சென்னை நடுவே இருக்கும் அதிசய சுனை நீர்! இயேசுவின் சீடர் வாழ்ந்த 'சின்னமலை' ரகசியங்கள்!

st thomas cave guindy
st thomas cave guindy
Updated on

சின்னமலை (Little Mount) என்பது சைதாப்பேட்டையில் அடையாறு ஆற்றின் அருகே அமைந்துள்ள ஒரு குன்றாகும். அப்போஸ்தலர் தோமா இந்தியாவில் இருந்தபொழுது வாழ்ந்த இடங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. அப்போஸ்தலருடனான அதன் தொடர்பின் காரணமாக, சின்னமலையில் உள்ள தேவாலயம் உலகின் மிகப் பழமையான கிறிஸ்தவத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

சென்னையில் உள்ள லிட்டில் மவுண்ட் (சின்னமலை) பகுதியில் வரலாற்றுச் சிறப்புமிக்க குகை ஒன்றுள்ளது. இயேசுவின் சீடரான புனித தோமா (St. Thomas) கி.பி. 72ஆம் ஆண்டு எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்காக அடைக்கலம் புகுந்த இடமாகக் கருதப்படுகிறது. இயேசுவின் அப்போஸ்தலர்களில் ஒருவரான புனித தாமஸ் வாழ்ந்ததாகக் கூறப்படும் குகை பார்வையிட சிறந்த இடமாகும்.

சின்ன மலையில் ஒரு குன்றின் மீது தேவாலயம் அமைந்துள்ளது. புனித தோமா வாழ்ந்ததாக கருதப்படும் இந்த மலை மீது 1551ல் கட்டப்பட்ட, ஆரோக்கிய அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட பழைய போர்த்துகீசிய தேவாலயம் உள்ளது. இந்த குகையை இந்த தேவாலயத்தின் வழியாக அணுகலாம். கோவில் இருந்த இடத்தில் பின்னர் 1971ல் அதிக இட வசதி கொண்ட ஒரு பெரிய கோவில் வட்ட வடிவத்தில் கட்டி எழுப்பப்பட்டது. 

புனித தோமா வாழ்ந்த குகை: 

இந்த குகைக்குள் ஒரு சிறிய நுழைவாயில் வழியாகச் செல்ல வேண்டும். அந்தக் குறுகிய பாதை வழியாக தலைகுனிந்துதான் உள்ளே செல்லமுடியும். இந்த இயற்கையான குகை சுமார் 14 அடி அகலமும், 15 முதல் 16 அடி நீளமும், அதிகபட்சமாக 7 அடி உயரமும் கொண்டது. குகைக்குள் புனித தோமையார் செதுக்கிய கல் சிலுவை, அவருடைய உள்ளங்கை மற்றும் பாதங்களின் தடங்களைக் காணலாம். இங்குதான் புனித தோமா தங்கியிருந்து கிறித்தவ மறையை போதித்தார். புனித தோமா வாழ்ந்து போதித்த இந்த குகை லிட்டில் மவுண்ட் மெட்ரோ நிலையத்திலிருந்து 10 நிமிட நடைப் பயணத்தில் எளிதில் சென்றடையலாம். ரயில் நிலையத்திலிருந்து ஆட்டோ வசதியும் உள்ளது.

இதையும் படியுங்கள்:
த்ரில்லிலிருந்து டூரிஸ்ட் ஸ்பாட்டாக மாறிய கொல்லி மலை!
st thomas cave guindy

கைரேகை: 

குகையின் மறுபுறம் ஒரு வாயில் உள்ளது. புனித தோமா தன்னை தாக்க வந்தவர்களிடமிருந்து அவ்வாயில் வழியாக தப்பி ஓடியதாகவும், அவ்வாயில் முற்றத்தில் பாறையில் காணப்படும் கைத்தடமும், கால்தடமும் தோமா உடையது என்றும் கூறப்படுகிறது. 

சுரங்கப்பாதை (மறைக்கப்பட்ட குகை): 

இந்த குகையிலிருந்து பரங்கிமலை வரை செல்லக்கூடிய ஒரு ரகசிய சுரங்கப்பாதை இருந்ததாக நம்பப்படுகிறது. 

சுனை நீர் (Holy Spring): 

குகையிலிருந்து சிறிது தொலைவில் தோமாவின் தாகத்தைத் தீர்க்க கடவுளால் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு சிறிய ஜீவநதியும் இந்த குகை வளாகத்தில் உள்ளது.

ஆரோக்கிய அன்னை கோவில்: 

ஆரோக்கிய அன்னையை சிறப்பிக்கும் வகையில் போர்த்துகீசியர் 1551ஆம் ஆண்டு கோவிலில் கட்டி எழுப்பினர். இது பலமுறை புதுப்பிக்கப்பட்ட பிறகும் பழைய கோவிலின் ஒரு பகுதி இன்றும் உள்ளது. இந்தக் கோவிலின் பீடத்தின் இடதுபுறம் வழியாக புனித தோமா வாழ்ந்த குகைக்குள் நுழைய முடியும். ஆரோக்கிய அன்னை கோவிலில் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும்.

கொடியேற்றத்தோடு தொடங்கும் விழாக் கொண்டாட்டம் 10 நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் திருப்பலியும், சிறப்பு வழிபாடுகளும் நடைபெறும். திருவிழா நிறைவின்போது தேர்பவனி கோவிலைச் சுற்றி நடைபெறும். இதில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொள்வார்கள். மறுநாள் திருப்பலி நிகழ்த்தப்பட்டு கொடி இறக்கப்படும்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவின் ஏரி மாவட்டம்: நைனிடால் - ஒரு முழுமையான பயண வழிகாட்டி!
st thomas cave guindy

எப்படிச் செல்வது? 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிண்டிக்கு அருகில் உள்ளது. சைதாப்பேட்டை, அடையாறு நதிக்கரையில் அமைந்துள்ள லிட்டில் மௌண்ட்டுக்கு செல்ல நிறைய பஸ் வசதிகள் உள்ளன.

திறந்திருக்கும் நேரம்:

தினமும் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். குகைக்குச் செல்ல நுழைவுக் கட்டணம் எதுவும் கிடையாது.

logo
Kalki Online
kalkionline.com