இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையம் அருகே உள்ள, மின்சார துணை மின்நிலையத்தில் 2025 மார்ச் 21ம் தேதி எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்படவே 1350 விமானங்களின் பயணம் தடைப்பட 2,91,000 பயணிகள் பெருந்துன்பத்திற்கு ஆளாயினர்.
இது ஒரு புறமிருக்க, மனதை நடுநடுங்க வைக்கும் கோரமான சமீபத்திய விமான விபத்துக்கள் இனி விமான பயணத்தை மேற்கொள்வதா வேண்டாமா என்ற கேள்வியைப் பலரிடமும் எழுப்பியுள்ளது!
இரண்டாயிரத்து இருபதுகளில் மூன்று வருடங்களில் 300 மோசமான விபத்துக்கள் என்றால் ஆயிரத்திதொள்ளாயிரத்து எண்பத்தியிரண்டு மற்றும் எண்பத்தி மூன்றில் மட்டும் 600 விபத்துக்கள் நடந்துள்ளன.
பெரும்பாலான விமான விபத்துக்கள் சிறிய விமானங்கள் பறக்கும் போது தான் ஏற்படுகின்றன!
அமெரிக்க விமானம் ஒன்றும் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டரும் மோதியதில் 67 பேர் இறந்தனர். வான் வழி என்பது மோசமான வழிதானோ என்ற பயத்தை இது ஏற்படுத்தி விட்டது.
டொரோண்டோவில் சமீபத்தில் நடந்த டெல்டா ஏர்லைன்ஸ் ஃப்ளைட் 4819க்கு நேர்ந்தது இன்னொரு மோசமான விபத்தாகும்.
ஆனால் உண்மையில் ஆராயப் போனால் அமெரிக்காவில் மட்டும் 90 லட்சம் வணிக விமானப் போக்குவரத்து ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது. இதில் ஒன்று அல்லது இரண்டைப் பெரிதாக எடுத்துக் கொண்டால் பயம் வரத்தான் செய்யும்.
சில சமயங்கள் நெருங்கி இருந்து மோதும் நிலையில் இருந்த விமானங்கள் தப்பிப் பிழைத்த சம்பவங்களும் நிறைய உள்ளன.
ஓடுபாதை எனப்படும் ரன்வே விபத்துக்களும் தனி ரகமானவை.
காக்பிட்டில் உள்ள ஆக்ஸிஜன் அமைப்பில் உள்ள சர்க்யூட்டில் ஷார்ட் சர்க்யூட்டினால் ஏற்படும் தீயைப் பலரும் தீவிரவாதிகளின் சதித் திட்டம் என்று தவறாகப் பிரசாரம் செய்து விடுகிறார்கள்.
கைரா டெம்ப்ஸி (Admiral Cloudberg, aka Kyra Dempsey) என்ற பெண்மணி 300 விமான விபத்துக்களை அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து விட்டார்.
இவர் தனது ஆய்வின் முடிவில் விமான விபத்துக்கள் ஏற்பட்டதன் காரணங்களை வரிசைப்படுத்துகிறார் இப்படி:
*தவறான தகவல் தொடர்பு
*தவறான புரிதல்
*தவறான யுஎக்ஸ் டிஸைன் (யுஎக்ஸ் என்றால் யூஸர் எக்ஸ்பீரியன்ஸ் அதாவது பயன்படுத்துபவருக்கு உகந்த வடிவமைப்பு)
இந்த மூன்றும் சேர்ந்தாலும் விபத்து விளையும்.
விமானத்தில் பறப்பது ஆபத்தா அல்லது விமானப் பயணம் பத்திரமானது தானா என்ற கேள்விக்கு விமான விபத்து ஸ்பெஷலிஸ்டான கைரா டெம்ப்ஸி கூறுவது இது தான்:
“பயப்படாதீர்கள்! மிகைப்படுத்தப்பட்டு அச்சுறுத்தலைத் தரும் அறிக்கைகள் தவறானவை. இவை எப்போதோ ஏற்படும் விபத்துக்களே. ஐந்து வருட சராசரியை எடுத்துப் பார்த்தோமானால் இது ஒன்றுமில்லை என்பது புலப்படும்.
கடந்த ஐந்து வருடங்களில் உலகெங்குமுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துப் பார்த்தோமானால் விமானப் பயணம் போல சொகுசான பாதுகாப்பான பயணம் வேறு எதுவும் இல்லை.
ஆகவே, விமானப் பயணிகளே வழக்கம் போல பயப்படாமல் பயணத்தை மேற்கொள்ளுங்கள். உங்கள் திட்டங்களை வெற்றிகரமாக முடியுங்கள்.”
நல்ல வேளையாக சரியான ஒரு விளக்கம் கிடைத்து விட்டது!
“சரி சார், இதோ போர்டிங் கால் வந்து விட்டது. கிளம்ப வேண்டியது தான்!”