

நந்தி இல்லாத சிவன் கோவில் பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இருக்கிறதே! சிவன் கோவில் என்றால் நந்தி பகவான் நிச்சயம் வீற்றிருப்பார். ஆனால் நந்தி பகவான் இல்லாத சிவ ஸ்தலமும் ஒன்று உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே உள்ள பஞ்சவதி கபாலீஸ்வரர் மகாதேவ் கோவிலில் ஈசனுக்கு எதிரே நந்தி கிடையாது.
9 நந்திகள்:
பழமையான சிவாலயங்களில் பத்மநந்தி, நாகநந்தி, விநாயக நந்தி, மகாநந்தி, சோமநந்தி, சூரிய நந்தி, கருட நந்தி, விஷ்ணு நந்தி, சிவ நந்தி என 9 நந்திகள் காணப்படும். இவற்றை ஸ்ரீசைலம், நந்தியால் போன்ற திருத்தலங்களில் காணமுடியும்.
மனித உருவ நந்தி (அம்பர் மாகாளம்):
மயிலாடுதுறை அருகில் உள்ள அம்பர் மாகாளம் கோயிலில் உள்ள நந்தி தேவர் மனித உருவில் காட்சி தருகிறார். அதேபோல் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நந்தி தேவர் மனித உருவத்தில் மிருதங்கம் வாசிக்கும் கோலத்தில் செதுக்கப்பட்டுள்ளார்.
தர்ம நந்தி:
சிவபெருமானுக்கு அருகில் நெருக்கமாக இருக்கும் நந்தி தர்ம நந்தி எனப்படும். இந்த நந்தியின் மூச்சுக்காற்று சுவாமியின் மீது பட்டுக்கொண்டே இருக்கும். அதனால் நந்திக்கும் சுவாமிக்கும் இடையே செல்லக்கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
கோபுரத்தில் நந்தி:
மேட்டூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் கோபுரத்தில் கலசத்திற்கு பதிலாக நந்தி தேவர்கள் காணப்படுவது சிறப்பாக உள்ளது.
மாக்காளை:
மதுரை ஆவணி மூல வீதியில் 'மாக்காளை' எனப்படும் சுதையால் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான நந்தி உள்ளது.
பிரம்மாண்ட நந்தி:
தஞ்சை பெரிய கோவிலில் உள்ள ஒற்றைக் கல்லால் ஆன நந்தி தமிழகத்திலேயே மிகப் பெரியதாகும். இந்த நந்தி உருவத்தில் வளர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கருங்கல் நந்தி:
ஆந்திர மாநிலம் லேபாட்சியில் உள்ள கருங்கல் நந்தி இந்தியாவின் மிகப்பெரிய கல் நந்திகளில் ஒன்றாகும்.
பின்னங்கால் இல்லாத நந்தி(புளியஞ்சோலை):
கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோவிலில் உள்ள நந்திக்கு வலது பின்னங்கால் கிடையாது. இவர் கோவிலுக்கு அருகில் உள்ள புளியஞ்சோலையில் பயிரிடப்பட்டிருந்த கடலைச் செடிகளை மேய வந்த போது காவலர்களால் தாக்கப்பட்டு, பின்னங்கால் வெட்டுப்பட்ட நிலையில் இங்கு நந்தி காட்சி தருகிறார்.
காதில்லாத நந்தி:
வெட்டுப்பட்ட நந்தியைப் போலவே பல்வேறு தலங்களில் காதில்லாத நந்திகளும் வித்தியாசமான கோலங்களில் காணப்படுகின்றன.
விலகிய நந்தி:
திருப்புன்கூர் சிவலோகநாதர் கோவிலில் நந்தனார் வணங்குவதற்காக, சிவபெருமான் நந்தியை விலகி இருக்குமாறு செய்த தலம். இது மயிலாடுதுறை அருகில் உள்ளது. இதேபோல் பட்டீஸ்வரம், திருப்பூந்துருத்தி கோவில்களிலும் விலகிய நந்தியைக் காணலாம்.
திரும்பிய நிலை நந்தி:
செய்யார் அருகில் திருவோத்தூரில் உள்ள சிவாலயத்தில் இறைவன் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதம் உபதேசித்தபோது, மற்றவர்கள் உள்ளே நுழைந்து இடையூறு செய்யாமல் இருப்பதற்காக நந்தி வாயிலை நோக்கி திரும்பிய நிலையில் காவல் காக்கிறார்.
கால் மாற்றி அமர்ந்த நந்தி: திருவண்ணாமலையில் உள்ள இந்த நந்தி வழக்கமான நிலையிலிருந்து மாறி, கால் மாற்றி அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறது.
நின்ற நிலை நந்தி:
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சிவபெருமான் சுந்தரருக்காக தூது சென்றதால், வாகனமான நந்தி அமராமல் நின்ற நிலையில் உள்ளது.
மூன்று தலை நந்தி:
ஆந்திராவில் உள்ள சாயா சோமேஸ்வரர் கோவிலில் சிவன், விஷ்ணு, சூரியன் மூவருக்கும் முக்கோண அமைப்பில் கோவில் உள்ளது. இக்கோவிலில் மூன்று தலைகளைக் கொண்ட நந்தி காணப்படுவது வித்தியாசமான அமைப்பாகும்.
விஷ்ணு நந்தி (மால்விடை நந்தி):
பல சிவாலயங்களில் கொடி மரத்திற்கு பக்கத்தில், அதிகார நந்தியை அடுத்து ஒரு நந்தி காணப்படும். அது மால்விடை எனப்படும் விஷ்ணுநந்தி. திரிபுர சம்ஹார காலத்தில் திருமால் நந்தி வடிவம் எடுத்து சிவனைத் தாங்கினார் என்கிறது புராணம்.