
ஏழேழு ஜென்மத்திற்கும் செய்த பாவங்களைப் போக்குகின்ற தலமாக காசி கருதப்படுகிறது. அதன் புனிதம் பற்றியும் கங்கையின் புனிதம் பற்றியும் நிறைய கேள்விப்பட்டிருப்போம். ஆனால் வாரணாசியைச் சுற்றி கருடன் சுற்றுவதை பார்க்க முடியாது. அதேபோல் காசியில் பல்லியை எங்கும் காண முடியாது. அதற்கான காரணத்தை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
பல யுகங்களுக்கு முன்பு, ஸ்ரீராமர் ராவணனை வதம் செய்த பின், ஹனுமனிடம் ராமேஸ்வரத்தில் ஒரு சுயம்பு லிங்கத்தை நிறுவ வேண்டும் என்று கூறி காசியிலிருந்து ஒரு சுயம்பு லிங்கத்தைக் கொண்டு வரும்படி கட்டளையிடுகிறார்.
காசியை நோக்கி ஹனுமான் வரும்பொழுது, அவருடைய கண்களில் பல ஆயிரக்கணக்கான லிங்கங்கள் தென்பட அதைப் பார்த்துக் குழம்பிப் போகிறார்.
சுயம்பு லிங்கத்தின் சக்திப் பிரவாகம் அதிகமாக இருக்கும் என்பதால் அதை காசி முழுவதும் தேடி அலைந்து கொண்டிருக்கிறார் ஹனுமன். ஆனால் கிடைக்கவில்லை.
அப்பொழுது கருடன் அவருக்கு உதவி செய்ய முன்வருகிறார். இதுதான் நீங்கள் தேடுகின்ற சுயம்பு லிங்கம் என்று ஹனுமனுக்குப் புரிய வைப்பதற்காக ஒரு சுயம்பு லிங்கத்துக்கும் மேலாக மேல்நோக்கி, வட்டமடித்து கத்திக் கொண்டே வலம் வந்து கொண்டிருந்தார்.
அதை ஹனுமன் கண்டுபிடித்துவிட்டார். அதேபோல் பல்லியும் அந்த சுயம்பு லிங்கம் இருக்கின்ற திசையைப் பார்த்து, கத்திக் காட்டிக் கொடுத்தது.
இவ்வாறு கருடனும் பல்லியும் சுயம்பு லிங்கம் இருப்பதை ஹனுமன் கண்டுபிடிப்பதற்காக உதவி செய்தன. இதன் பின்பு, கருடன், பல்லி இருவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு, அந்த சுயம்பு லிங்கத்தை எடுத்துக் கொண்டு புறப்பட ஆரம்பித்தார் ஹனுமன்.
அப்படி கிளம்புகிற பொழுதுதான் அங்கே ஒரு பெரிய பிரச்னை வெடித்தது. காசியில் காவல் தெய்வமாக இருப்பவர் கால பைரவர்.
அந்த கால பைரவரைத் தாண்டி, யாரும் காசியை விட்டு எதுவும் வெளியில் எடுத்துக் கொண்டு செல்ல முடியாது. ஆனால் ஹனுமனோ தன்னுடைய எஜமானர் ஸ்ரீ ராமருடைய கட்டளைப்படி சுயம்பு லிங்கத்தை எப்படியாவது கொண்டு சென்று விட வேண்டும் என்று எடுத்துச் செல்கிறார். அப்போது கால பைரவர் ஹனுமனை தடுத்து நிறுத்த, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்ற ஆரம்பித்து, சண்டை வலுக்க ஆரம்பிக்கிறது.
இருவருக்குமே கோபமும் ரௌத்திரமும் கட்டுக்கடங்காமல் போக, இதைப் பார்த்த தேவலோகத்தினர் இப்படியே தொடர்ந்தால், இந்த மண்ணுலகில் பிரளயமே வெடிக்குமே என்று பயந்து கொண்டிருக்கிறார்கள்.
இருவருமே அதிக பலசாலிகளாக இருப்பதால் இருவருக்கும் இடையே இருக்கின்ற சண்டையை எப்படியாவது பெரிதாகாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்று யோசித்து கால பைரவரிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டனர். சுயம்பு லிங்கத்தை எடுத்துச் செல்லவும் வழிவகுக்க வேண்டும் என்று கூறினர். ஹனுமானின் விசுவாசத்தைப் புரிந்து கொண்ட காலபைரவர், லிங்கத்தை எடுத்துச் செல்வதற்கான அனுமதியைக் கொடுத்தார்.
தன்னுடைய அனுமதியின்றி எடுத்துச் சென்றதற்காக மட்டுமே தான் சண்டையிட்டதாகத் தெரிவித்தார். அதோடு சுயம்புலிங்கத்தை ராமேஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்வதற்காகவும் ஹனுமனை அனுப்பி வைத்தார்.
ஆனால் அதேசமயம் தன்னுடைய அனுமதியின்றி லிங்கத்தைக் காட்டிக் கொடுத்ததற்காக கருடனுக்கும் பல்லிக்கும் சாபத்தை வழங்கினார் கால பைரவர். 'இந்த வாராணசியில் (காசியில்) நீங்கள் இருவரும் எங்கும் இருக்கக்கூடாது' என்று சாபம் கொடுத்தார். 'எப்போதும் காசிக்கு வரக்கூடாது' என்றும் சொல்லியிருக்கிறார்.
அதனால் தான் வாரணாசியில் எப்போதும் கருடனும் பல்லியும் இருப்பதில்லை.