
துரியோதனன் சபையில் துச்சாதனன் பாஞ்சாலியை மான பங்கம் செய்ய துகில் உரித்த பொழுது சபையில் இருந்த பெரியவர்கள் பீஷ்மர் உட்பட வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்களே தவிர யாரும் துரியோதனையோ, துச்சாதனனையோ எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
பிதாமகர் பீஷ்மர் அன்பு படுக்கையில் படுத்தவாரு புண்ணிய காலத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பொழுது அவரிடம் பஞ்சபாண்டவர்கள் அரசியல் தர்மம், நீதி, நேர்மை ஆகியவற்றை பற்றி கேட்டு தெரிந்து கொள்ள வந்தனர். அவர்களுடன் பாஞ்சாலியும் வந்திருந்தாள். பாண்டவர்கள் அனைவரும் பீஷ்மரை வணங்கி அவரிடம் கேட்க, பாஞ்சாலி பலமாக சிரித்து விட்டாள். "என்னை அன்று மான பங்கம் செய்ய துகில் உரித்த பொழுது, சபையில் இருந்த பெரியவர்கள் பீஷ்மர் உட்பட வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்களே! அப்படிப்பட்டவரிடம் போய் அரசியல் தர்மத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வந்துள்ளீர்களே" என்று பாஞ்சாலி பஞ்சபாண்டவர்களைப் பார்த்து கேட்டாள். அத்துடன் பீஷ்மரை நோக்கி, " அன்று கண்ணன் மட்டும் வந்து என்னை காத்திருக்காவிட்டால் என்னுடைய கதி என்னவாகி இருக்கும். தர்மம் அறிந்த நீங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டுதானே இருந்தீர்கள்" என்று கேட்க, அதற்கு பிதாமகர் பீஷ்மர் பதிலளித்தார்...
"பாஞ்சாலி கூறுவது முற்றிலும் உண்மை. துரியோதனன் அன்னம் இடுவதில் மிகவும் உயர்ந்தவன். யார் எந்த நேரத்தில் வந்தாலும் அவர்களுக்கு வயிறு நிறைய உணவளித்து உபசரிப்பான். ஆனால் அந்த அன்னதானம் செய்வதில் அவனுக்கு பரிசுத்தமான மனது கிடையாது. சுயநலத்துக்காகத் தான் உணவிட்டு அவர்களை தன்னுடைய காரியங்களுக்காக பயன்படுத்திக் கொள்வான்.
செஞ்சோற்று கடன் தீர்க்க வேறு வழி இல்லாமல் அவன் இட்ட உணவை உண்ட மற்றவர்களும் வேறு வழி இல்லாமல் அவன் சொற்படி நடப்பார்கள். தூய எண்ணத்துடன் அன்னமிடாததால் அவனுடைய அந்த எண்ணம் உண்ட மற்றவர்களின் ரத்தத்திலும் கலந்து விடும். பீஷ்மராகிய நானும் துரியோதனன் இட்ட சோற்றை உண்டதால் எனக்கும் அவனுடைய தீய குணங்கள் குடியேறிவிட்டன. ஆதலால் தான் பாஞ்சாலியை துச்சாதனன் மானபங்கம் செய்த பொழுது எதுவும் செய்ய இயலாது அமர்ந்திருந்தேன். ஆனால் இப்பொழுது அர்ஜுனன் ஏற்படுத்திக் கொடுத்த இந்த அம்புப் படுக்கையில் படுத்தபின் எனது உடலில் இருந்த கெட்ட ரத்தமும், தீய எண்ணங்களும் வெளியேறிவிட்டன. எனவே இப்பொழுது அரசியல் தர்மத்தைப் பற்றி பேச தகுதி உள்ளவன் ஆகிவிட்டேன்.
எனவே இப்பொழுது என்னால் அரசியல் தர்மத்தை பற்றி பேச முடியும். தாராளமாக உங்கள் சந்தேகங்களை கேளுங்கள்,"என்று சொல்ல, பாண்டவர்களும் பிதாமகர் பீஷ்மரிடம் அரசியல் தர்மம் குறித்து அவர்களுக்கு இருந்த சந்தேகங்களை கேட்டனர். பிதாமகர் பீஷ்மரும் பாண்டவர்களுக்கு அரசியல் தர்மத்தையும், நீதி, நேர்மையைப் பற்றியும் உபதேசித்து அவர்களை தெளிவு படுத்தினார்.
அந்தக் காலத்தில் பெரியோர்கள், சான்றோர்கள், சாதுக்கள், பெரிய பண்டிதர்கள் போன்றோர் வெளியில் சாப்பிடுவதை விரும்பாததற்கு இதுவே காரணம். அன்னமிட்டவரின் எண்ணங்கள் அவை நல்ல எண்ணங்களோ, தீய எண்ணங்களோ சாப்பிட்டவரின் உணர்வில் கலந்து விடும்.
ஆகையால் நல்லவர்கள் இல்லத்திலும், தூய உள்ளம் படைத்தவர்களின் இல்லத்திலும், தூய மனம் படைத்தவர்கள் கையால் இடும் உணவையும் தான் உண்ண வேண்டும்.