கர்நாடகா, உடுப்பி மாவட்டம், பைந்துாரில் ஒரு புறம் அரபிக்கடலையும், ஒருபுறம் சவுபர்ணிகா நதியையும் கொண்டது மறவந்தே கடற்கரை, இயற்கையை ரசிப்போருக்கு ஏற்ற இடமாகும். தெளிவான நீல வானம், தங்க மணல், ஆடும் பனை மரங்கள், முடிவில்லாத கரை ஆகியவையே சுற்றுலா தலமாக அமைந்துள்ளது.
மறவந்தேயில் இருந்து 45 கி.மீ., தொலைவில் உள்ள அழகிய கடற்கரையுடன் கூடிய பைந்துார், பாறைகள் நிறைந்த ஒட்டினனே, பெலகா தீர்த்த நீர்வீழ்ச்சி ஆகியவை மறவந்தே கடற்கரையை சுற்றிலும் உள்ள சில முக்கிய சுற்றுலா அம்சங்களாகும்.
மறவந்தே கடற்கரையில் நீர் விளையாட்டு மற்றும் சாகசம் சுற்றுலா பயணியிருக்கு பிடித்தமான மிகவும் பிரபலமானது.
சிறப்பு அம்சங்கள் :
ஒரு புறம் அரபிக்கடலையும், மறுபுறம் சவுபர்ணிகா நதிக்கு இடையில் தேசிய நெடுஞ்சாலை 66ல் பயணிக்கும்போது, தண்ணீரில் பயணிப்பது போல தோன்றும்.
குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள கடற்கரையில் விளையாடி மகிழலாம்.
இங்கு அன்றன்றே மரங்களில் இருந்து இறக்கப்பட்டு நெடுஞ்சாலை ஓரங்களில் இளநீர் விற்கப்படுகிறது. அழகான அரபிக்கடலில் சூரிய அஸ்தமனத்தை பார்க்க முடிகிறது அற்புதமான காட்சி.
படுகோன் கிராமத்தை இணைக்கும் வகையில், சவுபர்ணிகா நதியின் குறுக்கே சமீபத்தில் பாலம் கட்டப்பட்டது. இங்குதான் பிரபல டென்னிஸ் வீரர் பிரகாஷ் படுகோன், அவரது மகளும், பாலிவுட் நடிகையுமான தீபிகா படுகோன் பிறந்த இடமாகும்.
செல்லும் வழி:
பெங்களூரில் இருந்து 420 கி.மீ., தொலைவிலும்; மங்களூரில் இருந்து 105 கி.மீ., தொலைவிலும் உள்ளது.
கார்வார் விரைவு ரயில் மூலம், குந்தாபுரா ரயில் நிலையத்தில் இருந்து 20 கி.மீ., தொலைவில் மறவந்தே அருகிலுள்ள ரயில் நிலையத்துக்கு செல்லலாம்.
குந்தாபுரா நகரில் இருந்து 23 கி.மீ., தொலைவில் உள்ள மறவந்தே கடற்கரைக்கு சாலை வழியாக டாக்சிகள் கிடைக்கின்றன.
மறவந்தே கடற்கரைக்கு மிக அருகில் கடற்கரை ஓய்வு விடுதிகள் அல்லது ஹோம் ஸ்டேக்கள் உள்ளன. குந்தாபுரா நகரிலும் தங்குவதற்கு வசதிகள் உள்ளன. மொத்தத்தில் வித்தியாசமான, அதோடு இயற்கையை ரசிக்கும் மக்களுக்கு இந்த இடம் மிகச்சிறந்த சுற்றுலாத் தலமாகும்.