

நம் கஷ்டங்களை மனிதர்களிடம் சொல்லி அது மேலும் அதிகமாக மாறுவதைவிட, கடவுளிடம் கஷ்டத்தை சொல்வது மிகவும் நல்லது. அப்படி சொல்ல முடியாத கஷ்டங்களை கேட்டு பக்தர்களுக்கு ஆறுதல் கூறும் ஓர் சிவதலம் மதுரையில் உள்ளது. அதுதான் மதுரையிலிருந்து 14 கி.மீ. தூரத்தில், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள விராதனூர் அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் கோவில்.
பொதுவாக எல்லா சிவாலயங்களிலும் ரிஷபாரூட மூர்த்தி, உப மூர்த்தியாகத்தான் இருப்பார். ஆனால் இக்கோவிலில், ரிஷப வாகனத்தின் மேல் சுவாமியும் அம்பாளும் அமர்ந்த கோலத்தில் மூலவராய் எழுந்தருளி இருப்பது வேறு எந்த தலத்திலும் நாம் காணமுடியாத அரிய காட்சி ஆகும். பிரதோஷ காலத்தில் இங்கு நந்திக்கு பதிலாக மூலவரையே வழிபடலாம் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.
அதேபோல், நம் நாட்டில் வேறு எந்த தலத்திலும் இல்லாத வகையில், மூலவருக்கு அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் என்ற திருநாமம் அமைந்திருப்பதும், ஒரு தனி சிறப்பாகும். இப்படிப்பட்ட திருநாமம் அமைந்ததற்கு பின்னணியில் ஒரு வரலாற்று கதை உள்ளது.
முன்னொரு காலத்தில் திருஉத்திரகோசமங்கை எனும் ஊரில் வாழ்ந்த ஒருவர் தன் மனைவியுடனும், தன் மகன்கள் மற்றும் மகளுடன் சேர்ந்து, அழகர்கோவிலுக்கு சென்று தன் பேரக்குழந்தைகளுக்கு முடி காணிக்கை செலுத்தி வருவதற்காக மாட்டு வண்டி கட்டிக்கொண்டு இவ்வழியாக வந்தார்.
இக்கோவில் அமைந்துள்ள இவ்விடத்தில் தமது மாட்டு வண்டியை நிறுத்தி அங்கு இருந்த ஆலமரத்தின் கிளையொன்றில் தொட்டிலை கட்டி குழந்தையை துயில் கொள்ள வைத்துவிட்டு, பெண்கள் உணவு சமைக்க, ஆண்கள் அனைவரும் அருகாமையில் ஓடும் நதியில் நீராடி திரும்பி வந்து பார்த்தபோது, தொட்டிலில் துயில் கொண்டிருந்த குழந்தையைக் காணவில்லை.
ஆலமரத்து அசரீரியும் அற்புத வரலாறும் கொண்ட சிவதலம் மதுரை:
அவர்கள், கடவுளே ஏன் இந்த சோதனையென இருகரம் கூப்பி ஆகாயத்தை நோக்கியபோது, அவர்களின் கண்களுக்கு ஆகாயத்தில் அக்குழந்தை அந்தரத்தில் மிதப்பதைக் கண்டு பதை பதைத்தனர். அதேவேளையில் அந்த ஆலமரத்தின் உச்சியில் இருந்து ஓர் அசரீரியின் குரல் கேட்டது.
'நீங்கள் கட்டிய தொட்டிலுக்கு அடியில் உங்களின் அழுத கண்ணீரை ஆற்றும் வல்லமை படைத்த சிவன் சிலையொன்று பூமியினுள் புதையுண்டு கிடக்கிறது. அவரின் திருஉருவச்சிலையை வெளிக் கொணர்ந்து வழிபடுவதாக வாக்கு தந்தால், அந்தரத்தில் காணும் அந்த குழந்தை அடுத்த கணமே தொட்டிலில் துயில் கொள்ளும் என்றுரைத்தது. அத்தனை பேருமே அப்படியே செய்கிறோம் என தரையில் விழுந்து வணங்கி சத்தியம் செய்தனர் . உடனே குழந்தையையும் சிரிப்புடன் தொட்டிலில் கண்டார்கள்.
