

நமக்கு எங்க போனாலும் சாப்பாடு முக்கியம் பாஸ். அதனால், நீங்க எங்க டூர் கூட்டிட்டு போனாலும் சாப்பாடு கிடைக்கிற மாதிரியான இடத்துக்கு கூட்டிட்டு போனீங்கன்னா பேஷா இருக்கும் அப்படின்னு சொல்றவங்களுக்கு ஒரு சூப்பரான ஸ்பாட் — அதுவும் தமிழ்நாட்டுக்குள்ளேயே!
சூப்பரான அணைக்கட்டுகள் நிறைந்த இடம், மேலும் சைட் சீயிங் நிறைய இருக்கு. நினைத்த நேரத்தில் சாப்பிடலாம்; விதவிதமான சுவையான உணவுகளுடன் ஒரு ஜாலியான ட்ரிப்!
டவுனுக்குள்ள இருக்கிற ஜன நெருக்கடி, பரபரப்பு, வாகனங்களின் இரைச்சல் மற்றும் புகை— இது எல்லாம் இல்லாமல் அமைதியான சுற்றுச்சூழல் வேண்டுமா? டிக்கெட் எடுங்க திருநெல்வேலிக்கு பக்கத்துல இருக்குற களக்காட்டுக்கு!
களக்காடு
மேற்கு தொடர்ச்சி மலையின் மடியில் அமைந்துள்ள ‘களக்காடு’ என்ற அமைதியான, இயற்கை வளம் மிக்க ஊர். இந்த ஊர் இயற்கை எழிலும், வரலாற்று சிறப்பும், சுவையான உணவுகளும் ஒன்றாக கலந்த ஒரு அழகிய சுற்றுலா தலமாக திகழ்கிறது. பச்சையாறு அணை மற்றும் அதன் சுற்றியுள்ள இயற்கை வளங்கள், களக்காட்டை நெல்லை சீமையின் மறைந்து இருக்கும் ஒரு அழகிய ரத்தினமாக மாற்றுகின்றன.
களக்காடு மலையடிவாரத்தில் அமைந்துள்ள பச்சையாறு அணை (தலையணை அணை), தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான காமராஜர் காலத்தில் கட்டப்பட்டது. இந்த அணை, இந்த பகுதியின் முக்கிய அடையாளமாகும்.
மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து வரும் நீர் இந்த அணையில் சேமிக்கப்பட்டு, சுற்றுவட்டார விவசாய நிலங்களுக்கு பாசன வசதியை வழங்குகிறது. இதன் காரணமாக களக்காடு பகுதி எப்போதும் பசுமையாக திகழ்கிறது. மேலும், தொலைநோக்கு பார்வையுடன் உருவாக்கப்பட்ட இந்த அணை, இன்றும் ஆயிரக் கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.
பச்சையாறு அணையின் அருகில் அமைந்துள்ள தேங்காயுருவி அருவியில், மலையிலிருந்து சுரந்து வரும் நீர் அருவியாக விழும் காட்சி மனதை மெய்மறக்கச் செய்கிறது. இங்கு மக்கள் குளித்து மகிழ்வதோடு, இயற்கையின் அழகையும் ரசிக்கின்றனர்.
அதேபோல், களக்காடு பகுதியில் உள்ள களக்காடு தொட்டி பாலம் ஒரு சிறிய பொறியியல் அதிசயமாக கருதப்படுகிறது. மாத்தூர் தொட்டி பாலம் போன்று அமைந்த இந்த பாலம், நீரை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்ல பயன்படுவதோடு, சுற்றுலா பயணிகளையும் கவர்கிறது. இயற்கை சூழல், நீரோடைகள் மற்றும் பசுமை நிறைந்த வயல்கள் இப்பகுதியை மேலும் அழகுபடுத்துகின்றன.
இந்த களக்காடு பகுதியின் இயற்கை அழகுடன் கூடிய அமைதியான சூழல், பசுமை நிறைந்த மலைப்பகுதிகள் மற்றும் நீர்நிலைகள் ஆகியவை திரைப்பட படப்பிடிப்புகளுக்கு ஏற்ற இடமாக இருப்பதால், இது ஒரு ஸ்பெஷல் ஷூட்டிங் ஸ்பாட் ஆக மாறி வருகிறது.
இங்குள்ள பத்மநேரி, தெக்கூர் பகுதிகளில் உள்ள பாரம்பரிய உணவகங்களில் வீட்டு சுவையுடன் கூடிய சுவையான உணவுகள் கிடைக்கின்றன. அதனால், அச்சமின்றி இட்லி, தோசை, மெதுவடை என்று சாப்பிட்டு மகிழலாம்.
மேலும், பானிபூரி மட்டுமின்றி தயிர் பூரி, சாண்ட்விச் போன்ற பல்வேறு சைவ உணவுகளும் இங்கு சுவையாக கிடைக்கின்றன.
களக்காடு–கருவேலங்குளம் சாலையில் உள்ள தம்பித்தோப்பு பகுதியில் கிடைக்கும் பானிபூரி மிகவும் பிரபலமானது.
திருநெல்வேலி மாவட்டம் என்றாலே நம் நினைவுக்கு வருவது தாமிரபரணி நதியும் அல்வாவும்தான். ஆனால், வரலாற்று பெருமையை தன்னுள் கொண்டுள்ள அணையையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். இயற்கை நீர்வீழ்ச்சிகள் மற்றும் சுவையான உணவு என்ற இரட்டை அம்சங்களையும் ஒரே இடத்தில் அனுபவிக்க விரும்புபவர்கள், இயற்கையை நேசிப்பவர்களுக்கு களக்காடு ஒரு சொர்க்கம் போன்றது.
இந்த சம்மரில் குடும்பத்தோட ஒரு தடவை குளிர்ச்சியாக திருநெல்வேலியின் இந்த சினிமா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு விசிட் அடிச்சிடுங்க!