

ஒவ்வொரு மனிதனும் அவனுடைய இக்கட்டான சூழல்களில் எல்லாம், ‘என் தலையெழுத்து’ என்று வருத்தப்பட்டோ கோபப்பட்டோ சொல்வதுண்டு. ஆனால், அவர்களுக்கு சந்தோஷம் வரும் நேரத்தில் ஒருமுறை கூட எவரும், ‘நான் இந்த புண்ணியம் பெற என்ன பாக்கியம் செய்தேன்’ என நினைப்பதில்லை. மக்கள் தங்கள் துயரங்களுக்கு கடவுளையும் மற்றவர்களையும் குற்றம் சொல்வார்களே தவிர, நமது கடந்த காலச் செயல்கள்தான் இதற்கு முக்கியக் காரணம் என்பதை உணர்வது அரிதாகவே உள்ளது.
ஒருவரின் தலையெழுத்து என்பது அவனது ஆசைகள், கடந்த காலச் செயல்கள், இயற்கையின் செயல்பாடு, கர்ம வினைகளுக்கான காலம் போன்றவை மட்டுமல்ல, வேறு சில காரணங்களும் கூடிப் பின்னிப் பிணையப்பட்ட சிக்கலான முடிச்சு என்றே கூற வேண்டும். இந்தக் காரணங்களின் விளைவுகளைக் கூட்டிக் கழித்த பின்னரே அவரவர் அனுபவிக்க வேண்டிய ஒட்டுமொத்த பலன்களே தலையெழுத்து என அறியப்படுகிறது. இந்தத் தலையெழுத்தை மாற்ற முடியுமா?
நிச்சயம் முடியும். இறைவனால் முடியும். தஞ்சாவூர் மாவட்டம், திரிபுவனம் என்ற கிராமத்தில் சரபேஸ்வரர் என்று அழைக்கப்படும் சரபேஸ்வரர் கோயிலில் அருள்பாலிக்கும் சரபேஸ்வரர் உங்கள் ஒட்டு மொத்த தலையெழுத்தை மாற்றி, உங்களை சிக்கல்களில் இருந்து விடுபட அருள்புரிகிறார். மனிதன் கலியுகத்தில் தனக்கு ஏற்படும் துன்பங்களைப் போக்கிக்கொள்ளவும், தன்னை ஆபத்துகளிலிருந்து காக்கவும் சரணடைய வேண்டியவர் சரபேஸ்வரர். இவர் உருவாவதற்கும் காரணம் உண்டு. ஸ்ரீமந் நாராயணன் இரண்யகசிபுவை வதம் செய்வதற்காக நரசிம்ம அவதாரம் எடுத்தார். இரண்யகசிபு வதத்துக்குப் பிறகும் ஆத்திரம் குறையாது இருந்த நரசிம்மரை அடக்க அவரை விட உக்கிரமான அம்சமாக சிவன் சரபேஸ்வரராகத் தோன்றினார்.
சரபேஸ்வரர் உருவமானது, மனிதன், மிருகம், பறவை மூன்றும் சேர்ந்த கலவை. அதிலும் தங்க நிறப் பறவையின் உடலும், இறக்கை இரண்டும் தூக்கிய நிலையிலும், 4 கால்கள் கீழ் நோக்கியும், 4 கால்கள் மேல் நோக்கியபடியும் வால் மேலே தூக்கியபடி தெய்வத்தன்மை கொண்ட மனித தலையும் சிங்கத் தன்மை கொண்டு விசித்திரமாக அருள்பாலிக்கிறார். பிரத்யங்கிரா, சூலினி தேவி ஆகியோர் இவரின் சக்திகளாக விளங்குகிறார்கள். சரபேஸ்வரரின் நெற்றிக் கண்ணிலிருந்து பிரத்யங்கிரா தேவி தோன்றி, நரசிம்மரின் உக்கிரத்தை தணித்ததாக புராணங்கள் கூறுகின்றன.
அக்னி தெய்வமான சரபேஸ்வரரை வணங்கினால் கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் தொலைவர். பில்லி, சூன்யம், ஏவல் போன்றவற்றிலிருந்து முழுவதாக விடுபடலாம். தீராத நோய்களிலிருந்து மீளலாம். எந்தச் செயல் செய்தாலும் அதில் வெற்றி கிடைக்க வேண்டுமென்றாலும் இவரை வழிபடலாம். இந்தக் காலத்தில் நமக்குக் கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் ஏராளமாக இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து விடுபடவும், தரித்திரங்கள் நீங்கவும் இவரை வழிபடலாம்.
இவரது அம்சமான பிரத்யங்கிரா தேவியை வழிபட, நமக்கு வரவிருக்கும் துன்பங்கள் ஆபத்துக்கள் தொலைந்து போகும். இவரது இன்னொரு சக்தியான சூலினி துர்கையின் அம்சத்தைப் பெற்றிருப்பதால் அனைவரின் நலத்தையும் காப்பாற்றுபவர்.
சரபேஸ்வரர் ஆலயம் கிழக்கு நோக்கி உள்ளது. ஏழு நிலைகள் உள்ள ராஜகோபுரத்தை கொண்டது. வெளிப்பிராகாரத்தில் வடக்கில் அறம் வளர்த்த நாயகியின் சன்னிதி அமைந்துள்ளது. தெற்கு நோக்கி அன்னை அருள்பாலிக்கிறாள். நடுக்கம் தீர்க்கவும் கம்பஹரேஸ்வரருடன் துணை சேர்ந்து இந்த தேவி உடல் நடுக்கங்களைப் போக்குகிறாள்.
திரிபுவனம் சரபேஸ்வரர் கோயில் மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. இது சோழர் காலக் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டு. சரபேஸ்வரர் ஆணவம், பயம், பகை போன்றவற்றை நீக்குவதாக நம்பப்படுகிறது. தலையெழுத்தையே மாற்றக்கூடிய சக்தி படைத்தவர் சரபேஸ்வரர். திரிபுவனம் சரபேஸ்வரர் கோயில் சோழர் வரலாற்றையும் ஆன்மிக நம்பிக்கையும் ஒருங்கே கொண்ட ஒரு வரலாற்று சிறப்பு மிக்கத் தலமாகும்.