

இன்றைய காலகட்டத்தில் ராமாயணத்தை படிக்கும் ஜென் இசட் தலைமுறைக்கு இந்தக் கேள்வி கட்டாயம் மனதில் எழும். மாட மாளிகையில் பிறந்த ஶ்ரீராமர் எதற்காக கானகம் புகுந்து கடும் துயரத்தினை ஏற்றுக்கொள்ள வேண்டும்? ‘என்னால் போக முடியாது’ என்று அரண்மனையிலேயே மகிழ்ச்சியுடன் இருந்திருக்கலாமே? பதிலுக்கு யாரால், என்ன சொல்ல முடியும்? ராமன் முடியாது என்று மறுத்துவிட்டான், என்று கைகேயிடம் தசரதன் கூறி இருக்கலாமே!
ஶ்ரீராமர் தனது தாயையும் தூண்டிவிட்டு, அரசப் பதவி தனக்கு மட்டுமே, என்று போர் கொடி தூக்க வைத்திருக்கலாமே அல்லது சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி, ராஜ்ஜியத்தை இரண்டாகப் பிரித்து கைகேயி மகன் பரதனுக்கு கொடுத்து இருக்கலாம். இது எதுவும் பலன் அளிக்காவிடில் ராமர் கானகம் செல்லும் வாய்ப்பை தவிர்த்து, அரச பதவியை கைகேயியின் விருப்பத்தின்படி பரதனுக்கே தந்து இருக்கலாம். யாராலும் தோற்கடிக்க முடியாத வீரனாகிய ராமர் அயோத்தியை விட்டு வெளியேறிய பின்னர், வேறு ஒரு நாட்டைப் பிடித்து அரசாட்சி செய்திருக்கலாம் என்று இப்படி பல கேள்விகள் மனதில் எழலாம்.
ஶ்ரீராமர் தனது தந்தை சொன்ன வாக்கைக் காப்பாற்ற சிற்றன்னையின் நிபந்தனையை ஏற்றுக் கொண்டார். ஸ்ரீராமரே அயோத்தியின் அரசனாக முடிசூடப்பட வேண்டியவர், அயோத்தி மக்கள் அனைவரும் ராமனின் அரசாட்சியை எண்ணிக் காத்திருந்தனர். ராமனின் தந்தை தசரதன், முன்பு ஒரு சமயம் தனது இளைய மனைவி கைகேயிக்கு வரம் ஒன்றை அளித்திருந்தார். அந்த வரம் ஒரு இக்கட்டில் இருந்து தசரதனை கைகேயி காப்பாற்றியதால் வழங்கி இருந்தார். ஆனால், கைகேயி உடனடியாக எதையும் தசரதனிடம் கேட்கவில்லை. ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்ய தசரதன் முடிவு செய்த பின்னரே கைகேயி தனக்கு கொடுக்கப்பட்ட வரத்தினை நினைவூட்டுகிறாள்.
ராமனின் பட்டாபிஷேகத்தை கேள்விப்பட்ட கைகேயி முதலில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். ஆனால், அப்போது நாட்டிற்கு துயரம் மந்தாரை வடிவில் வந்தது. அரசாட்சி ராமனுக்குக் கிடைத்தால், கைகேயியை பணிப்பெண் போல மாற்றி விடுவார்கள் என்றும், அவளுடைய மரியாதை முற்றிலும் போய்விடும் என்றும், அவளது மகன் பரதனுக்கு எதிர்காலம் எதுவும் இருக்காது என்றும் கூறி மந்தாரை, கைகேயி மனதில் நஞ்சைக் கலந்தாள்.
கைகேயி பரதனுக்கு அரசாட்சி மட்டும் கேட்கிறேன். ஆனால், ராமனை கானகம் அனுப்ப விருப்பமில்லை என்று எவ்வளவோ மந்தாரையிடம் வாதாடி பார்த்தாள். அதற்கு மந்தாரை ராமன் நாட்டில் இருக்கும் வரை மக்கள் பரதனை அரசனாக ஏற்க மாட்டார்கள் என்று வஞ்சக சொற்களைக் கூறினாள். ராமன் சிறுவயதில் மந்தாரையின் கூன் முதுகை பார்த்து கேலி செய்து விளையாடுவான். அதற்கு வஞ்சம் தீர்க்க மந்தாரை காத்திருந்தாள்.
ராமனின் உயர்ந்த பண்பு: தந்தையின் வாக்கைக் காப்பாற்ற வேண்டியது மகனின் கடமையை என்பதால், தர்மத்தின்படி ராமன் வனவாசத்தை தேர்ந்தெடுத்தார். மூத்த மகனாக பொறுப்புடன் ராமன் நடந்து கொண்டார். அதேவேளையில் தனது சிற்றன்னை கைகேயி மற்றும் சகோதரன் பரதன் மீது எந்த ஒரு கோபமும் அவர் கொள்ளவில்லை, குடும்பத்தில் தியாகம் என்பது மூத்த சகோதரனின் கடமை என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். ஒரு மகனாகவும் சகோதரனாகவும் தனது கடமையை ராமர் சரிவர செய்தார். அவருக்கு அரச பதவி போன்ற சுகங்களை விட தர்மம் என்பது முக்கியமாக இருந்தது.
கர்மா அதன் விதியை நடத்தியே தீரும்: ராமன் மீது தசரதன் அதீத அன்பு வைத்திருந்தார். ராமனின் பிரிவால் தசரதன் சோகத்தில் தனது உயிரை விட்டார். ஆனால், இது தசரதனுக்கு ஒரு கர்ம வினை ஆகும். தசரதன் இளம் வயதில், மான் என்று நினைத்து தவறுதலாக ஷ்ரவண குமார் என்ற ஒரு இளைஞனை அம்பெய்தி கொன்று விட்டார். அந்த இளைஞன் கண் தெரியாத பெற்றோருக்கு உதவி செய்து வந்தவன். இந்த செய்தியை அறிந்த ஷ்ரவணனின் பெற்றோர்கள், ‘தங்கள் மகனை இழந்து வாடுவதை போல நீயும் ஒருநாள் புத்திர சோகத்தால் தவிப்பாய்’ என்று சாபமிட்டனர். அந்த வினையை தசரதன் அனுபவித்து ஆக வேண்டும்.
ராமரின் பிறப்பு நோக்கம்: ஶ்ரீராமர் அவதரித்தது, அதர்மம் புரிந்து தேவர்களையும் மக்களையும் கொடுமைப்படுத்தும் இலங்கையின் வேந்தன் ராவணனை அழிக்கத்தான். அதற்குக் கருவிகளாக மந்தாரை, கைகேயி, சூர்ப்பனகை ஆகியோர் இருந்தனர். ராமர் கானகத்தில் வாலியை அழித்து சுக்ரீவனை அரசனாக்கினார், வாலியின் மகன் அங்கதனை இளவரசனாக்கினார். அதேபோல ராவணனை அழித்து விபீஷணனை அரசனாக்கினார். அந்த நாடுகளை ராமர் நினைத்தால் எடுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், அவரோ தர்மத்தின்படி அடுத்து ஆட்சிக்குரியவர் யாரோ, அவர்களையே அரசனாக்கினார். பதவி என்பதை விட ராமர் தனது கடமைகளில் சரியாக நின்றார்.