

பொதுவாக சனிக்கிழமை என்றாலே நம் நினைவுக்கு வருவது திருப்பதி வேங்கடேச பெருமாள்தான். அதோடு சனிக்கிழமை என்றாலே நாம் எல்லோரும் அச்சப்படுவதற்கு முக்கிய காரணம் அதில் 'சனி' இருக்கே என்றுதான். அந்தச் சனியையே ஆட்கொண்டவர்தான், நம் ஸ்ரீநிவாசப் பெருமாள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
ஏன் சனிக்கிழமை விசேஷம்?
புரட்டாசி சனிக்கிழமை மட்டுமின்றி, ஒவ்வொரு வாரமும் வரும் சனிக்கிழமையும் பெருமாளுக்கு உகந்த நாள். அன்று அவரை தரிசிப்பதால், நம்முடைய வாழ்வில் ஏற்படும் தடைகளை நீக்கி, சகல ஐஸ்வர்யங்களையும் வழங்கும் என்பது நம்பிக்கை.
வழிபாட்டு முறை:
அதிகாலையிலேயே எழுந்து நீராடி, நெற்றியில் திருமண் அணிந்து, துளசியோடு பெருமாள் கோவிலுக்குச் செல்வது மனதிற்கு பெரும் அமைதி மற்றும் நிம்மதியைத்தரும்.
வீட்டில் விளக்கேற்றி, பெருமாளுக்குப் பிடித்தமான 'மஞ்சள் பொங்கல்' அல்லது 'சுண்டல்' நிவேதனம் செய்து வழிபடலாம்.
திருப்பதி வேங்கடவனை மனதார நினைத்து 'கோவிந்தா... கோவிந்தா...' என மனதார சொல்லிவிட்டு, எல்லா வினைகளையும் தீர்த்துவிடு என்று வேண்டிக்கொண்டால், மனதில் இருக்கும் வினைகள் மறைந்து, மனம் லேசாக ஆகிவிடும்.
சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவதால் சனி பகவானின் தாக்கம் குறைந்து, நற்பலன்கள் கிட்டும். உடல் ஆரோக்கியம் நன்கு சீர்படுவதோடு, குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
ஒவ்வொரு சனிக்கிழமையும், அந்த கருணை உள்ளம் கொண்ட வேங்கடனை தரிசிப்போம். அவன் தாள் பணிந்து, அருளைப் பெறுவோம்.
வாழைப்பழம் தேங்காய் இரண்டையும் இறைவனுக்கு படைப்பது ஏன் தெரியுமா?
எந்த பழமும் சாப்பிட்ட பின் கொட்டையை எரிந்தால் அது முளைக்கும். ஆனால் வாழைப்பழத்தை உரித்தோ அல்லது முழுசாகவோ வீசினால் அது முளைப்பது இல்லை. இது பிறவியற்ற முக்தியைக் காட்டுகிறது. எனது இறைவா இனி ஒரு பிறவாத நிலையை தந்துவிடு என்பதை உணர்தவே, நாம் வாழைப்பழத்தை இறைவனுக்கு படைக்கிறோம்.
அதேபோல்தான் தேங்காயும். நாம் சாப்பிட்டு மிச்சம் போட்டால் முளைக்காது. முழு தேங்காயில் இருந்துதான் தென்னங்கன்று முளைக்கும். அதேபோல்தான் வாழை மரத்தில் இருந்துதான் வாழை கன்று முளைக்கும். நமது எச்சில்படாத இரண்டையும் இறைவனுக்கு படைப்பதன் ரகசியம் இதுதான்.