
சென்னையில் ஆறு இருக்கிறது ஏன்றால் மக்கள் ஒத்துக் கொள்வார்கள். கூவம், அடையாறு எல்லாம் ஆறுதானே என்று. ஏரி இருக்கிறது என்றாலும் வீராணம், செம்பரம்பாக்கம், பூண்டி, வேளச்சேரி, கொரட்டூர் ஏரிகள் நினைவுக்கு வந்துவிடும். ஆனால் ஒரு அருவி இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா?
மலைசார்ந்த பகுதியில்தானே அருவி இருக்கும். சென்னையில் ஏது மலை அருவி? என்று கேட்பீர்கள். மலையில் இருக்கும் அருவி அளவு பெரிதாக இல்லாவிடினும் சென்னையில் ஒரு குட்டி அருவி இருப்பது உண்மைதான். சென்னை கேளம்பாக்கத்தை அடுத்த தையூரில்தான் அந்த அழகான அருவி அமைந்துள்ளது.
தையூரில் பருவமழையால் நிரம்பி வழியும் ஏரி ஒன்று உள்ளது. அந்த ஏரி நிரம்பி வழியும்போது அதன் அருகே ஒரு குட்டி அருவி உருவாகி பெருக்கெடுத்து ஓடும். இந்த ஆண்டு பருவமழை காலம் தாண்டி பெய்தாலும் அதிக அளவு மழைபொழிவைத் தந்துள்ளதால், தையூர் ஏரி முழுவதும் நிரம்பியுள்ளது.
நல்ல மழை பெய்ததால் சுற்றிலும் உள்ள காடு நல்ல பசுமை நிலையை அடைந்துள்ளது. அதற்கு நடுவே, நிறைந்து வழியும் ஏரி, சிறிய நீர்வீழ்ச்சி என இந்த இடமே மிகவும் ரம்மியமாக இருக்கிறது. இது ஒரு எட்டு அடி நீர்வீழ்ச்சிதான். அதனால் பெண்களும் குழந்தைகளும் எந்த பயமும் இன்றி குளிக்க ஏற்றதாக உள்ளது. இது மலைகளில் இருந்து விழும் அருவியில் குளிப்பது போன்ற ஒரு உணர்வை நிச்சயம் கொடுக்கும்.
எப்போதும் நகரத்திற்கு உள்ளேயே சுற்றி கொண்டிருக்கும் நீங்கள், குழந்தைகளை நகரத்திற்குளேயே இயற்கை எழில் கொஞ்சும் இடத்திற்கு அழைத்துச்செல்ல இது நல்ல வாய்ப்பாக இருக்கும். அமியூசிமெண்ட் பார்க் அருவி என்னதான் இருந்தாலும் செயற்கையான அனுபவத்தையே கொடுக்கும்.
இயற்கை குழலில் அருவியை பார்க்க விரும்பும் குழந்தைகளுடன் பெரிய பட்ஜெட் போட்டு மலை பிரதேசங்களுக்கு செல்லாமல் பக்கத்திலேயே அந்த அனுபவத்தை கொடுக்கும் வாய்ப்பாக இருக்கும். பட்ஜெட்டும் கம்மி. காலையில் சென்றால் குழந்தைகளுடன் குளித்துவிட்டு மதிய உணவுக்கு வீட்டுக்கே வந்து விடலாம்.
முழுதாக நிரம்பி வழியும் தையூர் ஏரியைக்காண மக்கள் திராளாக வருகை தருகின்றனர். ஏரியும் கூட அதிகம் ஆழமில்லை என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். ஏரியின் முழு அழகைக்காண அருகே படிக்கட்டுகளுடன் கூடிய உயர்ந்த இடங்கள் உள்ளன. அதில் ஏறி, இந்த ஏரியின் ரம்யமான காட்சியைக் காணலாம். அருகே உள்ள பாறைகளின் மீது ஏறவேண்டாம். பாசி அதிகமாக இருப்பதால், வழுக்கிவிட்டு அடிபட வாய்ப்புகள் அதிகம்.
சரி அந்த ஏரிக்கு எப்படி போவது…
சென்னையில் நீங்கள் எங்கு இருந்தாலும், OMR சாலையில் உள்ள கேளம்பாக்கத்தை பேருந்து மூலம் எளிதாக அடையலாம். கேளம்பாக்கத்தில் இருந்து ஒரு ஆட்டோ பிடித்தால் 2 கிமீ தூரத்தில் தையூர் வந்துவிடும். ஊரின் நடுவே ஒரு கோவில் உள்ளது. அங்கிருந்து 100 மீட்டர் தூரத்தில் ஏரியையும் அருவியையும் அமைந்துள்ளது. இருசக்கர வாகனத்தில் OMR வழியாக வந்தால் ஒரு லாங் ரோட் ட்ரிப் வந்த அனுபவம் இருக்கும்.
இங்கு நேரம் போவதே தெரியாது. அதுவும் இப்போது மழை பெய்து நீர் அதிகம் இருப்பதால் அருவியை பார்க்க சரியான நேரம் இது. இந்த வரமே குடும்பத்துடன் சென்று வாருங்கள்.