

ஏதோ ஒரு சூழ்நிலையில் திடீரென்று நம் மனம் உடனடியாக "கோயிலுக்குச் செல்லவேண்டும்" என்ற எண்ணத்தை உருவாக்கி விடும். எதனால் அதுபோன்ற ஒரு எண்ணம் நமக்கு உருவாகிறது? என நாம் யோசித்துப் பார்க்கலாம். இது ஒரு சாதாரண ஒரு தற்செயல் நிகழ்வல்ல. பாதுகாப்பற்ற சூழலில் நமது மனமும் உடலும் குழம்பித்தவிக்கும், நம்மை அறியாமல் மனது ஒரு ஆறுதலைத்தேடி அலையும். அந்த மனஅமைதி கிடைக்கப் போகும் இடம்தான், இறைவன் குடிகொண்டுள்ள கோயில் ஆகும்.
ஒரு குழந்தைக்கு பிரச்னை ஏதும் வந்துவிட்டால், அது உடனடியாக தன் தாயைத்தேடி அழத்தொடங்கும். தாயினை கண்ட பின்னர்தான் அதன் மனம் அமைதியாகும். அது போலவே மோசமான சந்தர்பங்களில், மனிதர்களை படைத்த இறைவனை தேடி நமது உள்ளுணர்வு நாடி செல்கிறது. கோயிலுக்கு செல்லுதல் என்பது நீண்ட நாட்களாக போடப்படும் திட்டமல்ல, ஒரு சில நொடிகளில் தோன்றிய உள்ளார்ந்த மனதின் உணர்வு. நம் மனதில் உள்ள குமுறல்களை எல்லாம் கொட்ட வேண்டிய ஒரு இடம் இருக்கிறது.
அந்த இடத்தில் கடவுளைத் தவிர வேறு யாரும் பெரிய மனிதர்களாக முடியாது. கோயிலில் இறைவன் மட்டும் மிகப்பெரியவன், அந்த இடத்தில் நாம் அனைவரும் அவரது குழந்தைகள். நம் ஆழ்மனதின் உள்உணர்வு "கோயிலின் படிகளில் காலை வைத்த உடனேயே, நாம் ஏதோ மிகப்பெரிய ஒரு கொடூரமான கும்பலில் மாட்டிக்கொண்டு, அவர்களிடம் இருந்து மீண்டு பாதுகாப்பான ஒரு இடத்திற்கு நாம் வந்ததைப்போல" அந்த நிமிடம் நம்மை உணரவைக்கிறது. இது இறைவன் நமக்கு கொடுக்கும் பாதுகாப்பு உணர்வு.
படியை தாண்டியவுடன் உள்ளே காற்றோட்டம் மிகுந்த மிகவும் விசாலமான பிரகாரம், நம் மூச்சை சரி செய்து ஆழ்ந்து சுவாசிக்க துணை புரிகிறது. கோயில் மண்டபங்களில் உள்ள பெரிய பெரிய தூண்களின் மீது முதுகை சாய்த்து அமரும்போது, ஒரு தாயின் மடி மீது குழந்தை அமரும் சுகமும் இதமும் அங்கே கிடைக்கிறது. இந்த இடத்தில் நம் மனம் முழுவதும் லயித்து மனம் லேசாகி அந்த தருணம் ஒரு அற்புதமான உணர்வினை தருகிறது. தினமும் மாலையில் கோயிலுக்கு இறைவனை வழிபட மட்டுமல்ல ,இந்த இதமான உணர்வை தேடியும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வருகிறார்கள்.
நறுமணம் மிகுந்த தூபத்தை உணர்ந்து முழு பக்தியோடு இறைவனை வேண்டி நிற்போம். பூசாரிகளின் மந்திர உச்சாடனங்கள் பிரபஞ்ச சக்திகளை அந்த இடத்தில் திரட்டி, அதை உங்கள் மீது ஊடுருவச் செய்து தீயசக்திகளை விரட்டுகிறது. உங்கள் மனம் முழுமையாக இறைவனை சரணடைய நினைக்கையில், அந்த நேரத்தில் ஒரு மணியொலி உங்களை நிதர்சனத்திற்கு கொண்டு வரும். அந்த அதிரும் மணியோசை உங்கள் மனதினை ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து புத்துணர்ச்சியை கொடுத்து, "உங்கள் பக்தி போதுமானது இந்த பூமிக்கு நீங்கள் வந்த கடமையை பாருங்கள்" என்று நினைவூட்டுகிறது.
கோயில்கள் நல்ல அதிர்வுகளின் மையப் புள்ளியாக இருக்கின்றன. நம் மனதின் எண்ணங்கள் கோயிலை நோக்கி ஈர்க்கும்போது, ஏதோ பிரச்னையுடன், துன்பத்துடன் நாம் கடுமையாக போராடிக் கொண்டிருக்கும்போது தோன்றுகின்றது. இது பிரபஞ்ச சக்தியுடன் நாம் மீண்டும் இணைவதற்கான ஒரு அழைப்பாகும். இந்த அழைப்பு நம்மை கோயிலுக்கு அழைத்து சென்று நம் மனதை தானே சுத்திகரிக்க வைக்கிறது. நச்சு மற்றும் எதிர்மறை உணர்வுகளை விரட்டி பாதுகாப்பு எண்ணங்களை மனதில் வளர்க்கிறது.
கோயிலுக்குள் உருவாகும் நேர்மறை எண்ணங்கள் "இந்த உலகில் நாம் தனித்து விடப்படவில்லை, நம்மை வழிநடத்த பெரிய சக்தி இருக்கிறது" என்ற உணர்வு ஏற்படுகிறது. கோயிலுக்கு செல்லவேண்டும் என்ற எண்ணங்கள், உங்கள் மனம் பாதுகாப்பு மற்றும் அமைதியை நாடுவதற்கான அறிகுறியாகும். இதை உணர்ந்து சிறிது நேரம் கோவிலில் செலவிடுவது மன அழுத்தத்தைப் போக்கி, ஞானத்தையும், உள் அமைதியையும் தரும். சரியான நேரத்தில், ஏதோ ஒரு ஆபத்திலிருந்து இறைவன் உங்களைப் மீட்க நினைப்பதற்கான அழைப்புதான் இது.