அவர்களது ஜீவசமாதி இருக்கும் இடங்களைப் பற்றியும் கேள்விப்பட்டும் பார்த்தும் இருக்கிறோம். அந்த வகையில், இன்று ஒரு ஜீவ சமாதி இருக்கும் இடத்தைப் பற்றி பார்க்கப் போகிறோம். இவரைப் பற்றி ஒரு சின்ன அறிமுகம். உண்மை பெயர் காளிமுத்து என்ற பழனிச்சாமி. இவர் பழனியில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கணக்கம்பட்டி என்ற இடத்தில் பல காலம் வாழ்ந்து வந்தார்.
எந்த நேரமும் கையில் அழுக்கு மூட்டையுடன் சுற்றி திரிவார். இங்கு உள்ளவர்கள் இவரை அழுக்கு மூட்டை சாமி என்று அழைத்து வந்தார்கள். இவரை பார்க்கும் மக்களை எல்லாம் இவர் திட்டித்தான் ஆசிர்வதிப்பார். எந்த நேரமும் பச்சை சட்டை, பச்சை வேட்டி பச்சை தலை பாகை அணிந்து கையில் அழுக்கு மூட்டையுடன் காணப்படுவார். இவரின் பூர்வீகம் எந்த ஊர் என்று தெரியவில்லை.
இவரை சிலர் முருகன் அவதாரமாகவும் சிலர் சாய்பாபா அவதாரமாகவும் நினைத்து வழிபடுகின்றனர். ஆரம்ப காலத்தில் பழனி மலை முருகன் அடிவாரத்தில் உள்ள இடும்பன் சன்னதியில் நீண்ட நேரம் தவக்கோலத்தில் அமர்ந்து தவம் செய்வார். யாரிடமும் பேச மாட்டார். இவரை ஞானவள்ளல் பழனிச்சாமி என இங்குள்ள மக்கள் அழைப்பதுண்டு. இவரது பிறப்பு மற்றும் இறப்பு பற்றி சரியான தகவல் இல்லை.
ஆனால் தற்போது இவரின் ஜீவ சமாதி பழனியில் இருந்து 7km தொலைவில் உள்ள கணக்கம்பட்டி என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த இடம் சித்தர்களின் ஆசி பெற்ற இடமாக கருதப்படுகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு 50 ஆயிரத்திற்கும் குறையாமல் மக்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இங்கு வந்தவர்களுக்கு மன நிம்மதியும் ஒரு இனம் புரியாத புத்துணர்ச்சியும் கிடைப்பதாக சொல்கிறார்கள்.
சிலர் இவர் நிறைய அற்புதங்கள் நடத்தி இருப்பதாக சொல்கிறார்கள். அதை கண்கூடாக பார்த்தவர்களும் இருக்கிறார்கள். ஒரு ஒரு முறை வட மாநிலத்திலிருந்து ஒரு வாய் பேச முடியாத சிறுவன் குடும்பம் பழனிக்கு சென்று விட்டு இவரைப் பற்றி கேள்விப்பட்டு கணக்கம்பட்டிக்கு காரில் வந்தனர். சிறுவனின் தந்தையிடம் ஒரு பிரியாணி பொட்டலம் வாங்கி வரச் சொன்னார். அவர்களோ சைவம்.
சாமியார் வேண்டுகோளுக்கு இணங்க பிரியாணி பொட்டலம் வாங்கி வந்தனர். சாமியார் அதனை அந்த சிறுவனிடம் கொடுத்தபோது அது சாம்பார் சாதமாக மாறி இருந்தது. அவர்கள் புறப்படுகையில் எதிரே வந்த லாரியில் அவரது தாயார் விபத்தில் சிக்க இருந்தார். இது கண்ட வாய் பேச முடியாத சிறுவன் அம்மா லாரி என்று கத்தினான் வாய் பேச முடியாத சிறுவனின் பேச்சைக் கேட்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
மேலும் ஒரு நபருக்கு... சித்தர் கைகாட்டிய இடத்தில் தோண்ட சொன்னார். அங்கிருந்து குபீர் என தண்ணீர் வந்தது. இதைப் போன்று எண்ணற்ற அற்புதங்களை இவர் தன் வாழ்நாளில் நடத்தி வந்தார்.
நடிகர் சூர்யா, கார்த்திக் இருவரும் இங்கு வந்து இவரிடம் ஆசி பெற்று சென்ற பின்னர் நல்ல திருப்புமுனை ஏற்பட்டது என்று கூறினார்கள். இதேபோன்று நடிகர் யோகி பாபு, மனோபாலா, பாக்யராஜ் போன்ற எண்ணற்ற நடிகர்களும் அரசியல் பிரபலங்களும் இங்கு வந்து இவரிடம் ஆசி பெற்று சென்றுள்ளனர்.
இவர் ஒரு அமாவாசை நாளில் புனர்பூசத்தன்று கணக்கம்பட்டியில் ஜீவசமாதி அடைந்தார். அன்றிலிருந்து இந்த இடம் மிகவும் பிரபலமாகி வருகிறது. இங்கு தினசரி அன்னதானம் நடைபெறுகிறது. அமாவாசை பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜையும் அன்னதானமும் நடைபெறும்.
இவர் ஒரு சமயம் இடும்பன் சன்னதியில் தவம் செய்து விட்டு வரும்போது பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தார். டாக்டர் இவரை பரிசோதித்து விட்டு இவர் இறந்துவிட்டார் என்று கூறினார். ஆனால் அன்று மாலையே இவர் உயிர் பெற்று எழுந்தார்.
எது எப்படியோ இங்கு வந்தால் நிச்சயம் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. இவரது ஜீவ சமாதி காலை 7 மணி முதல் மாலை 9 மணி வரை திறந்து இருக்கும். பழனியில் இருந்து பத்து நிமிடத்திற்கு ஒரு முறை கணக்கம்பட்டிக்கு பஸ் வசதி உள்ளது. ஆட்டோவிலும் செல்லலாம். தற்போது இவரது ஜீவசமாதி பறந்து விரிந்து காணப்படுகிறது. எங்கு பார்த்தாலும் மரங்களும் பசுமையான இடங்களும் முழுமையாக காட்சியளிக்கிறது. வாழ்க்கையில் ஒரு முறை ஏனும் இந்த சித்தரை வழிபட்டு நாமும் பயனடைவோம்.