
ஸ்ரீ ராமன் ராவணனுடன் போர் புரிய இலங்கைக்கு புறப்படும் முன் வானர படையை திரட்டி கொண்டிருந்தார். அதில் "சிங்கெலிக்கா" என்று அழைக்கப்படும் குள்ளமான ஆயிரம் வானரங்கள் கொண்ட படை. இவை கூட்டமாக எதிரியின் படைவீரர்கள் மேல் விழுந்து பற்களால் கடித்துக் குதறியும் நகங்களால் பிராண்டியும் போரிடும்.
போருக்குப் புறப்படும் வீரர்களை வழியனுப்பிய குடும்பத்தாரிடம் , ஸ்ரீராமன் " யாரும் கவலைப்பட வேண்டாம். என் படை வீரர்களை பத்திரமாக திருப்பிக் கொண்டு வந்து சேர்ப்பது என் பொறுப்பு" என்று கூறினார்.
போரில் ராவணன் அவன் தம்பி கும்பகர்ணனை போருக்கு அனுப்பினான். கும்பகர்ணனின் ராட்சத உருவத்திற்கேற்றாற்போல் அவனது தேரும் மிகப்பெரியதாகவும் பெரிய பெரிய மணிகள் தொங்கிக் கொண்டிருந்தன.
போர் தொடங்கி சிறிது நேரத்தில் ராமபாணத்திற்கு பலியானான் கும்பகர்ணன். தேரிலிருந்து சாயும்போது கும்பகர்ணனின் கை பட்டு ஒரு மணி கழன்று கீழே விழந்தது. கீழே விழுந்த மிகவும் பெரிய பாரமான மணி போரிட ஒன்றாக ஓடிக்கொண்டிருந்த ஆயிரம் வானரங்கள் மேல் விழுந்து அவர்களை மூடிவிட்டது.
திடீரென்று தங்கள் மேல் எதையோ வைத்து மூடிவிட்டதைப்போன்று உணர்ந்த வானரங்கள் பயந்து விட்டன. ஒரே இருட்டு. நல்லவேளை மணி விழுந்த இடம் கரடு முரடாக இருந்ததால் சுவாசிக்க காற்று வந்தது. சில மணி நேரங்கள் ஆன பிறகும் அவர்களைக் காப்பாற்ற யாரும் வவாததால், ஒரு வானரம் சொன்னது "
" சுக்ரீவனும் அனுமனும் ஒன்றும் செய்யப்போவதில்லை நம்மைக் காப்பாற்ற. " ஸ்ரீராமன் போருக்கு புறப்பட்டவர்களையெல்லாம் பத்திரமாக உயிரோடு திரும்ப கொண்டுவந்து சேர்ப்பது அவர் பொறுப்பு என்றாரே, அவர் மட்டும் என்ன செய்தார்" இன்னொரு வானரம்.
இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த, மூத்த வானரம் " முதலில் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவதை நிறுத்தி, எல்லோரும் கண்களை மூடிக்கொண்டு ஸ்ரீ ராமனை மனதில் நினைத்துக்கொண்டு ' ராம் ராம் ராம்' என்று ஜெபம் செய்யுங்கள். ஸ்ரீ ராமன் நம் எல்லோரையும் நிச்சயம் காப்பாற்றுவார்" எனக் கூற, எல்லா வானரங்களும் அப்படியே செய்தன.
போர் முடிந்து ஸ்ரீ ராமன் சுக்ரீவனிடம் " நம் படையில் எல்லோரும் பத்திரமாக இருக்கிறார்களா. எண்ணிக்கொண்டு வா".
" பிரபு! எண்ணிவிட்டேன். ஆயிரம் சிங்கலிகர்கள் மட்டும் காணவில்லை". " இல்லை மற்றும் ஒருமுறை சரியாக எண்ணி வா " என்றார் ஸ்ரீராமன்.
"ஆயிரம் சிங்கலிகர்கள் மட்டும் காணவில்லை" என்றான் சுக்ரீவன். அப்போது ராமன், அனுமா நீயும் என்னுடன் வா. நாம் அந்த ஆயிரம் வானரங்களை தேடுவோம். "என்றார்
போர்க்களத்தில் தேடிக்கொண்டிருந்தபோது திடீரென்று ஸ்ரீராமன் ஒரு இடத்தில் நின்றார்."அனுமா! அங்கேபார். ஒரு பெரிய மணி தெரிகிறது."
ஸ்ரீராமன் என்ன சொல்லப்போகிறார் என்று புரிந்து விட்டது அனுமனுக்கு. அனுமன் தன் வாலின் நுனியை அந்த மணியின் வளையத்தில் நுழைத்து தூக்கினான். அனுமன் மணியைத் தூக்கியதும் அதன் கீழ் ஆயிரம் சிங்கலிகர்கள் கண்களை மூடிக்கொண்டு கை கூப்பியபடி ராமநாமம் ஜபித்துக்கொண்டிருந்தன. பல மணி நேரத்திற்குப்பின் வெளிச்சமும் காற்றும் பட்டதும் கண்களைத் திறந்தன வானரங்கள். எதிரே ஸ்ரீராமனும் அனுமனும்.
வரிசையாக கை கூப்பியவாறு நின்று கொண்டிருந்த வானரங்களின் கண்களில் கண்ணீர்மல்க, "பிரபு ! எங்களை மன்னித்து அருள வேண்டும்" என்று சொல்லி ஆயிரம் வானரங்களும் ஸ்ரீராமனின் பாதங்களில் விழுந்து வணங்கின.
அருகில் நின்றிருந்த அனுமன் பக்கம் திரும்பிய ஸ்ரீராமன் அனுமனைப் பார்த்து சொன்னார் " அனுமா! வாலில் பளபளக்கும் மணியுடன் நீ இப்படி நிற்கும் காட்சி சுந்தரமாக இருக்கிறது.
இந்தக் கோலத்தில் உன்னை தரிசிப்பவர்களுக்கு பக்தி, ஞானம்,வைராக்கியம் கிட்டும் " என்று வாழ்த்தினார்.
வியாசராஜர் பிரதிஷ்டை செய்த 732 அனுமன் விக்கிரகங்களிலும் வாலில் மணி தொங்கிக் கொண்டிருப்பதாக இருக்கும்.