கால்நடைகளுக்காக கட்டப்பட்ட கோவில்! தமிழ்நாட்டின் வினோத வழிபாடு!
தங்கள் வீட்டு கால்நடைகள் நலமாக வாழ, வேண்டுதல் செய்வதற்கென்று தமிழகத்தில் ஒரு கோவில் உள்ளது. இது கால்நடைகளின் காவல் தெய்வமாக உள்ளது. கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் குடும்பம், நட்பு மற்றும் சுற்றம் என்று மனிதர்களுக்காக வழிபாடு செய்வது வழக்கம். ஆனால், தங்கள் வீட்டு கால்நடைகள் நலமாக வாழ, வேண்டுதல் செய்வதற்கு ஒரு கோவில் உள்ளது அதிசயம் தான! திருப்பூரில் உடுமலையை அடுத்த சோமவார்ப்பட்டியில் ஆல்கொண்டமால் கோவில் (Alkondamal Temple) கால்நடைகளின் காவல் தெய்வமாக விளங்குகிறது.
பரமபத நாதனாகிய பரந்தாமன் துவாபர யுகத்தில் ஆயர் பாடியில் நந்தகோபன் யசோதைக்கு மகனாக வளர்ந்து வந்தார். அவர் கறவைக் கணங்கள் மேய்த்து வந்த காரணத்தால், கண்ணபிரான் திருப்பார்வையில் பசுக்களும் மக்களும் நோய் நொடியின்றி வாழ்ந்தனர். அந்த கண்ணபிரான் உடுமலை செஞ்சேரிமலை ரோட்டில் சோமவார்பட்டி கிராமத்தின் காட்டில் கோவில் கொண்டுள்ளார்.
ஆலமரத்தூர் என்று அழைக்கப்படும் இக் கிராமம் பண்டைய காலத்தில் அடர்ந்த காடாக இருந்தது. இங்கு விஷப் பாம்புகள் வாழும் ஆலமரத்தின் கீழ் லிங்க வடிவில் புற்று ஒன்று இருந்தது. இந்தப் பகுதியில் மேய்ந்த பசுக்கள் தாங்களாகவே பாலை இந்தப் புற்றில் சொரிந்தன. ஒருநாள் பசு ஒன்றை பாம்பு தீண்டியது. பாம்பின் நஞ்சு பசுவை தீண்டாமல் இருக்க, மாயவன் உண்டு பசுவைக் காப்பாற்றினார். இதனால் அவர் ஆல் கொண்டார் என்று அழைக்கப்பட்டார்.
இங்கு ஆலமரத்தின் கீழ் இருந்த திருமாலையும், ஆலகால விஷம் உண்ட சிவனையும் ஒரே கடவுளாக எண்ணி மக்கள் வழிபட்டனர். உலகத்தில் எப்போதெல்லாம் அநீதி தலை தூக்குகிறதோ அப்போது விஷ்ணு அவதரிப்பார் என்பது ஐதீகம். பெரும்பாலும் கோவிலில் சிலை வழிபாடு இருக்கும். இங்கு ஆல்கொண்டமாலின் அவதாரங்கள் சிலை வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுவே மூலவராக வணங்கப்படுகிறது. இது மூன்று பாகங்களாக உள்ளன. மேல்பாகத்தில் கிருஷ்ணபகவானுக்கு இரு மருங்கில் சூரிய சந்திரன் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் 3, 4, 5 தேதிகளில் தமிழர் திருவிழா கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவின் போது பக்தர் தங்கள் வீட்டு மாட்டின் பாலைக் கொண்டு வந்து ஆல்கொண்டமால் மீது தெளித்து அபிஷேகம் செய்து வீட்டிற்கு எடுத்துச் சென்று கால்நடைகள் மீது தெளிக்கிறார்கள். இப்படிச் செய்தால் அவைகளுக்கு நோய் வராது என்று நம்பப்படுகிறது. இங்கு திருமால் உத்சவராக இருந்தாலும், சிவன் கோவிலில் நந்தி இருப்பதுபோல் இங்கும் நந்தி இருப்பது தனிச்சிறப்பு.
கோவில் விழா போது மாடு கன்று வடிவ உருவபொம்மை மண்ணால் செய்து வண்ணம் தீட்டி வளாகத்தில் உள்ள கால்நடைத் சிலைகள் முன் வைக்கிறார்கள். மாட்டுப் பொங்கல் அன்று பிறந்த கன்றை இப்பகுதி மக்கள் கோவிலுக்கு விட்டு விடுவார்கள். அவை தன்னிச்சையாக சுற்றித் திரியும். இதை சலங்கை மாடு என அழைக்கிறார்கள். இதன் காதுகளில் சூலாயுதம் போல் மாட்டி விடுகிறார்கள். அந்த மாடுகள் உருமி இசைக்கு ஆடும் வகையில் பயிற்சி கொடுக்கிறார்கள். இந்த வழிபாட்டு முறை வேறு எங்கும் காண முடியாததாகும்.

