24 மணி நேரம் தொடர்ச்சியாக எரியும் சோழர் காலத்து விளக்கு!

Nanda Vilakku
Nanda Vilakku
Published on

சோழர்கள் கால கல்வெட்டில் அடிக்கடி நந்தா விளக்கை பற்றி படித்திருப்போம். இந்த விளக்கை தூண்டாமணி விளக்கு, திரு நுந்தா விளக்கு என்றும் கூறுவார்கள். 

கோவில்களின் கருவறையில் உள்ள ஒரு வகை தொங்கும் விளக்கு தான் தூண்டாமணி விளக்கு என்ற பெயர் பெற்றுள்ளது.  

பண்டைய காலத்தில் கலங்கரை விளக்கு, கைவிளக்கு, மேசை விளக்கு, குத்து விளக்கு, தூண்டாமணி விளக்கு, சர விளக்கு, ஆத்ம விளக்கு, தெரு விளக்கு, சுட்டி விளக்கு என்று பலவகை விளக்குகள் இருந்திருக்கின்றன. இதில் சுட்டி நிற்கும் விளக்கின் பெயர் ‘தூண்டாமணி விளக்கு’ என்பதாகும். இதை மணி போன்று ஓர் கயிற்றிலோ அல்லது சங்கிலியினாலோ கட்டி தொங்க விடுவார்கள். இதில் விளக்கு கீழ் பக்கத்தில் இருக்கும். அந்த விளக்கின் மேற்புறத்தில் ஒரு கவிழ்த்துவைத்த கலசம்போல் காணப்படும். நுந்துதல் என்றால் தள்ளிவிடுதல் என்று பொருள். திரியைத் தள்ளி விடாமல் / நுந்தி விடாமல் இருப்பதால் நுந்தாவிளக்கு எனப்படுகிறது.

நெய் அல்லது எண்ணையில் எரியும் இவ்விளக்கின்  சிறப்பம்சம் என்னவெனில் மேற்பகுதியில் காணப்படும் குமிழ் போன்ற அமைப்பினுள் எண்ணையினை ஊற்றி மூடி விடுவார்கள். அளவாக எண்ணை அதன் கீழ் புறத்தில் கசிந்து கொண்டிருப்பதால் திரியில் ஏற்றப்படும் விளக்கு தூண்டாமல் எரியும் வகையில் இருப்பதாலும், மேலே மணி போன்ற அமைப்பு இருப்பதனாலும் இதற்கு தூண்டாமணி விளக்கு  பெயர் உண்டாயிற்று . 

விளக்கில் ஒரு சிறிய திரி இருக்கும். அந்தத் திரியை ஏற்றி வைத்திருப்பார்கள். அது எரிந்து கொண்டே இருக்கும். நாம் எண்ணெய் விடவோ, திரியைத் தூண்டவோ தேவை இல்லை. வெள்ளை பருத்தித் துணிகளை நீளம் அதிகமாகவும் அகலம் சிறியதாகவும் இருக்கும் வண்ணம் வெட்டி அதனை சுருட்டி திரி உபயோகிப்பார்கள். சிறு துவாரம் வழியாக ஒரே அளவில் எண்ணெய் வந்துகொண்டே இருக்கும். 

இதையும் படியுங்கள்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் அதிசயம்!
Nanda Vilakku

எப்போதும் சிறிதுசிறிதாக எண்ணெய் வரும்படி அதன் அடியில் மூடி திறந்து இருக்கும். அதனால் அது அதிகமாக வெளியேற வாய்ப்பு இல்லை. திரி மூலமாக வரும் எண்ணெய் காலியாகும் வரை தூண்டாமல் எரிந்து கொண்டே இருக்கும். ஒரு விளக்கில் முழுவதும் எண்ணெய் நிரப்பி விட்டு விளக்கினை ஏற்றினால் விடியும் வரை தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும் . விடிந்த பின்னரும் எரியும். விளக்கு கலசத்தின் அளவை பொறுத்து 12 மணி நேரம் முதல் 24 மணி நேரம் தொடர்ச்சியாக எரிவதால் இதை அணையா விளக்கு என்றும் கூறுவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com