
அரக்கு பள்ளத்தாக்கு (Araku Valley) ஆந்திராவில் அமைந்துள்ள ஒரு மலைவாச ஸ்தலமாகும். இது விசாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ளது. செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை இங்கு சுற்றுலா செல்ல சிறந்த நேரமாகும். அரக்கு பள்ளத்தாக்கு அதன் குளிர்ந்த காலநிலை, அழகான காபி தோட்டங்கள் மற்றும் பசுமையான நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்றது. சாகச அனுபவத்திற்காக போரா குகைகளை பார்வையிடலாம். இயற்கையான சுண்ணாம்புக்கல் குகைகள் இவை.
ஆந்திராவின் ஊட்டி:
கடல் மட்டத்திலிருந்து சுமார் 1200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த அரக்கு பள்ளத்தாக்கு அதன் விசித்திரமான தன்மை மற்றும் ஒப்பிட முடியாத அழகு காரணமாக 'ஆந்திராவின் ஊட்டி' என்று அழைக்கப் படுகிறது. அதன் பரந்த காபி தோட்டங்கள், நேர்த்தியான பசுமையான கிராமப்புறங்கள், வளமான பழங்குடி கலாச்சாரத்திற்கு பெயர் பெற்றது.
அரக்கு பள்ளத்தாக்கு மலை ரயில்:
விசாகப்பட்டணத்திலிருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த அழகிய பள்ளத்தாக்கு நகரத்தினுடைய சலசலப்பில் இருந்து விலகி அமைதியான சூழ்நிலையை வழங்குகிறது. விசாகப்பட்டத்தில் இருந்து அரக்கு பள்ளத்தாக்கு வரை செல்லும் மலை ரயில் பயணம், அழகிய பள்ளத்தாக்குகள் மற்றும் மலைகளைக் கடந்து செல்கிறது.
பார்க்க வேண்டிய இடங்கள்:
போரா குகைகள், டைடா (Tyda) இயற்கை முகாம், கட்டிகி நீர்வீழ்ச்சிகள், சப்பராய் நீர்வீழ்ச்சிகள், பழங்குடி அருங்காட்சியகம் மற்றும் பத்மபுரம் தாவரவியல் பூங்கா போன்ற பல கண்கவர் இடங்களை கொண்டுள்ளது இந்த அரக்கு பள்ளத்தாக்கு. சாகச ஆர்வலர்களை ஈர்க்கும் பிரபலமான மலையேற்ற இடமாகவும் உள்ளது.
போரா குகைகள் (Borra Caves):
150 மில்லியன் ஆண்டுகள் பழமையான போரா குகைகள் இயற்கையாகவே உருவான கட்டமைப்புகளைக் காண வேண்டிய இடமாகும். இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டாலாக்மைட் மற்றும் ஸ்டாலாக்டைட் குகைகளாக புகழ்பெற்ற போரா குகைகள் 705 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்தியாவின் மிகப்பெரிய குகைகளில் ஒன்றாகும். போராகுகைகளில் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழைய கற்காலத்தைச் சேர்ந்த கல்கருவிகள் இருந்துள்ளன.
பழங்குடி அருங்காட்சியகம் (Tribal Museum):
பழங்குடி பாரம்பரியம், வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம் குறித்த பழங்குடி அருங்காட்சியகம் உள்ளது. அருங்காட்சியகத்திற்கு அருகில் படகு சவாரி வசதியும் உள்ளது.
பத்மபுரம் தோட்டம்:
அரக்கு பள்ளத்தாக்கின் பசுமையான சூழலின் நடுவில் அமைந்துள்ள மரங்களின் மேல் உள்ள குடில்கள் இங்கு மிகவும் முக்கியமான ஈர்ப்புகளில் ஒன்றாகும். இந்த 'தொங்கும் குடில்கள்' தரைமட்டத்தில் இருந்து பத்தடி உயரத்தில் உள்ளன. இவை கழிப்பறை மற்றும் தொடர்ச்சியான நீர் விநியோகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பத்மபுரம் தோட்டத்தில் சுற்றுலாப் பயணிகளுக்காக ஒரு பொம்மை ரயிலும் (toy train) உண்டு.
டைடா நேச்சர் கேம்ப்:
டைடா (Tyda) நேச்சர் கேம்ப், ஜங்கிள் பெல்ஸ் என்ற மற்றொரு பெயரிலும் அழைக்கப்படுகிறது. இது வில்வித்தை, இலக்கு சுடுதல், பறவை கண்காணிப்பு, மலையேற்றம் மற்றும் பாறை ஏறுதல் ஆகியவற்றை வழங்குகிறது. பல வகையான பறவைகள் மற்றும் விலங்குகள் இந்த சுற்றுச்சூழல் சுற்றுலாத்தளத்தை தாயமாகக் கொண்டுள்ளது.
சப்பராய் நீர்வீழ்ச்சி:
சப்பராய் அல்லது டம்ப்ரிகுடா என்று அழைக்கப்படும் இந்த நீர்வீழ்ச்சிகள் பெரும்பாலும் தெலுங்கு திரைப்படங்களுக்கான படப்பிடிப்பு இடங்களாக பயன்படுத்தப்படுகின்றன. வார இறுதி நாட்களை கழிப்பதற்கு இது ஒரு சிறந்த பிரபலமான இடமாகும்.
எப்படி செல்வது?
அரக்கு பள்ளத்தாக்கிற்கு நேரடி இணைப்பு இல்லை. அருகில் உள்ள ரயில் நிலையம் மற்றும் விமான நிலையம் விசாகப்பட்டினம். அங்கிருந்து 3 மணி நேரத்தில் அடையலாம். விசாக்கிலிருந்து அரக்கிற்கு தினம் வெவ்வேறு நேரங்களில் இயங்கும் மூன்று ரயில்கள் உள்ளன. விஸ்டாடோம் கண்ணாடி கூரைக்கொண்ட சிறப்பு ரயில்களின் கூரை கண்ணாடியால் ஆனதால் உள்ளே இருந்து அற்புதமான காட்சிகளை பார்த்துக் கொண்டு செல்லலாம். பயணத்தின் பொழுது 65 சுரங்கப்பாதைகள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகள் வழியாக செல்கிறது.
செல்ல சிறந்த நேரம்?
செப்டம்பர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் மிதமான காலநிலை நிலவும். இயற்கை காட்சிகளை அழகாக கண்டு ரசிக்க முடியும்.