

ராம ராஜ்யம் அயோத்தியில் நடந்துகொண்டு இருக்கும் போது, ராமர் தினமும் தன் காவலரிடம் இன்று யாராவது தன்னுடைய குறைகளை சொல்வதற்கு வந்தார்களா? என்று கேட்டு தெரிந்து கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். பகவானே இங்கு ஆட்சி செய்து கொண்டு இருக்கும்போது, யாருக்கு குறை வந்துவிடும் என்று சொல்லி, அப்படி இதுவரை யாரும் வரவில்லை என்று சொன்னான் காவலன். ராமரும் அதை சிரத்தையுடன் கேட்டுவிட்டு, அதேசமயம் முகத்தில் புன்னகையுடன் அங்கிருந்து சென்றுவிடுவது வழக்கம்.
ஒருநாள் அங்கு ஒரு நாய் அதிக ரத்தக்காயங்களுடன் வந்து, ராம ராஜ்யத்தில் எல்லா உயிரினங்களும் ஒன்றுதானே, எனக்கு ஏற்பட்ட இந்த அவலநிலைக்கு நீதி வேண்டும், உடனே என்னை ராமனிடம் அழைத்து செல்லுங்கள் என்று காவலரிடம் கேட்டது. உடனே காவலர் ராமரிடம் சென்று விஷயத்தை சொல்லவும், பொறுமையாக ராமர் செய்தியை கேட்டுவிட்டு, அந்த நாயை உள்ளே அழைத்து வரச்சொல்லி காவலரை அனுப்பினார்.
உள்ளே வந்த நாய் ராமரை பார்த்து, ராமா உங்கள் ராஜ்யத்தில் எல்லா உயிரினங்களும் சமம்தானே. அப்படியிருக்க என் நிலைமையைப் பார்த்தாயா? இதற்கு காரணம் ஒரு சன்னியாசி. நான் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போது காரணமே இல்லாமல் என்னை கல்லால் அடித்து, இந்த நிலைக்கு என்னை சேதப்படுத்தி விட்டான். தர்மத்தின் வழி நடக்கும் நீங்கள், அந்த சன்னியாசிக்கு தக்க தண்டனை வழங்கவேண்டும்.
சபைக்கு சன்னியாசி அழைத்து வரப்பட்டு, அவரிடம் இந்த நாயை ஏன் கல்லால் அடித்து சித்திரவதை செய்தாய் என்று ராமர் கேட்கவும், அதுவா ராமா, நான் பிச்சை கிடைத்தால் மட்டுமே உண்ணும் பழக்கம் உள்ளவன். அன்று எனக்கு அப்படி எதுவும் கிடைக்காததால், மிகுந்த பசியுடன் இருந்தேன். அப்போது இந்த நாய் தனக்கு கிடைத்த உணவை சாப்பிட்டுக் கொண்டு இருந்ததை பார்த்தும், எனக்கு கிடைக்காதது, இந்த நாய்க்கு கிடைத்து விட்டதே என்ற கோபத்தில் இந்த காரியத்தை செய்துவிட்டேன்.
சன்னியாசி சொன்னதை கேட்டதும், ராமருக்கு கோபம் வரவும், வாயில்லா ஜீவனை இப்படி வதைத்து இருக்கிறாயே, சன்னியாசம் என்பது பற்றற்ற நிலை. அதனை நீ உணராமல் இருந்து, இந்த காரியத்தை செய்து இருக்கிறாய். ஆகவே உனக்கு மரணதண்டனை அளிக்கிறேன் என்று தீர்ப்பு சொன்னார் ராமர்.
அதனை கேட்டுவிட்டு, நாய் ராமரிடம் இந்த தண்டனை பத்தாது ராமா. இதைவிட பெரிய தண்டனையை இந்த சன்னியாசிக்கு தரவேண்டும் என்றது நாய். ராமர் முகத்தில் ஆச்சர்யம் ஏற்பட, மரணதண்டனைவிட பெரிய தண்டனையா? என்று நாயை பார்த்து கேட்டார் ராமர்.
நான் சென்ற பிறவியில், கோயில் தர்மகர்த்தாவாக பணிசெய்தேன். அப்போது நான் ஆலயத்தின் சொத்துக்களை தவறான முறையில் கொல்லை அடித்தேன். அதற்கான தண்டனைதான், நான் இப்போது குப்பையில் கிடப்பதை உண்டு வாழ்கிறேன். பலபேரிடம் கல்லடி பட்டு, பாவத்தின் தண்டனையை அனுபவிக்கிறேன்.
அதனால் இவருக்கும் கோயில் தர்மகத்தாவாக பதவியை கொடுங்கள். நிச்சயம் இவர் அதனை தவறான வழியில் பயன்படுத்துவான். என்னைப் போலவே பிறவி எடுப்பான். அப்போது இவன் கல்லடி வாங்கி, அந்த கொடுமையை எதிர்கொள்ளட்டும் என்றது நாய். ராமரும் அப்படியே ஆகட்டும் என்று சொல்லி, தீர்ப்பை வழங்கினார்.
ஆகவே எந்த பிறவி எடுத்தாலும், பாவங்களை செய்யாமல் இருப்பதே நல்லது என்பதை உணர்வோம்!