ஆன்மிகக் கதை - சோழனுக்கு பட்டினத்தார் புகட்டிய பாடம்!

பட்டினத்தார்
பட்டினத்தார்

காவிரிப்பூம்பட்டினத்தில் கடல்வழி வாணிகத்தில் பெரும்பொருள் ஈட்டி வணிகத்தொழில் புரிந்துவந்த பெருஞ்செல்வந்தர்தான் பட்டினத்தார். இவர் பட்டினத்தார் என்றும் பட்டினத்தடிகள் என்றும் அழைக்கப்படுகிறார். இவருடைய இயற்பெயர் திருவெண்காடர். சோழர்கள் காலத்தில், கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த துறவி. பொருளின் நிலையாமையை உணர்ந்து, கடவுள்பால் ஈர்ப்புண்டு துறவறம் பூண்டவர்.

இவர் துறவு பூண்டு ஒரு துண்டை மட்டும் உடுப்பாக அணிந்து திருவெண்காட்டிலே துறவியாகச் சுற்றி யாசகம் பெற்று வாழ்ந்துவந்தார். ஒரு காலகட்டத்தில் வீடு தேடிச்சென்று யாசகம் பெற்று உணவு அருந்துவதையும் வெறுத்து ஊர்ப்புறத்திலே தங்கினார். ‘என் மேல் அக்கறை உள்ள யாராவது என்னைத் தேடி வந்து உணவு அளித்தால் மட்டுமே, நான் உணவு உண்பேன்’ என்னும் உறுதிகொண்டு அங்குத் தங்கியிருந்தார்.

அப்போது ஒரு முறை அந்நாட்டை ஆட்சி செய்த சோழ மன்னன் பட்டினத்தார் துறவறம் ஏற்ற செய்தி அறிந்து, பட்டினத்தாரைச் சந்திக்க வந்தார். அங்குப் பட்டினத்தார் ஒரு பாறையின் மீது அமர்ந்திருந்தார்.

அரசன்,  "நீங்கள் பெரிய செல்வந்தர் ஆயிற்றே. நீங்கள் நினைத்தால் எனக்கே செல்வங்களை எல்லாம் தானம் செய்ய இயலுமே. ஆனால், அதை விடுத்து நீங்கள் துறவறம் பூண்டது ஏன்? நீங்கள் இப்படிச் செய்யலாமா?" என்று பட்டினத்தாரிடம் கேட்டார்.

பட்டினத்தார்
பட்டினத்தார்

பட்டினத்தாரிடமிருந்து ‘பளிச்’ என்று பதில் வந்தது.  "இது என் தேர்வு." மன்னன் விடவில்லை. அடுத்த கேள்வியை முன்வைத்தார்.  "நீங்கள் செல்வந்தராக இருந்ததற்கும், இப்போது துறவியாக இருப்பதற்கும் என்ன வித்தியாசம்?" என்று கேட்டார்.

இதையும் படியுங்கள்:
பனீர் சாப்பிடும் ஆவலை தூண்டுவது எது தெரியுமா?
பட்டினத்தார்

அதற்குப் பட்டினத்தார், "துறவு பூண்ட நான் உன்னிடம் அமர்ந்து பேசுகின்றேன். மன்னனாகிய நீ என்னிடம் நின்று கேட்கிறாய். இதுதான் வித்தியாசம். வணிகனாக இருந்தால் நான் மன்னனை வணங்க வேண்டும். ஆனால், நான் மகானாக இருந்தால் இறைவனை மட்டும் வணங்கினால் போதும், மன்னன் ஆசைக்கு அகப்பட்டவன், ஆண்டவனுக்கு ஆட்பட்டவன்,” என்று விளக்கம் அளிக்க, மன்னன் பட்டினத்தாரை வணங்கி அங்கிருந்து விடை பெற்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com