இறைவனின் கட்டளைப்படி அவர்களும் பூமியினுள் புதையுண்டு கிடந்த ரிஷபாரூடர் சிலையை வெளியில் எடுத்து வைத்து, கோவில் கட்டி வழிபாடு செய்தார்கள். குழந்தையை காணாமல் அழுத கண்ணீரை போக்கியதால், இறைவனுக்கு 'அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன்' என்ற திருநாமம் சூட்டப்பட்டது.
ஒரு சமயம், தேவர்கள் அசுரர்கள் தொல்லையினால், கயிலாயம் சென்று தங்களை காப்பாற்ற சிவனிடம் முறையிட்டனர். சிவன் தேவர்களால் செய்யப்பட்ட தேரில் ஏறி அசுரர்களுடன் போருக்கு புறப்பட்டார். தேரின் அச்சு முறிந்துவிட்டது. சிவபெருமானிடம் கொண்ட அன்பின் காரணமாக மகாவிஷ்ணு காளை உருவம் கொண்டு சிவபெருமானை தன் முதுகில் ஏற்றிச்சென்றார். இதன் பின் சிவபெருமானுக்கு 'ரிஷபாரூடர்' என்ற திருநாமம் உண்டாயிற்று. மகாவிஷ்ணு இங்கு ரிஷப வாகனமாக இருப்பதால் சிவனையும், சக்தியையும், பெருமாளையும் ஒரே மூலஸ்தானத்தில் தரிசிக்கலாம்.
பொதுவாக, சிவன் கோயில்கள் கிழக்கு நோக்கி இருக்கும்.இங்கு வாசல் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. பெரும் கோயிலில் மையப் பகுதியில்தான் மூலவர் சந்நிதி இருக்கும். ஆனால் இங்கு வடமேற்கு வாயு மூலையில் மூலவர் சந்நிதி அமைந்துள்ளது.
பிரதோஷ நந்தி வழிபாட்டிற்கு நிகரான தனித்துவ சிவதலம் மதுரை:
தனி மண்டபத்தில் நந்தி, சந்நிதியின் வலப்புறம் பத்ரகாளி, இடது புறத்தில் வீரபத்திரர், அர்த்த மண்டபத்தில் விநாயகர், முருகன் அருள்பாலிக்கிறார்கள். தென்கிழக்கு அக்னி மூலையில் கருப்பண்ணசாமி,ராக்காயி, காவல் கருப்பு , முனியாண்டி மற்றும் சப்பாணி போன்ற கிராம தேவதைகளுக்கும் சந்நிதி உள்ளது. இங்கு மகாசிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திருமணத்தடை நீங்க, குழந்தை செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க, மன வலிமை பெற இத்தல சிவனை வேண்டிக்கொள்ளலாம்.
மதுரையிலிருந்து 14 கி.மீ. தூரத்தில், விராதனூர் எனுமிடத்தில் அமைந்துள்ளது கோயில். மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சிந்தாமணி, பனையூர் வழியாக நெடுங்குளம் பஸ்ஸில் செல்லலாம். நேரடியாக விராதனூர் பஸ்சும் உண்டு. கோயில் காலை நேரத்தில் 7-8 மற்றும் மாலை நேரங்களில் 6 -8 திறந்து இருக்கும்.
தீராத மனக்கவலைகள் மற்றும் தீர்க்க முடியாத குடும்பப் பிரச்னைகளால் தவிப்பவர்கள், தங்களின் கண்ணீரையும் துயரங்களையும் உடனடியாக மாற்றி, வாழ்வில் நிம்மதியையும், குழந்தை பாக்கியம் மற்றும் திருமணத் தடைகள் நீங்கிய சுபிட்சமான வாழ்வையும் உடனடியாகப் பெறுவர்.