

வாழ்வில் பல செல்வங்களை அள்ளித்தருவது மகாலக்ஷ்மி வழிபாடு. பல லக்ஷ்மிகள் நமக்கு நன்மை தரக்கூடியவர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக வைபவ லக்ஷ்மி நாம் வேண்டியவற்றைத் தரக்கூடிய வராக இருக்கிறார். வைபவம் என்றால் கோலாகலம், திருவிழா என்று பொருள்படும். எப்படி ஒரு திருவிழா சமயத்தில் நாம் மகிழ்ச்சியாக இருப்போமோ அதேபோல் வைபவ லக்ஷ்மி வழிபாடு செய்யும்போது நாம் வேண்டியது எதுவாக இருந்தாலும் அது கிடைக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ முடியும்.
இந்த வைபவ லக்ஷ்மி வழிபாட்டை கர்நாடகா மற்றும் ஆந்திரா பகுதியில்அதிக அளவில் செய்வார்கள். மிக எளிமையான முறையில் தொடர்ச்சியாக 11 வாரங்கள் மகாலட்சுமிதாயாரை வைபவ லக்ஷ்மி யாக நினைத்து வழிபாட்டை செய்ய வேண்டும்.
இதை 11 வெள்ளிக்கிழமைகள் செய்ய வேண்டும். பெண்களுக்கு நடுவில் வழிபாடு செய்ய முடியாத சூழல் வந்தால் அதை கணக்கில் எடுக்காமல் அடுத்த வாரம் மேற் கொள்ளலாம். வீட்டில் மகாலக்ஷ்மி தாயார் படம் அல்லது சிலையை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து நெய் தீபங்களை ஏற்றி வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் போடுங்கள்.
தாயாருக்கு முன் ஒரு அகல் விளக்கில் நெய் ஊற்றி தாமரை தண்டு திரி போட்டு தீபம் ஏற்றவேண்டும். ஏதாவது ஒரு இனிப்பை நைவேத்தியம் செய்யவேண்டும். அடுத்ததாக லக்ஷ்மி தாயாருக்கு செண்பக மலர் ஒன்றை வைக்கவேண்டும். கடையில் வைபவ லக்ஷ்மி புத்தகத்தை வைத்து அதில் கூறியுள்ளபடி பாராயணம் செய்ய வேண்டும். மகாலக்ஷ்மி தாயார் பற்றிய கதைகள் அதில் இருக்கும். அதைப் படிக்கவேண்டும். பிறகு கற்பூர தீபம் காட்டி வழிபாட்டை நிறைவு செய்யவேண்டும். பூஜை முடித்தபிறகு மூன்று சுமங்கலிப் பேர்களுக்கு வெற்றிலை பாக்கு, வாழைப்பழம்,மஞ்சள் கயிறு வைத்து தாம்பூலம் கொடுக்கவேண்டும்.
இந்த முறையில் மகாலக்ஷ்மித்தாயாரை 11 வாரங்கள் வழிபட அவர்கள் வேண்டிய வரங்கள் கிடைக்கும். வாழ்வில் அனைத்து வளங்களையும் பெற்று மகிழ்ச்சியாக வாழ இந்த பூஜை தருவதாக இருப்பதால் பெண்கள் அவசியம் வைபவ லக்ஷ்மி வழிபாடு செய்வதால் சிறப்பாகவும் மேன்மையுடனும் இருக்கலாம்.