நாகப்பட்டினம் to மலேசியா: ஒரு தனிமனிதர் உருவாக்கிய ஆன்மிக சாம்ராஜ்யம்!

மலேசிய பத்துமலைக் குகை முருகன் கோயில்! மிகப்பெரிய முருகன் சிலை அமைந்துள்ள இந்த பத்துமலைக் குகை முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையுடன் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.
Batu Caves Murugan Temple
Batu Caves Murugan Temple
Published on
Deepam strip
Deepam strip

உலகப் புகழ் பெற்ற மலேசியாவின் பத்துமலைக் குகை முருகன் கோயில் (Batu Caves Murugan Temple) அந்நாட்டுத் தலைநகர் கோலாலம்பூருக்கு அருகில் 13 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகப் பெருமான் சுப்பிரமணிய சுவாமி என்னும் பெயரால் அழைக்கப்படுகிறார்.

மலேசியாவின் பத்துமலையிலுள்ள சிறிய குகையில் வேல்மாதிரி உருவம் கற்பாறையில் தெரிவதைக் கண்ட ஒரு தமிழ்ப்பக்தர் ஒரு மூங்கிலை நிறுவி அதை வேலாகக் கருதி வழிபட்டு வந்ததாகவும், பின்னர் உலோகத்திலான வேல் அங்கு நிறுவப்பட்டு முருகப் பெருமானுக்கு ஆலயம் அமைக்கப்பட்டது என்றும் வரலாறு கூறுகிறது.

தமிழகத்தில் நாகப்பட்டினத்திற்கு அருகிலுள்ள திருமலைராயன் பட்டினத்தைச் சேர்ந்த காயோராகணம் பிள்ளை என்பவர் மலேசியாவில் குடியேறி நிறைய பணம் சம்பாதித்திருக்கிறார். இதில் ஒரு பகுதியை இறைபணிகளுக்காகவும் செலவழித்தார். கோலாலம்பூரில் மாரியம்மன் கோயில், கோர்ட்டு மலைக்குப் பக்கத்தில் விநாயகர் ஆலயம் போன்றவைகளைக் கட்டுவித்தவரும் இவரே ஆவார். 1890-91 ஆண்டுகளில் பத்துமலைக் குகை முருகப் பெருமானுக்கும் ஆலயத்தையும் இவர்தான் கட்டியிருக்கிறார். இந்த மூன்று ஆலயங்களிலும் அனைத்து விழா நாட்களிலும் காயோராகணம் பிள்ளை குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே முதல் மரியாதை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த பத்துமலையில் இரு குகைகள் உள்ளன. ஒன்று மிக ஆழமாகச் செல்வது. மிகவும் இருண்டது. மற்றொரு குகையில்தான் முருகன் கோயில் அமைந்துள்ளது.

நக்கீரர் வரலாற்றில் ஒரு பூதம் அவரை ஒரு குகைக்குள் அடைத்து விட்டதாகவும், அங்கு ஏற்கனவே 999 பேர் அடைக்கப்பட்டு இருந்ததாகவும் நக்கீரரையும் சேர்த்து இவர்களின் எண்ணிக்கை 1000ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பழனி முருகன் அபிஷேகப் பொருட்களில் மறைந்திருக்கும் ரகசிய மருத்துவம்!
Batu Caves Murugan Temple

இவர்களின் எண்ணிக்கை ஆயிரமான பின்பு இவர்களைத் தின்ன ஒரு பூதம் திட்டமிட்டிருந்தது என்பது வரலாறு. இது நாம் அனைவரும் அறிந்ததே. 1000 பேர் அடைத்து வைக்கக் கூடிய அளவிலான குகைகளை உடைய முருகனின் மலைக் கோயில்கள் தமிழ்நாட்டில் எதுவுமில்லை. பூதங்கள் கடல் கடந்து செல்லக் கூடிய ஆற்றலுடையவை என்பதால் நக்கீரர் அடைபட்டுக் கிடந்தது இந்த மலேசிய பத்துமலைக் குகையாகத்தான் இருக்கும் எனவும் நம்பப்டுகிறது. இங்கு முருகனின் வேல் தமிழ்ப்பக்தர் ஒருவருக்குத் தென்பட்டதாகவும், அதன் பிறகுதான் இங்கு முருகன் கோயில் அமைக்கப்பட்டது என்றும் இங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த முக்கியமான பத்துமலைக் குகை முருகனைத் தரிசிக்க முற்காலத்தில் பக்தர்கள் கரடுமுரடான பாதையில் செல்ல வேண்டியிருந்தது. அதன் பின்பு 1938 ஆம் ஆண்டில் இந்த மலைக் கோயிலுக்குச் செல்ல 272 படிக்கட்டுகளைக் கொண்ட மூன்று நடைபாதைகள் அமைக்கப்பட்டன. இது தவிர தனியே இரயில் பாதை ஒன்றும் அமைக்கப்பட்டது. இவ்வழிகளைப் பயன்படுத்தி தரையிலிருந்து 400 அடி உயரத்தில் உள்ள கோவிலுக்குச் சென்று சுப்பிரமணிய சுவாமியான முருகப் பெருமானைத் தரிசித்து வந்தார்கள்.

தற்போது இந்தக் கோயிலுக்குச் செல்லும் பாதைகளுக்கு முன்பாக, அதாவது நுழைவு வாயிலின் அருகில் தங்கம் போல் தகதகவென மின்னும்படியாக வர்ணம் பூசப்பட்ட மிகப் பெரிய முருகன் சிலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய வேலை வலது கையில் தாங்கி நிற்கும் நிலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த முருகன் சிலையின் உயரம் 42.7 மீட்டர், அதாவது 140.09 அடி ஆகும். இந்த சிலை அமைக்க 2003 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட பணி 2006 ஆம் ஆண்டில்தான் நிறைவு பெற்றதாம். இந்த சிலை அமைக்க 2006 ஆம் ஆண்டில் இந்திய மதிப்பில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. இந்த சிலை அமைப்பிற்கான கட்டுமானப் பொருட்களில் பெரும்பாலானவை பக்கத்து நாடான தாய்லாந்தில் இருந்து கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய முருகன் சிலை அமைந்துள்ள இந்த பத்துமலைக் குகை முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையுடன் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.

இதையும் படியுங்கள்:
தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் - சுகமான சுற்றுலா அனுபவம்.
Batu Caves Murugan Temple

முருகனுக்கு உகந்ததாகக் கருதப்படும் நாட்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் இக்கோயிலில் நடைபெறுகின்றன. இங்கு வருடந்தோறும் நடைபெறும் தைப்பூச திருவிழாவில் இந்துக்கள் தவிர சீனர்கள் மற்றும் வேறு சிலரும் இங்குள்ள புனித ஆற்றில் நீராடிவிட்டு, தமிழ்நாட்டில் முருகன் கோயில்களில் நேர்த்திக் கடன்களாகச் செய்யப்படும் அலகு குத்துதல், பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற பலவிதமான நேர்த்திக் கடன்களை நிறைவேற்றிச் செல்கிறார்கள்.

பத்துமலைக் குகை என்னும் இந்தப் பகுதி அந்நாட்டின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இருப்பதால் பயண வசதி சிறப்பாக செய்யப்பட்டிருக்கிறது. வாய்ப்பு உள்ளவர்கள் வாழ்வில் ஒரு முறை உலகப் புகழ் பெற்ற பத்துமலை முருகனை தரிசித்து வாழ்வில் எல்லா வளங்களையும் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com