

பயணத்தில் ஏற்படும் ஃப்ளைட் கேன்சல், ஹோட்டல் சிரமம், பொருள் இழப்பு போன்ற இடையூறுகளை மனஅழுத்தமின்றி சமாளிக்க மனப்பக்குவம் தேவை என இந்த கட்டுரை விளக்குகிறது. தேவையற்ற பொருட்களை தவிர்த்து, புதிய உணவு, கலாச்சாரம், இயற்கை காட்சிகளை அனுபவித்து, உடற்பயிற்சி, புகைப்படம், நட்பு மூலம் பயணத்தை இனிமையாக்க வேண்டும் என கூறுகிறது.
குடும்பமாகவோ, தனியாகவோ பயணம் செய்கையில், பலவகை ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவது உண்டு. அவைகளை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும்.
புது இடம், கண்களைக் கவரும் இயற்கைக் காட்சிகள், வித்தியாசமான உணவு, வேறுபட்ட கலாச்சாரம் இப்படி எத்தனையோ ஒருபுறம் அருமையாக இருந்தாலும், மறுபுறம் எதிர்பாராமல் பொருட்கள் தொலைந்து போவது, ஃப்ளைட் கேன்சலாவது, தங்கும் விடுதி சுமாராக இருப்பது போன்ற இடைஞ்சல்கள் மனதை சங்கடப்படுத்தும். இவைகளை ஓரங்கட்டி சமாளித்து பயணத்தில் நல்லதொரு அனுபவம் கிடைக்க மனப் பக்குவம் தேவை.
அவசியமற்ற சுமை:
பயணம் மேற்கொள்கையில், மிகவும் அவசியமான, முக்கியமான பொருட்களை கவனமாக லிஸ்ட் போட்டு பேக் செய்து கொள்ள வேண்டும். தேவையில்லாமல், அவசியமற்ற சாமான்களை சுமந்து எடுத்துக்கொண்டு செல்கையில், பயணம் இனிமையாக இருக்காது. அதுவும் வேண்டும், இதுவும் வேண்டும் என மேலும்-மேலும் பொருட்களை பெட்டியில் திணிக்காமல் இருக்கும் மனப்பக்குவம் தேவை.
கலாச்சார புத்துணர்வு:
செல்கின்ற இடத்தின் புதுமாதிரியான கலாச்சாரத்தை அனுபவிப்பது புத்துணர்ச்சியை உருவாக்கும். சில விஷயங்கள் ரசிக்காமல் போனாலும், புதுமையான பல விபரங்களைத் தெரிந்துகொண்ட மனத் திருப்தி கிடைக்கும். பிடித்ததை எடுத்துக்கொண்டு, பிடிக்காததை விட மனப்பக்குவம் தேவை.
நதி ஓட்டம் போல்:
நிறைய ப்ளான் செய்து பயணத்தை ஆரம்பித்து இருந்தாலும், இடையிடையே ஏற்படும் ஒரு சில தடங்கல்கள் எரிச்சலை ஏற்படுத்துவது சகஜம். அப்போது நிதானமாக சற்றே மூச்சு பயிற்சி செய்து , தடங்கல்கள் எல்லாம் ஜுஜுபி என்று நினைத்து, நதி ஓட்டம் போல பயணத்தை மேற்கொள்ளும் மனப்பக்குவம் தேவை.
வேகேஷன் ரிலாக்ஸ்:
பயணம் செல்கையில் சற்றே சோர்வு ஏற்பட வாய்ப்புண்டு. பார்க்க வேண்டிய சில இடங்கள் விட்டுப் போகலாம். அச்சமயம், "இது எனது வேகேஷன் ரிலாக்ஸ். அலுவலகம் செல்லவேண்டாம். எது முடிகிறதோ, அவைகளை மட்டும் பார்த்தால் போதும்" என்று மனதினுள் கூறியவாறே ரெஸ்ட் எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் தேவை.
மீண்டும் டீ.வி:
பயணத்தின்போது, தங்கியிருக்கும் ஹோட்டலில் வீட்டில் இருப்பது போல், அங்கே உள்ள டீ.வியைப் பார்த்தவாறு காப்பியைக் குடித்துக்கொண்டு பொழுதைப் போக்காமல், வெளியே காலார நடந்து சென்று பிடித்த மலையேற்றம், படகு சவாரி போன்றவைகளை மேற்கொண்டு புத்துணர்ச்சி பெற மனப் பக்குவம் தேவை.
எஞ்ஜாய்! எஞ்ஜாய்!
பயணத்தின்போது இடங்களைச் சுற்றிப் பார்ப்பதோடு, சிறிது நேரம் உடற்பயிற்சி செய்யலாம். இயற்கைக் காட்சிகளை போட்டோ எடுத்து நண்பர்களுக்கு அனுப்பலாம். செல்ஃபி எடுத்துக்கொள்ளலாம். விதவிதமான உணவுகளை ருசி பார்க்கலாம். அங்கே இருக்கும் மக்களிடம் நட்புடன் பேசலாம். சிடு-சிடு கடு-கடு என்று இல்லாமல், இது நம்முடைய வேகேஷன் பயணம் என்று நினைத்து எஞ்ஜாய் பண்ண மனப்பக்குவம் தேவை.பயணத்தை இனிமையாக்கி, புத்துணர்வை கண்டிப்பாக ஏற்படுத்தும் இத்தகைய மனப்பக்குவம்.
பயணத்தின் போது ஏற்படும் எதிர்பாராத தடங்கல்களையும், ஏமாற்றங்களையும் மனஅழுத்தமின்றி எதிர்கொண்டு, விடுமுறையை மன அமைதியுடனும் புத்துணர்ச்சியுடனும் ரசித்துத் திரும்பும் தெளிவு கிடைக்கும்.