
தமிழ் கடவுளான முருகனுக்கு ஆறுபடை வீடுகள் இருப்பது அனைவரும் அறிந்தது. இது ஆறுபடை வீடா? அல்லது மக்களின் துயரங்களை ஆற்றும் ஆற்றுப்படை வீடா என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.
படைவீடு என்பது பகைவரோடு போர் புரிவதற்காக ஒருவன் தன் படைகளுடன் தங்கியிருக்கும் இடத்துக்குதான் பெயர்.
சூரபத்மனோடு போர் புரிய செல்லும் முன் முருகன் தங்கியிருந்த படைவீடுகள் பல உள்ளன.
பொருள் பெற்ற ஒருவன், பொருளின்றி தவிக்கும் வறியவன் ஒருவனிடம், பொருளுடைய இன்னாரிடத்திலே சென்றால் பொருள் பெறலாம் என்று ஆற்றுப்படுத்துவதை (வழிப்படுத்துவதை) ஆற்றுப்படை என்பர். அதன்படி, பொருளைப் பெறுவதுபோல், அருளைப் பெறவும் நம் முன்னோர் ஆற்றுப்படுத்தினர். நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படை இதற்கு சான்றாகும்.
சில தலங்களை குறிப்பிட்டு, அங்கெல்லாம் எழுந்தருளியுள்ள முருகனிடம் ஆற்றுப்படுத்துவதாகத் திருமுருகாற்றுப்படை அமைந்துள்ளது. ஆற்றுப்படை வீடுகள் என்பதுதான் பின்னாளில் ஆறுபடை வீடுகள் என்றானது அவற்றுள் ஆறுதல்கள் சிறந்தன என்று முன்னோர் கூறினர்.
பொருளாகிய அருளை பெற்ற பக்தர்கள் தான் பெற்ற இன்பம் மற்றவர்களும் பெறவேண்டும் என்ற நோக்கத்திலேயே வழிகாட்டி உள்ளனர்.
அத்தகு ஆறுபடை வீடுகளாக திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்), திருவாவினன்குடி (பழநி), திருவேரகம் (சுவாமி மலை), குன்று தோறாடல் (திருத்தணிகை) மற்றும் பழமுதிர்சோலை ஆகியவை இருக்கின்றன. ஆறு முகங்கள் கொண்ட முருகப்பெருமான் அவருடைய தொடர்புடைய பொருட்கள் அனைத்தும் ஆறு என்று முடியும் எண்ணில் இருப்பதே பெரிதும் விரும்பினார்.
நக்கீரர் தாமருளிய திருமுருகாற்றுப்படையில் முருகன் உறையும் இடங்களாக ஆறு இடங்களை அவர் கூறியதிலிருந்து ஆறுபடை வீடுகள் என்பது வழக்கில் வந்தது.
'ஆறுதிருப் பதியில் வளர் பெருமானே
சகலமும் முதலாகிய அறுபதி நிலைமேவிய
தடமயில் தனிலேறிய பெருமானே'
என்று திருப்புகழில் அருணகிரிநாதரும், 'ஆறு திருப்பதி கண்டு ஆறெழுத்தும் அன்பினுடன் கூறுபவர் சிந்தை குடி கொண்டேனே' என்று கந்தர் கலிவெண்பாவில் குமரகுருபரரும், ஆறுபடை வீடுகளை ஆறு திருப்பதி என்றே கூறியுள்ளனர்.
இத்தகைய காரணங்களால் ஆற்றுப்படை வீடுகள், ஆறுபடை வீடுகளானது.
இதில் முதல்படை வீடான திருப்பரங்குன்றமும், கடைசி படை வீடான பழமுதிர்சோலையும் சங்கம் வளர்த்த மதுரையிலேயே அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.