
வாரத்தின் மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமையும், ஆறாம் நாளாக வெள்ளிக்கிழமையும் விளங்குகின்றன. பலராலும் இறைவனை வழிபட உகந்த நாட்களாக விளங்கும் இந்த இரு நாட்களில் வீட்டில் என்ன செய்யலாம், எதையெல்லாம் தவிர்க்கலாம் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிலர் கடன் கொடுக்கத் தயங்குவார்கள். ஏன்? அப்படிக் கொடுத்தால் என்ன நேரும்? ஏனெனில், செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கும், வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கும் உகந்த நாட்களாகக் கருதப்படுகின்றன. நம்மில் பெரும்பாலானோர் வழிபடும் இந்த இரண்டு தெய்வங்களும் நமக்குச் செல்வ வளத்தைக் கொடுப்பதுடன், அவை நமது வீட்டில் நிரந்தரமாக இருப்பதற்கும் அருள்புரிகிறார்கள்.
இதனால்தான் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பணம் வைத்து இருக்கும் பெட்டியில் இருந்து பணத்தை எடுத்து மற்றவர்க்குக் கடன் கொடுப்பதைக் கூடுமானவரை தவிர்க்க வேண்டும் என பெரியோர்கள் கூறுகின்றனர். இப்படிக் கடன் கொடுப்பதனால், நம்மிடம் இருக்கும் அனைத்துச் செல்வ வளங்களும் நம்மை விட்டுச் சென்று விடும் என்பது ஐதீகம். மேலும், சில முக்கியமான செயல்பாடுகளை தவிர்த்து, இந்த இரண்டு கிழமைகளிலும் பணம் வைத்திருக்கும் பெட்டியை பூஜிப்பது நல்லது.
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டியவை: அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் கண் விழித்து படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டியது அவசியம். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்றி திருமகளை வழிபட வேண்டும். சங்கு, நெல்லிக்காய், பசுவின் சாணம், கோ ஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம். வீட்டில் செல்வம் நிலைத்து நிற்க, வீடுகளில் வெள்ளை புறாக்களை வளர்க்கலாம்.
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் செய்யக்கூடாதவை: குத்து விளக்கைத் தானாக அணைய விடக் கூடாது, ஊதியும் அணைக்கக் கூடாது. புஷ்பத்தினால் மட்டுமே அணைக்க வேண்டும். இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.
வாசற்படி, அம்மி, ஆட்டுக்கல், உரல் இவற்றில் உட்காரக்கூடாது. விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறருக்குக் கொடுக்கக் கூடாது. மேலும், அந்த தினங்களில் நம்முடைய வீட்டிற்குள் அல்லது வீட்டின் வெளியில் நகத்தை வெட்டுதல் கூடாது.