

காட்டு வழிப்பயணம் என்பது காட்டுப்பாதைகள் வழியாக அல்லது வனப்பகுதிகளுக்குள் பயணிப்பதை குறிக்கும். இது ஒரு இயற்கையான சாகச அனுபவமாக இருக்கும். சிலசமயம் திகிலூட்டும் வகையிலும் அமைந்துவிடும். காட்டுக்குள் உள்ள பாதைகளில் இயற்கையை ரசித்துக்கொண்டு காலாற நடப்பது அல்லது வாகனம் ஓட்டுவது போன்றவை இயற்கையுடன் இணைவதற்கான ஒரு வழியாகும். காட்டுப்பாதையில் பயணம் செய்யும்போது நிலப்பரப்பு மற்றும் காலநிலையை கருத்தில் கொண்டு சரியான திட்டமிடலும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் மிகவும் அவசியம்.
காட்டுக்குள் செல்லும் பொழுது எப்படி நடந்துகொள்ள வேண்டும், யானை அல்லது பிற விலங்குகளின் இருப்பிடத்தை கடந்து செல்லும் பொழுது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளையும் நன்கு தெரிந்துகொண்டு பயணித்தால் ஆபத்தில்லாத, ரசிக்க கூடிய பயணமாக அமையும். காட்டுக்குள் பயணம் என்பது வனவிலங்கு சரணாலயங்கள், சதுப்பு நிலக்காடுகள் மற்றும் காடுகளில் இயற்கையான அனுபவங்களைத் தேடி செல்வதாகும். இதில் புலிகள், யானைகள், மான்கள், கரடிகள் மற்றும் பல்வேறு பறவைகள் போன்ற வனவிலங்குகளை அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் காணமுடியும்.
மரங்களின் மீது சோம்பல் கரடியின் நக அடையாளங்களையும், யானைக் குட்டிகளுடன் இருக்கும் யானைகள் போன்ற இயற்கையான சிலிர்ப்பூட்டும் காட்சிகளையும் காண முடியும். காட்டு விலங்குகளுக்கு எந்தவிதமான இடைஞ்சல்களையும், எரிச்சலையும் ஏற்படுத்தாமல் இருந்தால் காட்டு பயணம் மிகவும் பத்திரமான சாகசப் பயணமாக அமையும்.
காட்டுப் பயணம் என்பது ஒரு சாகசமான மற்றும் இயற்கையோடு இணைந்த அனுபவமாகும். இதனை பாதுகாப்பானதாகவும் சுவாரஸ்யமானதாகவும் ஆக்குவதற்கு முதலில் நாம் செல்லவிருக்கும் காட்டைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். காலநிலை, வனவிலங்குகள் மற்றும் அங்குள்ள விதிமுறைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும். இதனை வனத்துறை வலைத்தளங்கள் அல்லது தேசிய பூங்கா சேவைகள் மூலம் தகவல்களைப் பெறலாம். சில பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் நுழைவதற்கு முன் அனுமதி பெறவேண்டிய அவசியம் இருக்கும். அதற்கு உள்ளூர் வன அலுவலகம் அல்லது வனவிலங்கு வாரியம் மூலம் தேவையான அனுமதிகளைப் பெற்றுக்கொள்வது அவசியம்.
காட்டுப் பயணத்திற்கு முதலுதவி பெட்டி, ஜிபிஎஸ் திசைகாட்டி, டார்ச் லைட், தீப்பெட்டி, தண்ணீர் பாட்டில்கள், ஸ்னாக்ஸ் போன்ற அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்வதும், அணியும் ஆடைகள் உடல் முழுவதையும் கவர் பண்ணும் வகையில் நீண்ட கைச்சட்டைகள், பேண்ட், பூட்ஸ் போன்றவற்றை அணிந்து செல்வதும் அவசியம். இவை பூச்சிக் கடிகள் மற்றும் தாவரங்களின் கீறல்களிலிருந்து நம்மை காக்கும்.
விலங்குகளின் தடயங்கள் அல்லது எச்சங்களைக் கண்டால் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வதும், வனவிலங்குகளை தொந்தரவு செய்யாமல் பாதுகாப்பான தூரத்தை கடைபிடிப்பதும் மகிழ்ச்சியான காட்டுப் பயணத்திற்கு உதவும்.
முக்கியமாக சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படாமல் இருப்பதற்கு குப்பைகளை வீசாமல் நம்முடன் எடுத்துச் சென்று நியமிக்கப்பட்ட குப்பைத் தொட்டிகளில் போடுவதும், காட்டின் அமைதியை சீர்குலையாமல் பாதுகாப்பதும் காட்டுப் பயணத்தை ஒரு மறக்க முடியாத, மகிழ்ச்சி நிறைந்த பயணமாக ஆக்கும்.