

தற்போது வளர்ந்துள்ள தொழில்நுட்ப யுகத்தில் அன்றாட வேலைகளில் இருந்து விலகி இயற்கையை கண்டு ரசிப்பதே மனதிற்கு புத்துணர்ச்சியாக உள்ளதாக பெரும்பாலானவர்கள் தெரிவிக்கிறார்கள். ஆகவே தான் வார இறுதி நாட்களில் சுற்றுலா செல்வது தற்போது அதிகரித்துள்ளது.
செயற்கையான பொழுதுபோக்கு தலங்கள் எவ்வளவு இருந்தாலும் இயற்கையான அருவியை கண்டு ரசிப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை தரும். அந்த வகையில் கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கூட்லு தீர்த்த அருவி குறித்து இப்பதிவில் காண்போம்.
மேற்கு தொடர்ச்சி மலையின் 'தூய்மையான நீர்வீழ்ச்சி' என்று சிறப்பாக அழைக்கப்படும் 'கூட்லு தீர்த்த அருவி' (Kudlu Theertha Falls) உடுப்பி நகரத்திலிருந்து 54 கிலோ மீட்டர் தொலைவிலும், ஹெப்ரியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்லும் 4 கிலோமீட்டர் தொலைவிலும் மூங்கில் தோப்புகளை கண்டு ரசித்தபடி நடக்கலாம்.
மேலும் சலசலக்கும் ஓடைகளை கடந்து பயணிக்கும் போது ஒருவித சிலிர்ப்பு நிலவுகிறது. தாவரங்கள், விலங்குகளின் புகலிடமாக திகழும் இந்த காட்டில் அரிய வகை பறவைகளும், வண்ணத்துப்பூச்சிகளும் பிற வன விலங்குகளை காணும் வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சீதா நதியின் முதல் நீர்வீழ்ச்சியாக கருதப்படும் இந்த அருவி 150 அடி உயரத்தில் இருந்து நேரடியாக கீழே உள்ள குளத்தில் விழுகிறது. புனிதமாக கருதப்படும் கூட்ல தீர்த்த அருவிக்கு சீதா அருவி என்ற மற்றொரு பெயரும் உண்டு. பழங்காலத்தில் முனிவர்கள் இந்த குளத்தில் அமர்ந்து தவம் செய்ததாக உள்ளூர் மக்களால் நம்பப்படுகிறது.
இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் அமைந்துள்ள கூட்லு தீர்த்த அருவியைக் காணச் செல்லும்போது மலையேற்றமும் உள்ளதால் சாகச பிரியர்களுக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கும் விருப்பமான இடமாக இது அமைந்துள்ளது.
வானுயர்ந்த மரங்கள், அரிய வகை விலங்குகள், தாவரங்கள், செழிப்பான சூழல் என இந்த அருவியை சுற்றிலும் கண்ணுக்கு குளிர்ச்சியாக இயற்கை வளம் கொட்டி கிடப்பதோடு அருவியின் அடிவாரத்தில் உள்ள குளத்தில் குளித்து மகிழலாம். இதனால் உடலும் மனதும் புத்துணர்ச்சி அடைகிறது.
வாகனம் நிறுத்துமிடத்திலிருந்து அருவிக்கு செல்ல 3 முதல் 4 கிலோமீட்டர் தூரம் சமமற்ற கரடு முரடான நிலப்பரப்பில் செல்ல வேண்டும். இதனால் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு சற்றே சவாலான பயணமாக இது இருக்கும். வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்லு தீர்த்த அருவிக்கு காலை 9 மணி முதல் 4 மணி வரை அனுமதிக்கப்படுவர்.
காட்டின் தூய்மையை பாதுகாக்கும் பொருட்டு நெகிழிப் பை பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகமாகவும் சுற்றுப்புற சூழல் பசுமையாகவும் இருக்கும் காரணத்தால் இந்த அருவிக்கு செல்ல ஜூன் முதல் நவம்பர் வரை சிறந்த காலமாகும். மழை அதிகம் பெய்தால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த அருவி மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரயிலில் செல்ல வேண்டும் என நினைப்பவர்கள் உடுப்பி ரயில் நிலையம் வரை சென்று பிறகு 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அருவிக்கு பஸ் அல்லது டாக்ஸியில் பயணிக்கலாம்.
பேருந்து பயணத்திற்கு ஹெப்ரி பஸ் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அருவிக்கு பஸ், டாக்ஸி, ஜீப்பில் செல்லலாம்.
கூட்லு தீர்த்த அருவில் கடைகள் இல்லாத காரணத்தால் சாப்பிடுவதற்கு தேவையான அனைத்தையும் உடன் எடுத்துச் செல்வது நல்லது.
மேற்கு தொடர்ச்சி மலையின் மடியில் ஒளிந்துள்ள இந்த தூய்மையான கூட்லு தீர்த்த அருவியின் இயற்கை அழகை நேரில் கண்டு, மன அழுத்தத்தை போக்கி புத்துணர்ச்சி பெறுவதற்கான முழுமையான பயண வழிகாட்டியைப் பெறுவீர்கள்.