
இந்தியா முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்கள் காண்போரை வியக்கும் வண்ணம் தனது தனித்துவத்தால் ஈர்க்கின்றன. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சுற்றுலாத்தலமும் வரலாறு அல்லது ஆன்மீக வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் முன்பெல்லாம் அதிகப் புகழ் பெற்ற சுற்றுலா தலங்கள் மற்றும் நெரிசல் மிகுந்த சுற்றுலாத் தலங்களையே அதிகம் நாடி வந்தனர். இப்போதெல்லாம் சுற்றுலா பயணிகளின் ரசனைகள் மாறிவிட்டன.
அவர்கள் பெரும்பாலும் மக்கள் தொகை அதிகம் இல்லாத மற்ற தொந்தரவுகள் அதிகம் இல்லாத தனிமையான இடத்தினை தேடி சுற்றுலா செல்கின்றனர். பெரும்பாலும் மன அமைதியை பெறவும், சுவாரஸ்யமான விஷயங்களை அனுபவிக்கவும் செல்கின்றனர். சுற்றுலாத்துறை மலைவாசஸ்தலங்கள் மற்றும் நகரங்களை தாண்டி, தற்போது கிராமங்களிலும் முக்கியத்துவம் பெற ஆரம்பித்துள்ளது.
தனித்துவமிக்க கிராமங்களை நோக்கி மக்கள் பயணிக்க ஆரம்பித்துள்ளனர். இந்தியாவில் உள்ள ஒரு தனித்துவமிக்க கிராமம் பயணிகளை ஈர்க்கிறது. இந்த கிராமத்தின் சிறப்பு என்னவென்றால் இங்கு பயணிக்க கார்களும் இரு சக்கர வாகனங்களும் கிடையாது.
இங்கு வருபவர்கள் மலைரயில் மற்றும் குதிரைகளில் மட்டுமே பயணிக்க முடியும். இது சுற்றுலாப் பயணிகளுக்கு முற்றிலும் மாறுபட்ட அனுபவமாகும். இது சுற்றுலாப் பயணிகளின் பயணத்தை இனிமையாக்கியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டத்தில் உள்ள குளிர்பிரதேச மலைப்பகுதியில் தான் மாத்தேரான் நகர் அமைந்துள்ளது. இங்கு தான் மக்கள் வாகனங்களை பயன்படுத்துவதில்லை. இந்தியாவில் மட்டுமல்ல ஆசிய கண்டத்திலும் வாகனங்களை பயன்படுத்த தடை செய்யப்பட்ட பகுதியாக மாத்தேரான் நகர் உள்ளது. இந்த நகரம் பொது ஆட்டோமொபைல் வாகனங்கள் இல்லாத நகரம் என்ற சிறப்பு பெற்றுள்ளது.
இந்த நகரத்திற்கு செல்ல குதிரையில் தான் பயணம் செய்ய முடியும். இங்குள்ள மலையின் அழகை ரசிக்க , குதிரையில் அமர்ந்து அரச தோரணையில் செல்லலாம். குதிரையில் செல்ல விருப்பம் இல்லாவிட்டால், இரண்டரை கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். இது 7 கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள இந்தியாவின் மிகச்சிறிய மலைவாசஸ்தலம்.
கடல் மட்டத்திலிருந்து 2,635 அடி உயரத்தில் மாத்ரோன் நகரம் அமைந்துள்ளது. மும்பைக்கு மிக அருகில் இருந்தாலும், இது குளிர்ந்த காலநிலையைக் கொண்டுள்ளது. மாத்தேரானில் கிரிஸ்தான் நகராட்சி மன்றமும் உள்ளது. இந்த நகரில் 6000 பேர் வசிக்கின்றனர். இங்கு வருடம் முழுவதும் குளுமையான சூழல் நிலவுகிறது.
இங்கே, குளிர் மற்றும் மழைக்காலங்களில் இயற்கை அழகு அதிகமாக இருக்கும். இங்கு ஹார்ட் பாயிண்ட் மற்றும் ட்ரீ ஹீல் பாயிண்டிற்குச் சென்று இயற்கையை ரசிக்கலாம்.
மாத்ரோன் நகரின் இயற்கை எழில் சூழ்ந்த காடுகளின் நடுவே நடந்து செல்வது ரம்மியமான அனுபவமாக இருக்கும். பெரிய மலை முகடுகள் மீது நின்று பள்ளத்தாக்குகளின் அழகை ரசிப்பது பரவச உணர்வை தரும். மலைப்பாதையில் நடுவில் உள்ள பிரம்மாண்டமான விநாயகரின் சிலை, பக்தி அனுபவத்தையும் கொடுக்கும். ராம்பாக், பனோரமா பாயிண்டில் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் தனித்துவமான காட்சிகளையும் ரசிக்கலாம்.
சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் மாசுபாடுகளை தடுக்க, மாநில அரசு மாத்தேரானை சுற்றுச்சூழல் உணர்திறன் மிக்க பகுதியாக அறிவித்துள்ளது. இந்த ஊரை குதிரை மற்றும் மெதுவாக செல்லும் சிறிய ரயிலில் சுற்றிப் பார்த்து ரசிக்க முடியும். இந்த சிறிய ரயில் பயணம் 1907 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலத்தில் தொடங்கியது.
மாத்ரோன் மலை அழகை ரசிக்க மும்பை அல்லது புனே வரை விமானம் மற்றும் ரயில் மூலம் பயணிக்கலாம். அங்கிருந்து பேருந்து வசதிகள், டாக்சிகள் ஊர் எல்லை வரை செல்ல கிடைக்கிறது.