Dawki River: மின்னும் ஆறு உருவாக்கும் ஆப்டிகல் இல்யூஷன்... எங்குள்ளது தெரியுமா?
இந்தியாவில் வடகிழக்கு மாநிலத்தில் உள்ள மேகாலயா இயற்கையை பாதுகாப்பதில் பெறும் பங்கு வகிக்கிறது. உயிருள்ள மரத்தில் செய்யப்பட்ட பாலம் போன்று இங்குள்ள மக்கள் இயற்கையை இயற்கையோடு வாழ முயற்சிப்பது மிகவும் அழகாகவும், ஆச்சர்யமாகவும் உள்ளது. அந்த வகையில் மேகாலயாவில் உள்ள தூய்மையான ஆற்றை பற்றி தான் இன்று காண உள்ளோம்.
இந்தியாவில், மேகாலயாவில் உள்ள ஜைந்தியா மலையடிவாரத்தில் உள்ள சிறிய நகரமான டவ்கி வழியாக ஓடுகிறது 'டவ்கி ஆறு'. இந்த ஆறு அதனுடைய தூய்மைக்கும், ஆற்றின் படுகையில் இருப்பதை காண இயலும் அளவிற்கு கண்ணாடி போல காட்சி தருவதற்கும் பிரபலமானது. ஆற்றின் படுகையில் இருக்கும் மீன்கள், கற்களை கூட தெளிவாக காண இயலும் அளவிற்கு தூய்மையான நீரை உடையது. இந்த சிறிய நகரத்தில் தான் இந்தியா- பங்களாதேஷ் வணிகம் நடப்பதால், எந்நேரமும் பரபரப்பாகவே இயங்கி கொண்டிருக்கும்.
இந்த ஆறு ஆசியாவிலேயே மிகவும் தூய்மை வாய்ந்த ஆறு என்ற பெயரை பெற்றுள்ளது. இந்த ஆறு பச்சை நிற மரகத நிற நீரை கொண்டதாகும். இந்தியா- பங்களாதேஷிற்கு எல்லையாக இருக்கிறது. டவ்கி ஆற்றில் இருக்கும் பாலம் 1932 ல் கட்டப்பட்டதாகும். இந்த ஆறு இதன் அழகிற்கும், இந்த பாலத்திற்கும் பிரசித்தி பெற்றதாகும். மேகாலயாவில் அதிக அளவில்லான சுற்றுலாப்பயணிகள் வருகை தரும் இடங்களில் டவ்கி ஆறும் ஒன்றாகும். இந்த ஆற்றின் அழகை ரசித்து மகிழ்வதற்காக படகு சவாரி செய்யும் வசதியும் உள்ளது. இந்த ஆற்றில் குளிப்பதற்கும் அனுமதி உண்டு.
இந்த ஆறு எந்த அளவிற்கு தெளிவாக இருக்கும் என்றால் இதில் செல்லும் படகு அந்தரத்தில் மிதப்பது போன்ற ஆப்டிகல் இல்யூஷனை உருவாக்கும் அளவிற்காகும். இதை காண்பதற்காகவே ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் இவ்விடத்திற்கு வருகை தருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆற்றிற்கு வரும் கிளையாறுகளான கிழக்கு காசி மற்றும் மேற்கு ஜைந்தியா மலையிலிருந்து வரும் தண்ணீர் எந்த அழுக்கையும் எடுத்துவருவதில்லை. அதனாலேயே இந்த ஆற்றின் நீர் மிகவும் தூய்மையாக இருக்கிறது. டவ்கி ஆறு 30 முதல் 50 அடி ஆளம் கொண்டதாகும்.
டவ்கி ஆற்றிற்கு சுற்றுலாப்பயணிகள் வருகை தருவதற்கான சரியான நேரம், நவம்பர் முதல் மே மாதம் ஆகும். எல்லா மாதங்களும் இங்கு சுற்றுலாப்பயணிகள் வருகை தரலாம். ஆனால் நவம்பர் முதல் மே மாதம் இந்த ஆற்றின் முழுமையான அழகை ரசிக்க முடியும். டவ்கி ஆற்றில் படகு சவாரி மட்டுமில்லாமல், கயாக்கிங் (Kayaking), மலையேற்றம், ஷிப் லைன் (Zipline) போன்ற சாகசங்களையும் செய்யலாம். படகு சாவாரிக்கு கட்டணம் 800 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
இங்கேயிருக்கும் இந்தியா- பங்களாதேஷ் எல்லையில் கால் பதிக்கலாம். இங்கே எந்த சுவரும் இந்தியாவையும், பங்களாதேஷ்சையும் பிரிப்பதற்கு இல்லை. இந்த இடத்திற்கு சென்று புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆற்றின் மேல் அமைந்திருக்கும் பாலத்தில் 8 பேர் மட்டுமே செல்ல முடியும். இங்கிருந்து ஆற்றின் அழகை வெகுவாக ரசிக்கலாம், புகைப்படமும் எடுத்துக்கொள்ளலாம்.
எனவே இவ்விடம் சாகச விரும்பிகளுக்கு மட்டுமில்லாமல், இயற்கையை ரசிப்பவர்களும் நிச்சயம் செல்ல வேண்டிய இடமாக இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.